Showing posts with label மகள். Show all posts
Showing posts with label மகள். Show all posts

Monday, 30 June 2008

நண்பர்களே! தயவு செய்து ஹலோ சொல்லுங்கள்.

என்ன மக்களே. நலம்தானா?

திடீரென்று இந்தியா போக வாய்ப்பும் விடுமுறையும் கிடைத்தது. போய் விட்டு வந்தேன். அப்படியே நடக்கும் வீட்டு வேலைகளை கொஞ்சம் மேற்பார்வை பார்க்கவும் ஏதுவானது. துபை வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

Nokia N73 கையில் வைத்திருந்தேன். வீட்டுக்கென்று ஒரு சைனா மொபைல் வாங்கிப் போயிருந்தேன். 'அதெல்லாம் எங்களுக்கு சரியாகப் புரியல' என்று சொல்லி N73யை வைத்துக் கொண்டு சைனாவை என்னிடம் கொடுத்தனுப்பி விட்டது புத்திசாலி தங்கமணி. அதிலிருந்த தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டேன். எல்லா எண்களையும் மாற்றவில்லை என்பது உபயோகிக்கும் போதுதான் தெரிகிறது. மகளுக்கு பேசி 'எல்லா எண்களையும் கொடு' என்றால் 'நீங்கதான் மாற்றிக் கொண்டீர்களே என்று அப்போதே அழித்து விட்டேன்' என்கிறாள் புத்திசாலி மகள். சாத்தான்குளத்தார் தவிர மற்ற எந்த நண்பரின் எண்ணும் என்னிடமில்லை.

அதனால் நண்பர்களே. தயவு செய்து நீங்களாக ஹலோ சொல்லுங்கள். ப்ளீஸ்.

1. ஊரில் முக்கியமான செய்தி என்னவென்றால் மின்சாரத் தட்டுப்பாடு. காலையில் மின்சாரம் போனால் சில சமயம் இரவு பதினொன்றுக்கெல்லாம் திரும்பி விடும். வியர்வைக் குளியல் நடத்த நல்ல ஏற்பாடு.

2. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காற்றாட ஆற்றில் நடக்கும்போது
''சீ! இங்கதான் உட்கார்ந்து படிப்பீங்களா?.
ஆனா அமைதியா இருக்கும்.
பாம்பு எல்லாம் வராதா?'' என்று கேட்டது வாண்டு.

அந்த மரமும், மட்டைகளும், படிக்கட்டும், வாய்க்கால் சுவரும், நாணலும், ஆற்று மணல்களும்,

''அட. என்ன தம்பீ! எத்தனை வருடமாச்சு!.
சின்ன பிள்ளையாக இருக்கும்போது தினமும் படிக்க வருவாயே! படித்த இடமென்று ஞாபகம் இருக்கிறதா?.
வா! வந்து உட்கார்!!''
என்று அழைப்பது போல் இருந்தது.

கண்களில் கண்ணீர் வந்து விட்டால், பிள்ளைகள் ஏதும் கேட்குமே! என்று முயன்று அடக்கிக் கொண்டேன்.

3. அப்படியே பக்கத்து கிராமத்துக்கும் காலார அழைத்துப் போனேன்.
பெரிய பெரிய டயரை இப்படி வெட்டிப்போட்டு (side)சைடுல கட்டி வைத்து இருக்கே. அது என்ன என்று கேட்டார் பையன்.
அது பன்றிகளுக்கான 'கொடலை' அதாவது 'உணவிடும் ஏற்பாட்டுக்கு' என்று சொன்னேன்.
'சே' என்றது பெண்.
''இதுக்கு எதுக்கம்மா 'சே'. அவர்கள் அதை அன்பாய் வளர்க்கிறார்கள்'' என்றேன்.
''ஓ அதளால்தான் அது அவ்வளவு அழுக்கா இருந்தாலும் அதற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டியில பால் கொடுக்கிறாங்களா'' என்றது அடுத்த பெண்.
''சே. அது பால் இல்லம்மா. கழனித்தண்ணி'' என்றேன்.
''அப்படீன்னா'' என்றதற்கு விளக்கம் சொன்னேன்.
“அதுக்கு எதுக்கு 'சே' என்கிறீர்கள்” என்கிறாள். சரியான வாய்.

4. உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு தங்கமணி போயிருந்த போது வந்தவர்களுக்கெல்லாம் இரண்டு புத்தகம் கொடுத்தார்களாம். “நம்மூரில் கூட இப்படி நடக்கிறதே?” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே தங்கமணி கையிலிருந்த புத்தகத்தை வாங்கினேன். ‘நான் படித்து சொல்றேன்’ என்று வரிசையாக பொருளடக்கம் படித்துச் சொன்னாள் சின்ன பெண். 9 வயது.
“ஏம்மா! ‘வட்டி’ என்று படித்தாயே அப்படின்னா என்னம்மா?” என்று கேட்டேன்.
“Interest - எனக்கு தெரியும் டாடி” என்றாள்.
“ஆங்கிலத்தில் எப்படிச் சொல்றதுன்னா கேட்டேன்?” என்றேன்.
“கொடுத்த பொருளை அல்லது பணத்தை அதே அளவில் திரும்பப் பெற்றால் அது கடன் - அனுமதியுள்ளது.
கொடுத்ததை விட கூடுதலாக கேட்டுப் பெற்றால் அதுதான் வட்டி – அனுமதியில்லை” என்று அழகாய் விவரித்தாள்.
அட என்ன அழகா சொல்லுது - உண்மையிலேயே புத்திசாலி குழந்தைதான்.

5. ஊருக்கு போகு முன் கம்பெனி புதிய கார் கொடுத்திருந்தது. ஒரு மாதம் ஓட்டி விட்டு சர்வீஸ் செய்து வைக்கச் சொல்லி விட்டு ஊருக்குப் போயிருந்தேன்.

என்னுடைய காரை சர்வீசுக்கு விடாமல், நான் விடுமுறையில் இருந்த ஒரு மாதமாக ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தெரிந்து, அலுவலகத்தில் நான் கோபப்பட்டதால், அவசரமாக சர்வீஸ் செண்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தார்கள். சர்வீஸ் செண்டரிலிருந்து உடனே விடச் சொல்லி மதியம் அழைப்பு வந்தது.

நேராக NISSAN சர்வீஸ் செண்டர் போய் 'அழைப்பு வந்தது. வண்டியை சர்வீசுக்கு விட வேண்டும்' என்று சொல்லி Registration Card கொடுத்தேன். அங்கிருந்த மலையாளி ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தான்.
"என்ன ஆனது. என் வார்த்தைகள் விளங்கவில்லையா" என்று கேட்டேன்.
"நான் இந்த இடத்திற்கு புதுசு. எனக்கு உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் எண், என் சிஸ்டத்திலிருந்து கிடைக்க மாட்டேங்கிறது” என்றான்
“புதிதென்றால், தெரிந்த ஆளிடம் கொடு” என்றேன்.
அவன் பக்கத்துசீட்டு நண்பரிடம் கொடுத்தான். அவனே அவரிடம் விளக்கினான்.
“காரில் இலேசாக சிராய்ப்புகள் இருக்கிறது. பெயிண்ட்டும் செய்து விடுங்கள்” என்றேன்.
அவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு “உங்களை அழைத்தது ஆணா பெண்ணா” என்றார்.
“ஆண்தான். இந்த எண்ணிலிருந்து” என்று எண்ணையும் சொன்னேன்.
அவர் கார்டை ரிஸப்சனுக்கு அனுப்பி பார்க்கச் சொன்னார். அங்கிருந்தும் திரும்பி அவரிடமே வந்தது.
“தயவு செய்து கார்டை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி கார்டை வாங்கினேன்.
'இல்லை சார். கொஞ்சம் பொருங்க!. இப்ப பார்த்திடலாம்' என்றார்.
நான் வேகமாக வெளியில வந்திட்டேன்.

சே!. இதற்கு முன் வைத்திருந்ததுதான் NISSAN கார். இப்போதுள்ள புதிய கார் TOYOTA அல்லவா?.
நல்ல வேளை. அவர்கள் கார்டை சரியாகப் பார்த்து சொல்வதற்குள் வெளியேறி விட்டேன் - உண்மையிலேயே வயதாகி விட்டதோ!

Post Comment

Thursday, 7 February 2008

எது பெண்ணியம் - மகளுக்கும் சகோதரிகளுக்கும்.



ஒரு ஆண் செய்யும் அசிங்கத்தையும் அருவருப்பானதையும் கேவலமானதையும் பார்த்து அதைப் போல ஒரு பெண் செய்தாலென்ன என நினைப்பதுதான் பெண்ணியமா?

கேவலமானவற்றை செய்யும் ஆணோடு போட்டியிட்டு அதைப் போல அல்லது அதை விட கீழ்த்தரமாக செய்து காண்பிப்பதுதான் பெண்ணியமா?

ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை சிறிதாக்கிக் கொள்வது, மேற்கத்திய நாகரிகம் செல்லும் திக்கை நோக்கியே பயணிப்பது, இதுதான் பெண்ணியம் என சில பெண்கள் சூடு வைத்துக் கொள்கின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் இரும்புச் சங்கிலிகளை அறுத்து வந்த பெருமை பெற்ற பெண்களை சிறிது யோசியுங்கள். அவர்கள் இம்முறையில் கீழ்த்தரமானதை செய்ததாலா பெருமை பெற்றனர்? மனித குலத்தை உயர்த்தும் செயலிற்சிறந்த ஆண்களோடு போட்டியிட்டு அவர்களைப் போல அல்லது அதை விடவும் சிறப்பாக செயலாற்றிக் காண்பித்ததாலேயே பெண் குலத்துக்கு பெருமை சேர்த்தனர்.

பழங்காலத்தைப் போல் இன்று பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக ஆண்கள் இல்லை என்னுமளவுக்கு ஆண்கள் மாறியுள்ளனர். அது மட்டுமின்றி பெண் வளர்ச்சிக்காகவும் விடுதலைக்காகவும் சமீப கால இந்தியாவில் பாடுபட்டவர்களில் பெரும்பாலோர் இராஜா ராம் மோகன்ராய், தந்தை பெரியார், திரு.வி.க., பாரதி, பாரதிதாசன் போன்ற ஆண்கள்தான்.

முதலில் திறந்து விடப்பட்டுள்ள வழிகளில் பயணம் செய்ய பெண்கள் தயாராக வேண்டும். ஓட்டுரிமை மறுக்கப்பட்ட காலம் போய் இன்று 33 விழுக்காடு இட ஓதுக்கீடு இலக்கை பெற முயற்சித்துப் பெருங்கள். நாளை இது 50 விழுக்காடு நோக்கிய பயணமாயிருக்கட்டும்.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். பெண்களால் இயலாது எனப்பட்ட காவல் துறை, இராணுவம் ஏன் விண்வெளி வரை பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற பெரும் பழியை வரதட்சனை, மருமகள் கொடுமை போன்றவற்றால் இன்னும் பெண்கள் சுமக்கிறார்கள். இவற்றையெல்லாம் உடைத்து வெளி வருவதில்தான் பெண் முழு விடுதலை நோக்கி வருவாள்.

மிகக் கேவலமான கற்பப்பை சுதந்திரம், நினைத்ததை எல்லாம் செய்யும் கட்டுப்பாடற்ற சுதந்திரம், முடிவெடுக்கும் அதிகாரம் இவை கிடைத்து விடுதல்தான் பெண் விடுதலை என சில பெண்கள் பிதற்றித் திரிகின்றனர்.

இல்லை. பெண் விடுதலை என்பது சுயத்தை இழக்காமல், அதாவது பெண்களுக்குரிய தனித்தன்மைகளை இழக்காமல் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்வதே ஆகும்.

தாய்மைப்பேறு, தாய்ப்பால் கொடுத்தல், ஒரே ஆணோடு வாழ்தல் இவையனைத்தும் பெண்களுககே உரிய தனித்தன்மைகள். இவற்றை விட்டு விலகுவது காலப்போக்கில் பண்பாட்டுச் சீரழிவை விதைத்து, உயரிய கலாச்சாரத்தைக் கெடுத்து, பெண்களுக்கே எதிரான விளைவுகளைத்தான் தரும்.

ஆண்களோடு உடல் வலுவில் பெண்கள் போட்டியிட முடியாது போலவே பெண்ணின் இத்தகு தனித்தன்மைகளில் ஆண்களும் போட்டியிடவே முடியாது. இதுதான் இயற்கை நியதி.

பெண்ணிணமற்ற ஆணிணமும், ஆணிணமற்ற பெண்ணிணமும் உலகில் நிலைக்குமா? சேர்ந்திருந்தால்தானே நிலைக்கும்.

என் மகளே! சகோதரிகளே! எது உண்மையான விடுதலையோ அதை நோக்கிய பயணத்தை செலுத்துங்கள். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் சில நியதிகளை கடைபிடித்துக் கொண்டே உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி வெற்றி பெருங்கள். அப்போதுதான் உங்களோடு இந்த சமுதாயமும் உயரும்.

