Thursday 21 August 2008

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-2)

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா?-(பாகம்-1) படித்து விட்டீர்களா?

செப்டம்பர் 2001ல் ஆகாய விமானங்கள் இரட்டைக் கோபுரத்தினுள் பறந்தன. அமெரிக்க வரலாற்றில் அது சந்திக்கவிருந்த பெரும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க அமெரிக்கா இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தத் துவங்கியது. (இச்சந்தர்ப்பத்தை அது தானாக உருவாக்கிக் கொண்டதென்று ஒரு சித்தாந்தம் அமெரிக்காவிலேயே உலவிக் கொண்டிருக்கிறது என்பதொரு தனி விடயம்) அமெரிக்க பெட்ரோ டாலரைக் காக்க போர் தயாரிப்புகள் துவங்கின. அதில் முதன் முதலில் பறிக்கப் பட்டது உண்மையுடைய உயிர்தான். மற்ற பெட்ரோல் உற்பத்தி நாடுகள் வேடிக்கைப் பார்த்தன.

ஈராக் 2000ம் ஆண்டில் பெட்ரோலை யூரோவில் விற்கத் துவங்கியது. 2002ல் ஈராக் தன் கருவூலத்திலிருந்த முழு பெட்ரோ டாலர்களையும் யூரோவுக்கு மாற்றி விட்டிருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க துவங்கியது.

முழு உலகமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் வெகு சிலருக்கே அது பெட்ரோ டாலருக்கான போர் எனப் புரிந்திருந்தது. ஈராக்கை மார்ச் 2003ல் ஆக்கிரமித்தவுடன், அமெரிக்கா முதலில் அங்குள்ள எண்ணெய் வளங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கட்டும். ஆகஸ்ட் மாதத்தில் முதல் விற்பனையை மீண்டும் டாலரில்தான் துவங்கியது. ஈராக்கிலிருந்த எல்லா அரச மாளிகைகளும் இலாக்காகளும் குண்டு மழை பொழிந்து தகர்க்கப்பட்டது. பாக்தாதில் தகர்க்கப்படாத ஒரே அரச மாளிகை பெட்ரோல் இலாகா. எத்தனை இலட்சங்களில் மனித உயிர்கள் மலினப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது காவு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் அமெரிக்காவுடைய கவலையில்லை. அமெரிக்கா பெட்ரோ டாலர்களை காப்பாற்ற பெட்ரோல் வர்த்தகம் டாலரில் நடக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க பொருளாதாரம் மண்ணைக் கவ்வும் - அதன் பின் என்னென்னவோ நடந்து விடும்.

2003ன் தொடக்கத்தில் வெனிசுலா அதிபர் ஹியூகோ சவாஸ் அந்நாட்டின் பாதி பெட்ரோலை யூரோவில் விற்பதாக (முன்னமே பாதியை அமெரிக்கா டாலரில் வாங்கி விட்டது) வெளிப்படையாக அறிவித்தார். 2003 ஏப்ரல் 12ல் அமெரிக்க உதவியிலுள்ள சில வியாபாரத் தலைமைகளும், சில தளபதிகளும் சேர்ந்து சவாஸைக் கடத்தி, புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க முயன்றனர். மக்களே அதற்கெதிராக களமிறங்கவும் இராணுவமே அந்தப் புரட்சியை முறியடித்து தோல்வியடையச் செய்தது. உண்மையில் அமெரிக்காவின் முகத்தில் கரி படிந்தது.

