Monday, 30 June 2008

நண்பர்களே! தயவு செய்து ஹலோ சொல்லுங்கள்.

என்ன மக்களே. நலம்தானா?

திடீரென்று இந்தியா போக வாய்ப்பும் விடுமுறையும் கிடைத்தது. போய் விட்டு வந்தேன். அப்படியே நடக்கும் வீட்டு வேலைகளை கொஞ்சம் மேற்பார்வை பார்க்கவும் ஏதுவானது. துபை வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

Nokia N73 கையில் வைத்திருந்தேன். வீட்டுக்கென்று ஒரு சைனா மொபைல் வாங்கிப் போயிருந்தேன். 'அதெல்லாம் எங்களுக்கு சரியாகப் புரியல' என்று சொல்லி N73யை வைத்துக் கொண்டு சைனாவை என்னிடம் கொடுத்தனுப்பி விட்டது புத்திசாலி தங்கமணி. அதிலிருந்த தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டேன். எல்லா எண்களையும் மாற்றவில்லை என்பது உபயோகிக்கும் போதுதான் தெரிகிறது. மகளுக்கு பேசி 'எல்லா எண்களையும் கொடு' என்றால் 'நீங்கதான் மாற்றிக் கொண்டீர்களே என்று அப்போதே அழித்து விட்டேன்' என்கிறாள் புத்திசாலி மகள். சாத்தான்குளத்தார் தவிர மற்ற எந்த நண்பரின் எண்ணும் என்னிடமில்லை.

அதனால் நண்பர்களே. தயவு செய்து நீங்களாக ஹலோ சொல்லுங்கள். ப்ளீஸ்.

1. ஊரில் முக்கியமான செய்தி என்னவென்றால் மின்சாரத் தட்டுப்பாடு. காலையில் மின்சாரம் போனால் சில சமயம் இரவு பதினொன்றுக்கெல்லாம் திரும்பி விடும். வியர்வைக் குளியல் நடத்த நல்ல ஏற்பாடு.

2. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காற்றாட ஆற்றில் நடக்கும்போது
''சீ! இங்கதான் உட்கார்ந்து படிப்பீங்களா?.
ஆனா அமைதியா இருக்கும்.
பாம்பு எல்லாம் வராதா?'' என்று கேட்டது வாண்டு.

அந்த மரமும், மட்டைகளும், படிக்கட்டும், வாய்க்கால் சுவரும், நாணலும், ஆற்று மணல்களும்,

''அட. என்ன தம்பீ! எத்தனை வருடமாச்சு!.
சின்ன பிள்ளையாக இருக்கும்போது தினமும் படிக்க வருவாயே! படித்த இடமென்று ஞாபகம் இருக்கிறதா?.
வா! வந்து உட்கார்!!''
என்று அழைப்பது போல் இருந்தது.

கண்களில் கண்ணீர் வந்து விட்டால், பிள்ளைகள் ஏதும் கேட்குமே! என்று முயன்று அடக்கிக் கொண்டேன்.

3. அப்படியே பக்கத்து கிராமத்துக்கும் காலார அழைத்துப் போனேன்.
பெரிய பெரிய டயரை இப்படி வெட்டிப்போட்டு (side)சைடுல கட்டி வைத்து இருக்கே. அது என்ன என்று கேட்டார் பையன்.
அது பன்றிகளுக்கான 'கொடலை' அதாவது 'உணவிடும் ஏற்பாட்டுக்கு' என்று சொன்னேன்.
'சே' என்றது பெண்.
''இதுக்கு எதுக்கம்மா 'சே'. அவர்கள் அதை அன்பாய் வளர்க்கிறார்கள்'' என்றேன்.
''ஓ அதளால்தான் அது அவ்வளவு அழுக்கா இருந்தாலும் அதற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டியில பால் கொடுக்கிறாங்களா'' என்றது அடுத்த பெண்.
''சே. அது பால் இல்லம்மா. கழனித்தண்ணி'' என்றேன்.
''அப்படீன்னா'' என்றதற்கு விளக்கம் சொன்னேன்.
“அதுக்கு எதுக்கு 'சே' என்கிறீர்கள்” என்கிறாள். சரியான வாய்.

4. உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு தங்கமணி போயிருந்த போது வந்தவர்களுக்கெல்லாம் இரண்டு புத்தகம் கொடுத்தார்களாம். “நம்மூரில் கூட இப்படி நடக்கிறதே?” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே தங்கமணி கையிலிருந்த புத்தகத்தை வாங்கினேன். ‘நான் படித்து சொல்றேன்’ என்று வரிசையாக பொருளடக்கம் படித்துச் சொன்னாள் சின்ன பெண். 9 வயது.
“ஏம்மா! ‘வட்டி’ என்று படித்தாயே அப்படின்னா என்னம்மா?” என்று கேட்டேன்.
“Interest - எனக்கு தெரியும் டாடி” என்றாள்.
“ஆங்கிலத்தில் எப்படிச் சொல்றதுன்னா கேட்டேன்?” என்றேன்.
“கொடுத்த பொருளை அல்லது பணத்தை அதே அளவில் திரும்பப் பெற்றால் அது கடன் - அனுமதியுள்ளது.
கொடுத்ததை விட கூடுதலாக கேட்டுப் பெற்றால் அதுதான் வட்டி – அனுமதியில்லை” என்று அழகாய் விவரித்தாள்.
அட என்ன அழகா சொல்லுது - உண்மையிலேயே புத்திசாலி குழந்தைதான்.

5. ஊருக்கு போகு முன் கம்பெனி புதிய கார் கொடுத்திருந்தது. ஒரு மாதம் ஓட்டி விட்டு சர்வீஸ் செய்து வைக்கச் சொல்லி விட்டு ஊருக்குப் போயிருந்தேன்.

என்னுடைய காரை சர்வீசுக்கு விடாமல், நான் விடுமுறையில் இருந்த ஒரு மாதமாக ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தெரிந்து, அலுவலகத்தில் நான் கோபப்பட்டதால், அவசரமாக சர்வீஸ் செண்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தார்கள். சர்வீஸ் செண்டரிலிருந்து உடனே விடச் சொல்லி மதியம் அழைப்பு வந்தது.

நேராக NISSAN சர்வீஸ் செண்டர் போய் 'அழைப்பு வந்தது. வண்டியை சர்வீசுக்கு விட வேண்டும்' என்று சொல்லி Registration Card கொடுத்தேன். அங்கிருந்த மலையாளி ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தான்.
"என்ன ஆனது. என் வார்த்தைகள் விளங்கவில்லையா" என்று கேட்டேன்.
"நான் இந்த இடத்திற்கு புதுசு. எனக்கு உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் எண், என் சிஸ்டத்திலிருந்து கிடைக்க மாட்டேங்கிறது” என்றான்
“புதிதென்றால், தெரிந்த ஆளிடம் கொடு” என்றேன்.
அவன் பக்கத்துசீட்டு நண்பரிடம் கொடுத்தான். அவனே அவரிடம் விளக்கினான்.
“காரில் இலேசாக சிராய்ப்புகள் இருக்கிறது. பெயிண்ட்டும் செய்து விடுங்கள்” என்றேன்.
அவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு “உங்களை அழைத்தது ஆணா பெண்ணா” என்றார்.
“ஆண்தான். இந்த எண்ணிலிருந்து” என்று எண்ணையும் சொன்னேன்.
அவர் கார்டை ரிஸப்சனுக்கு அனுப்பி பார்க்கச் சொன்னார். அங்கிருந்தும் திரும்பி அவரிடமே வந்தது.
“தயவு செய்து கார்டை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி கார்டை வாங்கினேன்.
'இல்லை சார். கொஞ்சம் பொருங்க!. இப்ப பார்த்திடலாம்' என்றார்.
நான் வேகமாக வெளியில வந்திட்டேன்.

சே!. இதற்கு முன் வைத்திருந்ததுதான் NISSAN கார். இப்போதுள்ள புதிய கார் TOYOTA அல்லவா?.
நல்ல வேளை. அவர்கள் கார்டை சரியாகப் பார்த்து சொல்வதற்குள் வெளியேறி விட்டேன் - உண்மையிலேயே வயதாகி விட்டதோ!

