Wednesday 30 July 2008

தமிழன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவனா?

இந்த ஆண்டில் அமீரகத்தில் மொத்தம் 118 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் 23 பேர் தமிழர்கள். மிகுதியில் கூடுதலானோர் மலையாளிகள்தாம். இந்த தற்கொலைகளில் மிகுதியானவை பணச்சுமையால் ஏற்பட்டவைதான் என்கிறது புள்ளி விபரம்.

தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள், இங்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்த வாழ்வியல் இங்கில்லை என்பதறிந்ததும் முதன் முதலாய் மனதொடிகிறார்கள். நிலம் நகை போன்றவற்றை அடகு வைத்து நிறைய பணம் கொடுத்து வந்தவர்கள், அந்தக் கடனை அடைக்கும் வரையிலாவது இங்கு இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இங்கு தன் செலவும், ஊரில் குடும்பத்தார் செலவும் போக எஞ்சிய குறைந்த பணத்தில் கடனை அடைக்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

அவர் வீட்டிற்கு அனுப்பும் பணம் ஊரில் கொடுத்ததை விடவும் அதிகம். ஆனால் அதற்காக அவர் இழந்தது எவ்வளவு என்பது ஊரில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மனது வருந்தக்கூடாதென்று இவர்களும் சொல்வதில்லை. அவர் முதலீடு செய்த பெருந் தொகையையும் ஊரில் பணத்தைப் பெறுபவர்கள் தற்காலிகமாக மறந்து விடுகிறார்கள். மகன் அல்லது கணவன் துபையில். இனி நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்பதான அவர்களின் கற்பனை, ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையிலிருந்து சிறிது சொகுசான வாழ்க்கை முறைக்கு அவர்களை மாற்றுகிறது. அதற்காக கூடுதல் பணம் தேவையாகிறது. அவர் மேலும் அதிர்கிறார். பழைய கடன் பாரம் முழுவதையும் இரவும் பகலுமாய் இவரே சுமக்கிறார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

அதற்குள் வந்து சிறிது நாளாகி விடுகிறது. நண்பர்கள் அதிகமாகின்றனர். குழுவாக இருக்கும் போதும், செல்லுமிடத்தும் புகை மற்றும் குடியைத் துவங்குகிறார். முதலில் மன ஆறுதலுக்கென்று இருந்தது, படிப்படியாக விடுமுறை என்றால் அதில்லாமலா என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார். இதிலே நண்பர்களின் முன் வீராப்புக்காக அல்லது முகஸ்துதிக்காக கூடுதல் செலவழிக்கிறார். சம்பள பற்றாக்குறை. மீண்டும் மன உளைச்சல்.

கார்டு தந்து கடனாளியாக்குகின்ற கிரெடிட் கலாச்சாரம் அவர் அறிந்தும் அறியாமலும் அவரை மேலும் கடனில் தள்ளுகிறது. வெளியேற முடியாமல் தத்தளிக்கிறார்.

இதல்லாமல் சிலருக்கு ஊரில் குடும்பத்தினரில் ஏற்படுகிற சிற்சில குழப்பங்களும் அவர் மனதை வாட்டிப் பிழிகிறது.

இவற்றிலிருந்து தப்பிக்க வழியறியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். சாதாரணமாக இவைதான் இங்கு நடப்பதாக சொல்கிறார்கள். அவைதான் தற்கொலைகளாய் முடிகின்றதாக சொல்கிறார்கள். உண்மையா?

அதனால் இங்கு வர நினைப்பவர்கள் முதலில் நன்றாகவும் சரியாகவும் திட்டமிடுங்கள். வந்த பின் கவனமாய் இருங்கள். உங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவற்றை குறிப்பாய் தவிர்த்து விடுங்கள். உணர்ச்சி வசப்படாமல் சிந்தியுங்கள். வாழ நினைத்தால் புவியில் நல்ல வழிகளா இல்லை. உங்களை நீங்களே சீர்திருத்தம் செய்து சிறப்பான வாழ்வை நோக்கி பயணமாகுங்கள்.

அது சரி. படித்தவர்கள் அதிகமுள்ளதாய் சொல்லப் படுகிற மலையாளிகளில் இது போன்ற தற்கொலைகள் அதிகமுள்ளதே. படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ!

Post Comment

'ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்' தவறானது


மக்கள் தொலைக்காட்சி நடத்தும் தமிழ்ப் பண்ணையில் பங்கு பெறும் பெரும் தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் தமிழ்ப்பற்று சொல்லில் அடங்காது. நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. துபையிலேயே இரவு பன்னிரண்டு மணி அளவில் தெரிவதை நாட்டில் விடியற்காலை நேரத்தில் யாராவது விழித்திருந்து பார்ப்பார்களா என நான் எண்ணி வியப்பதுண்டு.

