எங்கள் நிறுவனத்தில் வங்கிக்கு ஒரு காசோலை 340000க்கு அனுப்பினோம். வங்கியோ எங்கள் கணக்கில் 390000 வரவு வைத்திருந்தார்கள். எங்கள் நிறுவன முதன்மை கணக்காளர் பாகிஸ்தானி. “எமது வங்கியில் கணக்கர்கள் அனைவரும் மதராஸிகள் அதுதான் தப்பாய் செய்து விட்டார்கள். நான் சொல்லப் போவதில்லை” என இருந்தது மட்டுமில்லாமல், என்னிடம் கிண்டல் வேறு. ஒரு நான்கு மாதம் கழிந்து காசோலை கொடுத்த நிறுவனம் என்னை அழைத்து தொகை கூடுதலாக பெறப்பட்டுள்ளது என அறிவித்ததுடன், தங்களது வங்கியிலும் புகார் கொடுக்க, அப்போதுதான் தெரிந்தது. தவறு ஏற்பட்ட இடம் ஹபீப் பேஙக். கணக்கர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள். எங்கள் முதன்மை கணக்காளர் முகம், பார்க்க வேண்டுமே.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சகோதரர் இங்குள்ள நகராட்சியில் அடிமட்ட தொழிலாளியாகச் சேர்ந்தார். அவர் எண்களைக் கையாளுவதைப் பார்த்து அரபி, ஒரு பகுதி அலுவலகத்தின் முழுப் பொறுப்பையுமே அளித்தார். படித்த மற்ற நாட்டவர்களுக்கே கடினமாயிருந்த அப்பணியை பத்தாவது வரை மட்டுமே படித்த அவர் சிரமமில்லாது செய்தார் என்பதுதான் ஆசசர்யம். நமது படிப்பு முறை அடிப்படையிலேயே அவ்வாறு அமைந்துள்ளதென சொல்வது சரியானதுதானா?

மற்றொரு சகோதரர் தங்க நகைகள் மொத்த வியாபார நிறுவனத்தில் ஓட்டுனராகச் சேர்ந்தார். தொலைபேசியில் வியாபாரம், நகைகளைப் பெற்றுக் கொள்ள தனியிடம் என்று இருந்தது. உரிமையாளர்களாகிய தந்தையும் இரு மகன்களும் இருக்கும் நிறுவனத்தில் அவர் இருக்க வேண்டும். தொலைபேசி பேரங்களில் புதிதாக கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்பதால் அவர் வரும்போதே பொழுது போக்குக்காக கதைப் புத்தகங்களையோ சஞ்சிகைகளையோ எடுத்து வந்து படித்துக் கொண்டிருப்பாராம். அதைப் பார்த்த உரிமையாளர் தந்தை, தன் மகனைப் பார்த்து "அந்த மதராஸி வெறும் ஓட்டுனர் 1500 சம்பளம் பெறுகிறான். தினமும் குளித்து அழகாக உடையுடுத்தி வருகிறான். நீங்கள் சரிவர தினமும் குளிப்பது கூட இல்லை. சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறான். அனதால்தான் மதராஸிகள் நல்ல அறிவாளிகளாய் இருக்கின்றனர்" என்றாராம். சொல்லிச் சிரித்தார் சகோதரர்.
நல்ல கதைகள் வாழ்க்கைப் பாடங்களாகின்றன. சஞ்சிகைகள் அரசியலையும் கலையையும் கலந்து தருகின்றன என்பதை அந்த பாகிஸ்தானி அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