Post Comment

Wednesday, 7 May 2008

சாப்பிட வாங்க? + விளம்பரம்

சும்மா சிரிக்க மட்டும்



Post Comment

Monday, 5 May 2008

துபை வாழ்வும் அன்றாட செலவுகளும்

அறிவிப்பு:
[ஏதோ கோல்மால் நடந்திருக்கு. கிறிஸ்துநேசன் மாதிரி அவதூறு ஆட்களை சில சமயங்களில் படிப்பதோடு சரி. அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்க நினைப்பவன். எதிர் வினை ஆற்றினாலும் மற்ற மதங்களை குறை சொல்வதை விடுத்து என் மார்க்கத்திலுள்ள நன்மைகளைச் சொல்வதையே விரும்புபவன். இரண்டு இடுகையையும் நேற்று படித்தேன்.ஆனால் எப்படி என் பதிவில் வந்ததென அறியவில்லை. அறிந்த உடனே கிறித்துவ நம்பிக்கை பற்றி என் பதிவில் வந்த தவறான இடுகையை அழித்து விட்டேன். நாய் கடித்தால் நாயைத் திரும்பவும் கடிப்பது நல்ல மனிதப் பண்பாகாது என்று நம்புபவன் நான். - நலம் விரும்பிகளும் நண்பர்களும் பொறுத்தருள்க - என் பதிவில் வந்த தவறான இடுகைக்கு வருந்துகிறேன்..என் பாஸ்வேர்ட் மாற்றி விட்டேன்.]



குசும்பன் குசும்பில்லாமல் எழுதிய UAE வருமுன் கவனிக்க வேண்டியவைக்கு பிற்சேர்க்கையாக இதை சேர்க்கலாம். அல்லது தற்போதைய நிலைக்கு ஒரு அப்டேட் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அஹ்லன் மின் துபை!... துபைக்கு வருக! வருக!!
நிறைய இந்தியர்கள் தங்கள் கனவு நனவாக துபை போகும் அடுத்த விமான நம்பிக்கையில்....
இங்கு வந்த பின் வாழ்க்கை அதிர்ச்சியாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதை அறிவிக்கவே இவ்விடுகை.

பொதுவாக நம் இளைஞர்கள் குறைந்த கால அளவுக்குள் நிறைய பொருள் தேடி விட விரும்புகின்றனர். பெயர் பெற்ற அல்லது அதல்லாத எந்த ஒரு நாட்டிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்தாலும் அதன் நன்மை தீமை பற்றி யோசிக்காமலேயே இந்தியாவை விட்டும் வெளியேறத் துணிகின்றனர். UAE வர விரும்புபவர்களே!. நீங்கள் கொஞ்சம் நிதானித்து, வருவதற்காக முடிவெடுக்கும் முன்னரே, இங்கே குறிப்பிடப்படுவனவற்றை சீர் தூக்கிப் பாரப்பது நல்லது.

முதன் முதலாக - உங்கள் துபை சம்பளத்தை உடனே 11ஆல் பெருக்கி இந்தியப் பணமாக கணக்கிடும் தவறை முதலில் நிறுத்துங்கள். பணமாற்றம் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.மொத்த வருமானத்திலிருந்தல்ல.

நீங்கள் திருமணமானவராயிருந்தால் அமீரகத்தில் குறிப்பாக துபையில் உங்கள் குடும்பம் தங்க எவ்வளவு செலவாகும் எனப் பாருங்கள்.

துபை நகரத்தில் எங்காவது ஒரு அறை, சிறு கூடம் (சிறு ஹால்), சமையலறை உள்ள ஒரு சாதாரண 1BHK வீட்டுக்கு வாடகை குறைந்தது 5000 திர்ஹம் ஒரு மாதத்துக்கு (ஒரு வருடத்துக்கல்ல) அவசியம். இந்த வாடகை வருடத்துக்கு குறைந்தது 15 முதல் 25 சதவீதம் வரை உயரும். உங்கள் சம்பள உயர்வு இதில் பாதி சதவீதம் கூட உயராதென்பதை அறியவும்.

நீங்கள் கொஞ்சம் விபரமான ஆளென்ற நினைப்பில் துபைக்கு வெளியில் (சார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன் ஆகிய அமீரகங்களில்) தங்கினால் மாதம் 500 முதல் 750 திர்ஹம் வரை சேமிக்க முடியும். ஆனால் அதற்காக அலுவலகம் சென்று வர பயணத்துக்காக நீங்கள் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும். சார்ஜாவிலிருந்து துபை வரை - பொதக்குடியானைப் பாருங்கள் (இலட்சக்கணக்கில் குடியேற்றங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகிரிப்பதால் வாகன நெரிசல் இன்னும் கூடுமே ஒழிய குறையாது). அதாவது வேலை நேரமாகிய 10 மணி நேரமானது 14 முதல் 15 மணி நேரமாகும். துபையில் குடும்பமிருந்தால் குதுர்கலம் என்ற நினைப்பிருக்கும்.

உங்கள் கம்பெனி ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இல்லாததாக இருந்தால் (நிறைய கம்பெனிகள் இது போல் இருக்கிறது) சாதாரண மெடிக்கல் செக்கப்புக்கு 100 திர்ஹம் அழ வேண்டும். உடல் நலக்கேடு வராமலிருந்தால் நல்லது. வந்து விட்டால் அதற்காக மாதாமாதம் ஒரு பெருந்தொகையை இழக்க நீங்கள் தயாராக வேண்டி வரும்.

