Showing posts with label கைப்பேசி. Show all posts
Showing posts with label கைப்பேசி. Show all posts

Sunday, 13 January 2008

உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

சாதாரணமாக யாரும் நமக்கு எந்த கெடுதலோ விபத்தோ வரக்கூடாதென்றுதான் நினைப்பார்கள். சிலர் நமக்கெல்லாம் அப்படியெதுவும் நேர்ந்து விடாதென்றும் இருப்பார்கள். ஆனால் எதுவும் சொல்லிக் கொண்டு வருவதில்லையே.

“கால் மணி நேரம் முன் என்னிடம் நன்றாக பேசி விட்டுத்தான் போனார். அதற்குள்ளாக விபத்து என்று சொல்கிறார்கள்”,
“இரவு வீட்டுக்குப் போகுமுன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். விடிந்ததும. இறந்து விட்டதாக செய்தி வருகிறது”
என்றெல்லாம் எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நமக்கும் அது போல் நேரலாம் என்பதாக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.

இப்போது வெகு சாதாரணமாக கைப்பேசி பழக்கத்தில் வந்து விட்டது. வெளியில் நடமாடும் எல்லோரது கைகளிலும் சாதாரணமாக கைப்பேசி உபயோகத்தை காணமுடிகிறது.

விபத்து நடந்து விட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவரது கைப்பேசியில் கடைசியில் தொடர்பு கொண்ட எண்ணை (Last Dialed Number) அழைப்பது காவல் துறையினரிடம் சாதாரண பழக்கத்தில் உள்ளது. ஆனால் அது எப்போதும் உபயோகமாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும், பாதிக்கப்பட்டவரது இரத்த குரூப், ஒவ்வாமை தகவல்கள், நோய்கள் பற்றிய விபரம் அறிவதிலும் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டு மரணத்திலும் முடிவதுண்டு.

எனவே நமது கைப்பேசியில் அவரவர்கள் ‘ICE - In Case of Emergency’ என்று ஒரு பெயரை வைத்து, அதில் ஒன்று, இரண்டு என்று நம்மைப் பற்றிய விபரம் அறிந்தவர்கள், முக்கிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோரது எண்ணை குறிப்பிட்டு வைக்க வேண்டியது அவசியம்.
அது அவசர நேரத்தில் எல்லோருக்கும் மிக உதவியாக இருக்கும்.
தெரிந்திருந்தும் செய்யாமல் விட்டிருந்தால் உடனே ICE போடுங்கள்.

தேவையேற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்.
தேவையேற்பட்டால்….
பின்னர் வருத்தப்பட்டாலும் உபயோகமில்லாது போகும்.

Post Comment