அக்காலத்தில் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றொரு புலவர் இருந்ததாகவும், சாத்தனார் என்ற பெயருள்ள அவர், மற்றவர்கள் தவறாக ஆளும் தமிழைக் கண்டு மனம் வெதும்பி தம் எழுத்தாணியால் தம் தலையிலேயே குத்திக் கொண்டதால் தலை சீழாகி சீத்தலைச்சாத்தனாராய் ஆனார் என்றும் சொல்வர். அதை உண்மைதான் என நம்பச் செய்பவர்தான் இந்தத் தமிழறிஞர். தமிழ் எழுத்துக்களை அல்லது எழுதுவோர்களை நெறிப்படுத்த அவர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.

பேச்சு வழக்கில் எழுதுவது சரியில்லை என்கிறார் அவர். பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் மாறும். எனவே பேச்சு வழக்கை எழுத்து வழக்குக்கு கொண்டு வராதீர்கள். வழுக்களை தமிழாக நிலைப் படுத்தாதீர்கள். சட்ட மீறலையே சட்டமாக்காதீர்கள் என்கிறார். இன்னும் கணிணித் தமிழருகில் வரவில்லை. வந்தால் நம் மொக்கைகளையெல்லாம் படித்த பின் நம்மை நேரில் பார்த்தால் கொன்றே போடுவார். குறிப்பாக சாத்தான் குளத்தாரே மாட்டிக் கொள்ளாதீரய்யா.

தமிழில் பிறமொழிச் சொல்லாடல்களையும் இயன்றவரை தவிர்க்கச் சொல்கிறார். நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று எழுதுகிற, சொல்கிற, சொல்லித் தருகிற அனைவரையுமே தமிழைக் கெடுத்த குற்றவாளிகளாக்குகிறார். நம்ம அய்யனார், இப்போது சென்ஷி ஆகியோர் பார்த்துக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என ஆர்வமூட்ட யார் யாரோ எழுதியதை அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அதிலுள்ள தவறுகளை மட்டும் விமரிசிக்கின்றார்.

ஒருவர் ''வீனஸின் பூமத்திய ரேகைக்கு அருகில்'' என்று எழுதியுள்ளதை படித்து அவருக்கு கோபம் பீரிடுகிறது. அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன்தான் படித்தவன். அவனுக்கு தமிழை விட வடமொழி விருப்பு அதிகம். அதனால் அறிவியலை தமிழ்ப்படுத்த அவற்றை வடமொழியிலேயே ஆக்கினான். அதனால்தான் பிராணவாயு, பூமத்திய ரேகை என வந்தது. பூமத்திய ரேகை பூமிக்கு நடுவில் இடப்பட்டுள்ள கற்பனைக் கோடு. அது வீனஸில் எப்படி ஐயா வரும். வீனஸ் மத்திய ரேகையாக அல்லவா வர வேண்டும். புடிப்பவனுக்கு குழப்பம் ஏற்படாதா? இப்போது நில நடுக்கோடு என்று பழகியிருந்தால், வீனஸின் நில நடுக்கோடு என்று எழுதினால் குழப்பமில்லையே என்கிற மாதிரி சொன்னார். எனக்குப் பிடித்தது. புரிந்தது. உங்களுக்கு?

தலைப்புக்கு வருவோம்.
ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் என்று எழுதுவதே தவறானது என்கிறார். இது ஆங்கிலத்தில் சிந்தித்து எழுதுபவரின் பழக்கம். நீங்களெல்லாம் வெள்ளைக்காரன் நாட்டுக்குப் போய் கண்களை பூனைக் கண்களாக்கிக் கொண்டு ஏதாவது செய்து தொலையுங்கள். தமிழைக் கெடுக்காதீர்கள் என்கிறார். ஓய்வு என்ன கீழே கிடக்கிறதா பொறுக்கி எடுத்துக் கொள்ள? Take Rest என உள்ளதை அப்படியே தமிழ்ப் படுத்தியதால் வந்த வினைதான் இது. ஓய்வு கொள்ளுங்கள் அல்லது ஓய்வாக இருங்கள் என்று சொல்லலாம். காத்தாட இருக்கலாமே. அமைதியாக சாயுங்களேன் என நாட்டுப் புறத்தில்தான் இன்னும் நல்ல தமிழ் வாழ்கிறது. போய்ப் பாருங்கள் என்கிறார்.