இந்தியாவின் வடநாட்டில் உள்ளது போன்ற வெப்பத்தை அறியாதவராக, பழக்கப்படாதவராக இருந்தால்.... அறிந்து கொள்ளுங்கள். கோடை நாட்களில் மதிய வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் - கோடையில் இங்கு இது சாதாரணம். சொல்லாமல் விடக்கூடாத முக்கியம் (Humidity)ஈரப்பதம் 95 சதவீதம்!.

குழந்தையில்லாதவராக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர். 2 அல்லது 3 பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்காக வருடத்துக்கு 12000 திர்ஹம் செலவுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

இங்கு பெட்ரோல் விலை குறைவு அதனால் கார் வாடகையும் குறைவாக வரும் என நினைத்திருப்பீர்கள். விமான தளத்தில் இருந்து உங்கள் ஹோட்டலுக்கு செல்ல ஒரு வாடகை வண்டி எடுத்து அதில் அமர்ந்து உங்களை நீங்கள் சரிப்படுத்திக் கொள்வதற்குள் வாடகை முள் 75 முதல் 100 திர்ஹத்தைத் தொட்டு விடும்.

உலகத்தின் விலையுயர்நத கார்கள் எல்லாம் இங்கு கிடைக்கும். ஆனால் அதை பார்க்கிங் செய்ய தினம் ஒரு இடத்தை பிடிப்பதற்குள் கார் வாங்கும் எண்ணமே பறந்து விடும். கார் பார்க்கிங் செய்ய ஒரு மணி நேரம் சுற்றிச்சுற்றி வந்தால் இடம் கிடைக்கலாம் ஆனால் ஒரு மணி நேரத்துக்கு 2 திர்ஹம் இரண்டு மணி நேரத்துக்கு 5 திர்ஹம் கொடுத்து டிக்கட் எடுக்கவும். காரில் டிக்கட் வைக்காமல் விடுபட்டு விட்டால் தண்டம் அழ வேண்டும். 100 திர்ஹம் என்று எழுதி 110 திர்ஹம் வாங்குவார்கள். அத்துடன் முக்கிய வீதிகளுக்கு சுங்கத்தீர்வை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பெறும்.

கடைசியாக (இப்போதைக்கு)
ஊரில் உள்ள உங்கள் சொந்தங்களுக்கு தொலைபேச மூன்று மடங்கு பணம் செலவாகும். அமீரகத்திலிருந்து இந்தியாவுக்குப் பேச ஒரு நிமிடத்துக்கு சுமார் 30 இந்திய ரூபாய்கள் தேவை. ஆனால் இந்தியாவிலிருந்து அமீரகத்துக்குப் பேச 8 ரூபாய்கள்தான். இது துபையில் உங்களுக்கு என்னென்ன காத்திருக்கிறது என்பதற்கு சிறு விளக்கமாக இருக்கும். Skype உபயோகிக்கலாம் என நினைக்காதீர்கள். அது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி உபயோகிப்பது சட்ட விரோதமானது. ஆர்குட் கூட இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

புதிது புதிதாக உருவாக்கப்படும் ஷாப்பிங் மால்கள், மாறிக் கொண்டே வரும் வானுயர கட்டிடங்கள், துபையை பற்றி ஆங்காங்கே கேட்கும் வார்த்தைகள், விளம்பரங்கள், ஒவ்வொரு வியாழன் இரவிலும் படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள், அழகழகான கார்கள், அணிவகுக்கும் காபிக்கடைகள், புர்ஜ் துபை, புர்ஜ் அல் அரப், துபை மரீனா போன்றவை உங்களை வசீகரித்திருக்கிறதென்றால்....... கொஞ்சம் யோசியுங்கள். (உங்களின் வாழ்க்கையை இங்கே துபையில் தொலைத்து விட்டு நீங்கள் ஊருக்குப் போகும்போது என்ன கொண்டு போகப் போகிறீர்கள் என்பதை யோசியுங்கள்.) நீங்கள் எத்தனை வருடங்கள் இந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் வெளிநாட்டான்தான், அமீரக பாஸ்போர்ட் கிடைக்காது. ஒரு வீடு கூட இங்கு சொந்தமாக இருக்காது.

நம்புங்கள் - என் இல்லமே எனது மகிழ்ச்சி.

