ஒரு தம்பதியினரது 25 வருட வாழ்க்கையில் ஒரு முறை கூட இருவருக்கிடையில் சண்டையே வந்ததில்லை. அந்த ஊரிலேயே எல்லோராலும் பேசப்படுகிற ஆதர்ஸ தம்பதியினராய் இருந்தனர்.
அவர்களின் திருமண நாள் விழாவின் போது, உள்ளுர் பத்திரிக்கையாளர், "உங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் ரகசியமென்ன?" என்று கணவரிடம் கேட்டார்
அந்தக் கணவர் அவர்களது தேனிலவு நாளில் நடந்த நிகழ்ச்சியொன்றை அவருக்காக நினைவு கூர்ந்தார்
"நாங்கள் இருவரும் தேனிலவுக்காக சிம்லா போயிருந்தோம். அங்கிருக்கின்ற எந்த விளையாட்டை முதலில் தேர்ந்தெடுப்பது எனக் குழம்பி, கடைசியில் குதிரையேற்றத்திலிருந்து தொடங்குவது என்று முடிவெடுத்தோம்.
நான் ஒரு குதிரையிலும் என் மனைவி ஒரு குதிரையிலும் ஏறிக்கொண்டோம். எனக்கு கிடைத்தது நல்ல குதிரை. எந்த பிரச்னையும் தராமல் நல்லபடியாய் சென்றது.
ஆனால் என் மனைவிக்கு கிடைத்த குதிரை கொஞ்சம் சண்டித்தனம் செய்தது. ஒரு முறை திடீரென்று குதிரை குதித்ததில் என் மனைவி கீழே விழுந்து விட்டாள். என் மனைவியோ கொஞ்சம் கூட வருத்தப்படாமல், அதன் முதுகில் தட்டிக் கொடுத்து, 'முதல் தடவை. பரவாயில்லை' என்று குதிரையிடம் சொல்லி விட்டு திரும்ப ஏறி அமர்ந்து கொண்டாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் குதிரை குதித்து, என் மனைவியை கீழே தள்ளி விட்டது. என் மனைவியோ கொஞ்சம் கூட சினமில்லாமல், திரும்ப குதிரையிடம் வந்து 'இது உனக்கு இரண்டாம் தடவை' என்று சொல்லி விட்டு திரும்பவும் குதிரையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
சிறிது தூரம் சென்று மூன்றாவது தடவையாக குதிரை குதித்து, என் மனைவி கீழே விழுந்ததும், அமைதியாக தன் கைப்பையைத் திறந்து தன் துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றே விட்டாள்.
வந்த இடத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் நான் விழி பிதுங்கி, 'என்ன காரியம் செய்து விட்டாய்! ஒரு வாயில்லா ஜீவனை இப்படிக் கொன்று விட்டாயே! உனக்கென்ன பைத்தியமா?' என்று கோபமாகக் கத்தினேன்.
என் மனைவியோ கொஞ்சம் கூட கவலைப்படாமல், 'முதல் தடவைதானே. பரவாயில்லை' என்று அமைதியாக என்னிடம் கூறினாள்.
அவ்வளவுதான். அதற்கப்புறம் எங்கள் வாழ்வில் சிறு வாய்த்தகராறு கூட வந்ததில்லை."
(தலைப்பில் 'திருமதி' என்ற வார்த்தை மூன்று பேர் பெயருக்கும் முன்னால் சேர்க்க மறந்து விட்டது. அதனால் அந்தப் பெயர்களுக்கு முன்னால் 'திருமதி' என்ற வார்த்தையை சேர்த்து படிக்கக் கோருகிறேன்)