நல்ல தமிழறிய நீங்களும் இயன்றால் பாருங்கள். அவர் வார்த்தையிலேயே சொல்வதானால் தமிழ்ப்பண்ணையில் பண்ணையாராகுங்கள்.

குறிப்பு: ஒரு தமிழ்ப்பண்ணை விழாவிலே (ஒரு நாள் நிகழ்ச்சியில்) கூலவாணிபம் என்பது அப்புலவரின் தொழிலென்றும் சீத்தலை என்பது ஊராக இருக்கலாமென்றும் சாத்தனார் என்பது பெயரென்றும் மா. நன்னன் அவர்களே கூறியுள்ளார்.

Post Comment

Tuesday 22 July 2008

மக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள் இன்று

இன்று என்றுமில்லா அளவில் மக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள்

மத்திய பிரதேசத்தைச் சோர்ந்த இரண்டு எம்.பி. மற்றும் இராஜஸ்தானைச் சார்நத ஒரு எம்.பி ஆக மூன்று பா.ஜ.க. எம்.பிகளுக்கு ஓட்டு நடைபெறும் நேரத்தில் அவைக்கு வரக்கூடாது என்பதற்காக ஒரு கோடி ரூபாய் முன் பணமாகத் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் குதிரை பேரம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் வெறுமனே எதையும் பேசக்கூடாது என்று சொன்னதாகவும் தெரிகிறது. எனவே இன்று சபை நடவடிக்கையின் போதே சபாநாயகரிடம் முன் அனுமதி பெற்று அப்பணம் 3 கோடி முழுவதையும் பாராளுமன்ற சபையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்து கொட்டியதாகவும், அதை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்று, பாராளுமன்ற அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

விரல்கள் சமாஜ்வாதியின் எம்.பி.க்களை நோக்கி நீள்வதாக தெரிகிறது.

சபாநாயகர் சபையை ஒத்தி வைத்து, பிரதமரின் பதிலளிப்புக்குப் பின் நேரடியான ஓட்டளிக்க அழைக்கப் போவதாகவும் செய்திகள் சொல்கின்றன.

இது பா.ஜ.க.வினரின் நாடகமாகவும் இருக்கலாமென டில்லி வட்டார ஊகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Post Comment

Tuesday 8 July 2008

நேர்மையான மனைவி (நகைச்சுவை)


ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.

அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

Post Comment

Thursday 3 July 2008

வெகு சிறப்பாக வாழவே நான்

1. தினமும் 10 முதல் 30 நிமிடம் வரை நடந்து பழகுங்கள். நடக்கும்போது சிரியுங்கள். மன அழுத்தம் குறைய இது மிகச்சிறந்த வழி.
2. தினமும் ஒரு பத்து நிமிடம் அமைதியாய் அமருங்கள். தேவையென்றால் அதற்காக ஒரு பூட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
3. தினம் முறைப்படி இறைவனைத் தொழுங்கள். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
4. சிறிது நேரம் ஒதுக்கி 70 வயதுக்கு மேற்பட்டோர்களிடமும் 6 வயதுக்கு குறைந்தவர்களிடமும் தினமும் பழகுங்கள்.
5. மரத்திலும் செடிகளிலும் வளருவதை அதிகம் உணவில் சேருங்கள். ஆனால் அவற்றிலிருந்து தயாரிக்கப் படுபவற்றை குறைத்து உண்ணுங்கள்.
6. அதிகமாய் நீரருந்துங்கள். Green டீ குடியுங்கள்.
7. ஒரு நாளில் குறைந்தது மூன்று பேரை சிரிக்க வையுங்கள்.
8. உங்கள் வீடும், காரும், மேசையும் அழுக்குகளை விட்டும் தினமும் தூய்மையாகட்டும். உங்கள் வாழ்வில் புதுமையும் சக்தியும் நிரம்பட்டும்.
9. கிசுகிசு, பழையன பேசுதல், எதிர்மறை சிந்தனை, உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் போன்றவற்றை பேசுவதற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக உங்கள் சக்தியை நிகழ்கால நேரான விடயங்களில் செலவிடுங்கள்.
10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம் என்பதை உணருங்கள். நாம் இங்கே கற்றுக் கொள்ள வந்தோம். பிரச்னைகளும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதிதான். அல்ஜீப்ரா வகுப்பு போல பிரச்னைகள் வரும் போகும் ஆனால் நாம் படித்தவைகள் நம் வாழ்வு முழுதும் தங்கும்.
11. உங்கள் காலை உணவில் ஒரு அரசனாகவும், மதிய உணவில் ஒரு வழிப் போக்கனாகவும், இரவு உணவில் ஒரு பிச்சைக்காரனாகவும் உண்ணுங்கள்.
12. வாழ்க்கை சில வேளைகளில் நியாயாமற்றதாக தோன்றலாம் ஆனால் அப்போதும் வாழ்க்கை அழகானது.
13. வாழ்க்கை மிகச் சிறியது அதில் மற்றவர்களை வெறுக்க ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.
14. உங்களை நீங்களே மிக முக்கியமானவராக கருதிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களும் நம்மை அவ்வாறு கருத மாட்டார்கள்.
15. ஒவ்வொரு விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டுமென நினைக்காதீர்கள். உங்கள் வாதம் ஏற்கப்படாமலிருக்கலாம் என்பதை ஏற்கப் பழகுங்கள்.
16. உங்களின் இறந்த காலத்தை அமைதிப் படுத்துங்கள் அப்போதுதான் அது உங்கள் நிகழ்காலத்தை கெடுக்காது.
17. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களுடைய வாழ்க்கைப் பயணம் எவ்வாறானது என்பதை நீங்கள் உணர முடியாது.
18. பெண்களே!. அந்த நறுமணத்தை இப்போதே புகைய விடுங்கள். அந்த நல்ல விலையுயர்ந்த துகிலை இன்றே உடுத்துங்கள். சிறந்த நாட்களின் வருகையை எதிர்நோக்கி தாமதிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் சிறந்த நாள்தான்.
19. உங்களது மகிழ்ச்சிக்கு உங்களைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல.
20. உங்களது ஒவ்வொரு பெருந்துன்பத்தையும் இதைச் சொல்லி கட்டம் கட்டுங்கள்.
'இன்னும் ஐந்து வருடத்துக்குப்பின் இது நமக்கு துன்பமாகத் தோன்றுமா?'
21. எல்லோரையும் எல்லாவற்றுக்காகவும் மன்னித்து விடுங்கள்.
22. உங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலையடையத் தேவையில்லை.
23. காலம் எல்லாவற்றையும் ஆற்றுப் படுத்தும். எனவே காலத்துக்கும் சிறிது கால அவகாசம் தாருங்கள்.
24. நிலைமை எவ்வளவுதான் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் அதுவும் மாறக்கூடியதே.
25. நீங்கள் நோய்வாய்ப்பட்டால் உங்கள் வேலை வந்து உங்களை கவனித்துக் கொள்ளாது. உங்கள் நண்பர்கள் வந்து கவனிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருங்கள்.
26. பயனற்றதாகவும், அழகற்றதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் உள்ளவற்றிலிருந்து ஒதுங்குங்கள்.
27. பொறாமை கொள்வது நேரத்தை வீணடிப்பதாகும். நமக்கு அனைத்தையும் கடவுள் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
28. உங்கள் வாழ்வின் சிறந்தவை இனிதான் நிகழவிருக்கிறது.
29. நீங்கள் எப்படி இருந்தாலும் எழுங்கள். நன்றாக உடுத்துங்கள். சிறப்பாகத் தோன்றுங்கள்.
30. நல்லவற்றை மட்டுமே செய்யுங்கள்.
31. அடிக்கடி உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள்.
32. ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் கீழுள்ள வாசகத்தை பூர்த்தி செய்யுங்கள்
இன்று நான் ____________ நன்றி செலுத்துகிறேன்.
இன்று நான் _______________ நன்றாய் முடித்தேன்.
33. நீங்கள் மன அழுத்தம் கொள்வதை விட்டும் சிறப்பானவராக வடிவமைக்கப் பட்டிருக்கின்றீர்கள்.
34. பயணத்தை சுவையுங்கள். எல்லாமே வேகமாக பறப்பதற்கு இது ஒன்றும் டிஸ்னி வேர்ல்ட் இல்லை. கடந்து செல்லுங்கள். வாழ்க்கை என்பது ஒரே பயணம்தான் அதை முழுவதும் சுவையுங்கள். அதை அழகாக அனுபவியுங்கள்.
வாழுங்கள். அன்பு செலுத்துங்கள். வாழ்க்கை என்பதே ஒரு வெகுமதி.
போனதையும் வருவதையும் எண்ணி நிகழ்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதனால்தான் நிகழ்காலமே PRESENT என ஆங்கிலப் படுத்தப் படுகிறது.
வாழ்வை நேசித்து அனுபவியுங்கள்.

Post Comment