இதுதான் வளைகுடா
. லோக்கல் தொலைபேசி இணைப்பு இலவசம்
. பெட்ரோலை விட தண்ணீருக்கு விலை அதிகம். கழிவு நீருக்காகவும் காசு தர வேண்டும்.
. ஒவ்வொரு கட்டிடமும் மூன்று மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்.
. தகுதியில்லாதவர்கள் தகுதி படைத்தவரை விடவும் அதிகம் சம்பாதிப்பார்கள்.
. உண்மையை விடவும் படம் காட்டுவதற்கே மதிப்பு.
. அடிமட்டத் தொழிலாளர்களுக்கு நமது நாட்டில் கிடைப்பதை விட குறைந்த ஊதியமே கிடைக்கிறது.
. நிர்வாகம் எந்த ஒரு காரணமுமின்றி தன்னிடம் வேலை பார்ப்பவரை வெளியேற்றலாம்.
. பணத்தை விட வாஸ்தா (எனப்படும் பரிந்துரை) அதிக பலம் வாய்ந்தது.
. அலுவலர்களை விடவும் துடைப்பவர்களுக்கு அதிக பரிந்துரைக்கும் பலமுண்டு
. கட்டிட முதலாளியை விட கூடுதல் உரிமையுடையவர் வாட்ச்மேன்.
. முதலாளியிடம் மேலதிகாரியை விடவும் அதிக செல்வாக்குள்ளவர்கள் ஆபீஸ் பாயும் டிரைவரும்தான்.
. வளைகுடாவில் ஒரு மணி நேரத்துக்கள் மழை, புழுதிப்புயல், கடும் வெப்பம், கடுங்குளிர், வியர்ப்பு (உருக்கம்) போன்ற காலநிலை மாற்றங்கள் அதி வேகமாக மாறும்.
. வளைகுடா பாலைவனத்தில்தான் இருக்கிறது இருப்பினும் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று தாவரங்கள் காட்சி தரும்.
. வளைகுடாவில் சம்பாதிக்கத் தெரியாதவன் உலகில் எங்கு போனாலும் சம்பாதிக்க முடியாது.
. வளைகுடாவில் நேரம் பறக்கும். ஒரு வெள்ளிக்கிழமை போய் அடுத்த வெள்ளி வந்ததே தெரியாது.
. இங்குள்ள ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் ஊரில் ஒரு வீடு கட்டுவதும் திருமணம் செய்வதும்தான் முக்கிய கனவு.
. நீங்கள் ஊரில் கூட இருக்கும்போது இருந்ததை விட 100 மடங்கு கூடுதலாக உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மீது அன்பு செலுத்துவீர்கள்.
. பணியில் இருப்பதை விடவும் வீட்டில் இருப்பதுதான் அதிக வலியைத் தரும்.
. இந்தியர்கள் உண்மையிலுள்ளதை விடவும் கூடுதல் பக்தியுள்ளவர்களாயும், கடவுள் பயமுள்ளவராகவும் இருப்பதாக காட்டிக் கொள்வர்
. சல்மான் கான் அல்லது ஷாரூக் கான் படங்கள் திரையிடப்பட்டால் திரையரங்குகள் அரபியர்கள் கூட்டத்தால் நிரம்பும்.
. அரபிப் பெண்கள் ஹிந்திப்பாட்டு பாடுவர் ஆனால் பாடலின் பொருள் தெரியாது.
. டான்ஸ் பார்களும் 'பப்' களும் பெங்களுருவை விட அதிகம்
. ஒவ்வொரு ஐந்து மீட்டருக்கு ஒரு பெண்கள் சலூன் உண்டு
. உணவும் மளிகையும் உங்கள் வாகனத்தில் கொண்டு வந்து தரப்படும்
. 10 மீட்டருக்கு ஒரு ஸ்டார்பக்ஸ்
. ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்குள் ஒரு ஷாப்பிங் மால் உண்டு
. விபச்சாரிகளும் உண்டு ஆனால் பிச்சைக்காரர்களை விடவும் மட்டமாக
. நெடுஞ்சாலைகளில் மெதுவாக அல்லது வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கென்று வரிசை வித்தியாமிருக்கும்.
. ஓட்டுநர் உரிமம் பெறுவது கார் வாங்குவதை விட மிகக் கடினமானது
. பூச்சிகளை விடவும் நொருங்கிய கார்கள் கூடுதலாக காணக் கிடைக்கும்
. வரிசையில் வரவேண்டுமென்பது பெண்களுக்கு விதி கிடையாது.

Post Comment