நவம்பர் 2000ல் ஒரு யூரோவின் மதிப்பு 0.82 டாலர்தான். இதுதான் யூரோவின் ஆகக் குறைந்த மதிப்பு. மேலும் சரிவை நோக்கித்தான் இருந்தது.
ஆனால் ஈராக் யூரோவில் பெட்ரோல் விற்கத் தொடங்கியதும் அதன் சரிவு நின்றது.
ஏப்ரல் 2002ல் OPECன் மேல் மட்ட பிரதிநிதிகள் யூரோவில் பெட்ரோல் விற்கும் யோசனையைப் பற்றிப் பேசத் துவங்கியவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
ஜூன் 2003ல் ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்ப டாலருக்கு ஈராக்கிய பெட்ரோல் விற்பனையைப் பற்றி பேசத் துவங்கியதும் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது.
ஆகஸ்ட் 2003ல் ஈரான் சில ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோவில் பெட்ரோல் விற்ற போது யூரோவின் மதிப்பில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் உண்டானது.
2003-04 OPEC நாடுகளின் தலைவர்களும் ரஷிய தலைமையும்; எண்ணெயையும் எரிவாயுவையும் யூரோவில் விற்பதைப் பற்றி உளப்பூர்வமாக பேசத் துவங்கியதும் யூரோவின் மதிப்பு உயர்ந்தது.
2004ன் OPEC மாநாட்டில் எண்ணெய் விற்பனையை யூரோவில் மாற்றுவதைப் பற்றி எந்த முடிவுமெடுக்காமல் கலைந்தது - ஆம் அப்போதும் யூரோவின் மதிப்பு தாழ்ந்தது.
இலண்டனிலும் நியூயார்க்கிலும் உள்ளதைப் போன்ற எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Bourse) தனது நாட்டிலும் நிறுவப் போவதாக ஜூன் 2004ல் ஈரான் அறிவித்தவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
கடைசியில் யூரோவின் மதிப்பு 1.27 அமெரிக்க டாலர்களில் உயர்ந்து நிற்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பை வெகு தூரம் தாழ்த்த, கடந்த மாதங்களில் இந்நிகழ்வுகள் வெகு தூரம் வந்து விட்டது. மே 5ம் நாள் ஈரான் தன் நாட்டில் சொந்த எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Oil Bourse) பதிவு செய்து விட்டது. இலண்டனையும் நியூயார்க்கையும் விட்டு விட்டு வேறொரு நாட்டில் எண்ணெய் விற்பனையைச் செய்வதோடல்லாமல் உண்மையில் உலக நாடுகள் விற்கவும் வாங்கவுமான ஒரு எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்து விட்டது.

சவாஸின் சமீபத்திய இலண்டன் வருகையில் அவர் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையை ஆதரிக்கப் போவதாகவும் யூரோவில் எண்ணெய் விற்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள ஆயுத தடையைப் பற்றி இலண்டனில் கேட்கப் பட்ட போது சவாஸ், 'அமெரிக்கா வெறும் காகிதப்புலிதான்' என முன்னறிவிப்பாக பதிலிறுத்தார்.

தற்போதைய உலக எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி NYMEX (New York Mercantile Exchange) அல்லது IPE (International Peroleum Exchange at London)ஆகிய இரு இடங்களிலிருந்துதான் விற்கப் படுகிறது. இவையிரண்டும் அமெரிக்கர்களின் நிறுவனங்கள். அவை எண்ணெயை டாலரில்தான் வாங்கவோ விற்கவோ செய்கிறது. ஈரானிய எண்ணெய் விற்பனையின் வெற்றி ஈரானிய எண்ணெயின் 70 விழுக்காட்டை வாங்கும் ஐரோப்பியர்களை உணர்வு பெறச் செய்துள்ளது. தமது எண்ணெய் உற்பத்தியின் 66 விழுக்காட்டை ஐரோப்பாவுக்கு விற்கும் ரஷ்யாவையும் அது உணர்வு பெறச் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு மேலும் பாதகமாக இந்தியாவும் சீனாவும் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையிலிருந்து எண்ணெய் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இப்போதும் அதே Weapons of Mass Destruction என்றோ அல்லது அணுகுண்டு தயாரிப்பு என்றோ சொல்லிக் கொண்டு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த எண்ணெய் சந்தை அழிக்கப்படாது என்று யாராவது ஒருவர் நம்புவீர்களா?

மேலும் புஷ்ஷூக்கு வீழ்ச்சி. உணர்வு பெற்ற ஐரோப்பா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலிய நாடுகளும் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற நாடுகளும் எண்ணெயை வாங்கவும் விற்கவும் யூரோவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்நாடுகள் யூரோவை சேமிக்கத் துவங்கும். தம்மிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களை விற்கத் துவங்கும். கடனில் வீழ்ந்துள்ள டாலரை விட யூரோ நிலையாகவே உள்ளது. உலக வங்கியும் (IMF) அமெரிக்கா பொருளாதார பிரச்னைகளையும் வர்த்தகப் பற்றாக்குறையையும் பற்றி சமீபத்தில் அறிவித்து விட்டதால் கழுத்து நெறிபடும் அமெரிக்காவுக்கு வேறு போக்கிடமில்லை.

தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள மிகப்பெரிய கவலை, 'அமெரிக்க டாலர் கடுமையாக வீழ்ச்சி அடைவதற்குள் தம் கருவூலத்திலுள்ள டாலர்களை எப்படி மாற்றுவது?' என்பதுதான். ஆண்டாண்டு காலமாக எத்தனையோ உலக நாடுகளை டாலரில் திணித்து வைத்துள்ள அமெரிக்காவிடமே அதைத் திருப்பித் தர வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கின்றன பல நாடுகள். ஆனால் உலகிலுள்ள டாலர்களில் வெறும் 5 விழுக்காட்டைக் கூட அமெரிக்காவால் ஏற்க முடியாது. அமெரிக்கா தன் பொருளாதாரத்தை நாசப்படுத்திக் கொள்வதோடு உலக நாடுகளில் பலவற்றின் பொருளாதாரத்தையும் கூடவே நாசப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக பிரிட்டன் கடுமையாக நாசமாகும்.

Scottish Socialist Voice என்ற ஏட்டின் ஒரு கட்டுரை குறிப்படுவது போல, அமெரிக்கா பிழைக்க வேண்டுமானால், அந்நாடு வர்த்தகத்தில் ஒரு பெரும் புரட்சி செய்து, அதிக வர்த்தக நிலைமைக்கு (trade surplus) வர வேண்டும். அந்நாட்டினரால் இது முடியவே முடியாது. ஏனெனில் அதைச் செய்ய அமெரிக்கர்களை அந்நாடு அடிமைகளைப் போல வேலை வாங்க வேண்டும். அவ்வேலைக்கு சீனர்களையும் இந்தியர்களையும் விட குறைவாக சம்பளம் தர வேண்டும். நாமனைவரும் அறிந்ததைப் போலவே, இது அங்கு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

இப்போது அமெரிக்காவில் என்னவாகும்? கண்டிப்பாக பெரும் குழப்பங்கள்தான் உண்டாகும். ஒரு வேளை ஏதும் தொழிலாளர் புரட்சி, தற்போதைய நிலைமையில் 1929க்குப்பின் ஜெர்மனியில் நடந்தது திரும்பலாம். தீவிர வலது சாரிச் சிந்தனைகள் தோன்றலாம்... ...

இந்த அமெரிக்காவுடனான மற்ற நாடுகளின் பொருளாதார நாசத்தை ஐரோப்பிய, சீன, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தால் ஓரளவு தடுத்து நிறுத்த இயலுமா? இந்நாடுகளின் கருவூலங்களும் கழுத்து வரை அமெரிக்க டாலரால்தான் நிரம்பியுள்ளது.

1945 முதல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களால் செய்து வந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பகரமாக ஏதாவதொரு வழியைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். ஒவ்வொரு நாட்டுக் கருவூலத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டாலர் தாள்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஈரானில் அமெரிக்கா குண்டு போட்டால் அது பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஈராக்கிலுள்ள ஷியா மக்களின் பக்க பலத்தோடு ஈரான் வெளிப்படையாக ஈராக்கோடு போர் தொடுக்கும். ஈராக்கில் தற்போது மிகச் சிலரால் உண்டாகும் உள்நாட்டு கிளர்ச்சியையே தடுத்து நிறுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த சுன்னி ஷியா மக்களுக்கிடையே பெரும் வெறுப்பை உண்டாக்கி, அதை ஊதி விட்டு மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் உள் நாட்டுப் போரை உருவாக்கி விடக் கூடும்.

ஆனால் இது உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தி விடும். இந்த ஈரானிய சந்தை சிறிது காலமே தனித்து இயங்கும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அதன் பின் யூரோவில் எண்ணெய் விற்க சந்தைகள் வேறிடங்களிலும் (குறிப்பாக புரூஸ்ஸல்) துவக்கப்பட்டு விடும்.