Post Comment

Saturday, 24 March 2007

கடவுளின் வரம் - அம்மா

அவனது தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஆறு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வாழ்க்கையின் துயரங்களை தனியாளாய் எதிர்கொண்ட நெஞ்சுரம் மிகுந்த அவனது தாயார் பற்பல இன்னல்களுக்கிடையே அவர்களை ஆளாக்கினார். அவன் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பெறும் அதிக பரிசுகளைக் கண்டு மிகுந்த ஆனந்தமடைவார். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சிதான் அவரது வாழ்வின் ஆனந்தமே என்றிருந்தார்.

அப்போது அவன் சிறிய பையன். எட்டாவது தேர்வுக்குப் பின் கோடை விடுமுறையில் வீட்டிலிருந்தான். 'இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றி ஒரு வரம் மட்டும் கேட்கலாம் என்ற வாய்ப்பளித்தால் என்ன வரம் கேட்பீர்கள்' என்று வானொலி அல்லது ஏதோ கதைப் புத்தகத்தின் தொடர்ச்சியாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவன் தாய், தமையன், தமக்கை ஆளுக்கொன்று சொன்னார்கள். 'உனக்கென்னடா வேணும்' என்று அம்மா கேட்டார்கள்.

அவன்
'எனது கொள்ளுப்பேரன், தங்கத்தட்டில் தயிர் சாதம் சாப்பிடும் அழகை, நானும் என் தாயாரும், என் வீட்டு பதினைந்தாவது மாடியிலிருந்து, வெறும் கண்ணால் கண்டு இன்புற வேண்டும்' என்றான்.

'என்னடாது பைத்தியம் மாதிரி உளர்றே' அவனது தமையன்
'ஏதாச்சும் இப்படித்தான் சொல்வான்' தமக்கை

1. எனது பேரனுக்கு பேரன் பிறக்கும் வரை நானும் தாயாரும் இருக்க - மிக நீண்ட ஆயுள் வேண்டும்
2. தங்கத்தட்டில் சாப்பிடுமளவுக்கு வசதி நிறைந்திருக்க வேண்டும். (தங்கத் தட்டில் சாப்பிடக்கூடாதென்பதெல்லாம் அவனுக்கு அப்போது தெரியாது)
3. தயிர்சாதம் சாப்பிட பால் வளங்களில் குறைவிருக்கக்கூடாது. (அப்போதெல்லாம் விற்றுத் தீராமல், வீட்டில், தேவையை விட கூடுதலாக பால் இருந்தால்தான் அம்மா தயிர் செய்வார்கள். தயிராகவே கடையில் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது.)
4. என் வீட்டுப் பதினைந்தாவுது மாடியிலிருந்து வெறும் கண்ணால் கண்டு இன்புற -
(அ) 15 மாடிகளுள்ள வீடு சொந்தமாக இருக்குமளவுக்கு செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டும். (பல மாடிக் கட்டிடத்தில் 15வது மாடியில் ஒரு ப்ளாட் மட்டும் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது)
(ஆ) 15வது மாடி வரை ஏறி இறங்குமளவுக்கு எங்களிருவருக்கும் உடல் பலம் இருக்க வேண்டும். (கிராமத்தில் இருந்ததால் லிப்ட் என்ற சாதனத்தைப்பற்றிய அறிவெல்லாம் 1976களில் இல்லை)
(இ) வெறும் கண்ணால் பார்த்தாலே தெரியுமளவுக்கு கண் பார்வை கூர்மையாயிருக்க வேண்டும்.
(ஈ) குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. இருந்தால் இன்புற முடியாதே

என்று அவன் விளக்கினான்.

அவன் தந்தை மறைவின் நான்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பின் அன்றுதான் அவன் தாயாரின் முகத்தில் அத்தகையதொரு மகிழ்ச்சிப் பொலிவைப் பார்த்தான். வாழ்வுச் சுமைகளின் அழுத்தத்தில் சோர்ந்து, ஏமாற்றத்தின் வலிகள் மட்டுமே வரிகளாய் ஓடிய அம்மாவின் முகத்தில், நன்னம்பிக்கையின் ஒளிக்கீற்று படர்வதைப் பார்த்து பரவசம் அடைந்தான் அவன்.

அவன் தலையை வருடியவாறே தாய் சொன்னாள் 'உனக்கு ஆசையே இல்லடா தம்பி!'

இப்போது அவன் மகள் அதைச் செய்தியாக கேட்டபோது சொன்னது
'டாடீ! உங்களுக்கு ஆசையே இல்லை டாடீ!'.

Post Comment