
இலங்கையில் என்ன நடக்கிறது?

இனப்படுகொலைகளும் அழுகுரல்களும் ஓய்வதாக இல்லையே.
தமிழினம் இப்படியே அழிந்து பட வேண்டியதுதானா?

ஜனவரி 20 முதல் மார்ச்15 வரையிலான சுமார் 55 நாட்களுக்குள் தமிழ் மக்களில் சுமார்2700 பேர் கொல்லப்பட்டும் 7500பேர் காயமடைந்தும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்கே முயற்சி? நம் பங்களிப்பை நாம் எப்படிச் செய்ய முடியும்? கையறு நிலையாக இருக்கிறதே.

ஒன்றுமறியா அப்பாவிகளும் குழந்தைகளும் செத்து மடிவதையும் ஊனமானவதையும் எல்லோரையும் போல என் மனதும் பொறுத்துக் கொள்ள மறுக்கிறது. என் இனத்தார், மூத்த தமிழ்க்குடியினர் படும் துயரங்கள் கேட்க இதயம் துடிக்கிறது.
பாதுகாப்பு வளையத்துக்குள் கூட்டி வைத்து கொல்வதாக கேட்கும் போது காதுகளில் சுடும் ஈயம் பாய்கிறது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் தீவிர தாக்குதல்களினால், அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் கொடுமைகள் அளவிடற்கரியது. சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையில்தான் சண்டையென்றால் அவர்களைப் பிரித்து வைத்து சமர் செய்யுங்கள். ஒன்றும் செய்யாத அப்பாவிகளைக் கொல்லாதீர்கள்.
அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட உடனடியான போர் நிறுத்தமே இப்போதைய தேவை, அதுவே உடனடித் தீர்வு. அது புலிகளை பொது மக்களிலிருந்து தனிமைப்படுத்த தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம். பொது மக்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்த பங்கமும் வராமல் எம் தமிழினம் காப்பாற்றப்பட வேண்டும். போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்பாவி பொது மக்களும் பெண்களும் குழந்தைகளும் அப்புறப் படுத்தப்படுவதோடு அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் மற்ற குடிமக்கள் பெரும் உரிமைகளையும் சலுகைகளையும் ஈழத்தமிழர்களும் பெற உறுதியான உடன்பாடு பேச்சு வார்த்தைகளின் முலம் எட்டப்பட வேண்டும். பேச்சு வார்த்தைகளில் உலக சமுதாயப் பிரதிநிதிகளுக்கும் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும.
தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை தம் அரசியல் இலாபங்களை கணக்கில் கொண்டே செய்கிறார்கள். கலைஞர் ஓரளவு முயன்றார். ஆனால் அது வெற்றி பெறவில்லை என்கின்ற போது, பழைய சறுக்கலகளை நினைந்து விட்டு விடாமல், இன்னும் கூடுதலாக முனையாமல் விடுவது அவர் தம் தமிழினக்காவலர் என்ற பெயருக்கு பொருத்தமானதாக அமையாது. இப்போதைக்கு தமிழகம் அவரைத்தான் எதிர் நோக்குகிறது. வேறு போக்கிடம் இல்லை.
படங்கள்: பிற தளங்களிலிருந்து
மேலும் அறிய: 1. அபி அப்பா , 2. தூயா