ஒரு தீர்வு என்னவென்றால், டாலரை அழித்து விட்டு அமெரிக்காவின் புழக்கத்துக்காக புதுப் பணத்தை அது அறிமுகப் படுத்தலாம். இதன் மூலம் மற்ற நாடுகளிலுள்ள 66 விழுக்காட்டு டாலர் தாள்களை ஒரேயடியாக பயனற்றதாக்கலாம். என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?. இது போன்ற அடாவடியான, ஆபத்தை பொருட்படுத்தாத சிந்தனைகள்தாம் வெள்ளை மாளிகை, வால் ஸ்ட்ரீட், பென்டகனிலுள்ள சிலரது தலைகளில் தற்போது நீந்துவதாகத் தெரிகிறது.

அல்லது 1938ல் போலந்து நாட்டுக்குள் நுழைய ஜெர்மனி செய்ததைப் போல எதையாவது செய்ய வேண்டும். அதாவது போலந்து நாட்டினர் ஜெர்மனிக்குள் படை நடத்தி வந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை படம் பிடித்து நாஜிகள் மக்களிடம் காட்டி உள்நாட்டிலுள்ள மக்களின் எண்ணங்களையும் இதயங்களையும் வென்றெடுத்தனர். எனினும் அமெரிக்கா இந்த முறையில் வெற்றி பெறுவதென்பது தற்போதைய நிலையில் மிகக் கடினமானதே. ஆக, அமெரிக்கா எப்படித்தான் தப்பும்? உலக அரங்கில் அமெரிக்காவின் உயர்வு அதன் ஆயுத பலம்தான். என்னென்ன கொடுமைகளை இன்னும் உலகம் சந்திக்கவிருக்கின்றதோ யார் கண்டது?. ஒரு புது உலகப் போர் மூலம் அமெரிக்கா தன் சார்பு நாடுகளை ஒழுங்கு படுத்தி அதன் கருவூலங்களில் டாலர்களை வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தப் போகிறதோ என்னவோ?

இனி வரப் போகிற ஆபத்து முதலாளித் துவத்துக்கும் (டாலர்) ஏகாதிபத்தியத்துக்கும்தான். கலாச்சார மாற்றங்களோ, இஸ்லாமோ, axis of evil நாடுகளோ, அமெரிக்கா சொல்லும் பேரழிவு ஆயுதங்களோ ஆபத்தானவைகளல்ல. அமெரிக்கா இதுவரை கடை பிடித்து வந்த அந்நாட்டின் கொள்கைகளும் செயல்முறைகளும்தான் அடிப்படையில் தவறானவை, ஆபத்தானவை.

ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் free trade zoneல் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை (Iranian Oil Bourse) அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதமே IOB தனது பணியைத் துவங்கி இருக்க வேண்டும் ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி IOB பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் ... ... காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,

2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது NYMEX, IPE மூலம் வெறும் யூகங்களை (speculation) முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும்.

OPEC கூட சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் (Future Trade) எனக் கூறியுள்ளது.

முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது.

Post Comment

Wednesday 20 August 2008

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-1)

ஈரான் செய்துள்ளது உண்மையில் அணுவாயுதத்தையும் விட கொடியதாகி விட்டது. எப்படி?

தி வாய்ஸ்( வெளியீடு 264)ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன் வரவு செலவுகள் யூரோவில்தான், அமெரிக்க டாலரில் நடைபெறாது. ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தோன்றும் இது, அமெரிக்க மக்களுக்கு பேரபாயத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். உண்மையில் அது நம் கற்பனைக்கு எட்டாத விளைவை உள்ளடக்கியது.

தற்போதைய நிலையில் எண்ணெய் வரவு செலவுகள் அனைத்தும் நியூயார்க், லண்டன் நகரங்களிலுள்ள இரு எக்ஸ்சேன்ஜ் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன. அவ்விரண்டு எக்ஸ்சேன்ஜ்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை என்பது தற்செயலானதல்ல என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம்.

உலகமெங்கும் ஏற்பட்ட வியாபார மந்த நிலையினாலும், இரண்டாம் உலகப் போரின் விளைவாலும் 1929ம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் பெரும் சரிவையடைந்தது. அந்தப் போரின் போது தம் கூட்டுப் படைகளுக்குத் தேவையான பொருட்களையும் தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி, அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து, தங்கமாகத் தர வற்புறுத்திப் பெற்றுக் கொண்டது.

1945ம் ஆண்டில் உலகத் தங்கத்தின் 80 சதவிகிதம் அமெரிக்கப் பெட்டகத்தில் அடைபட்டது. அதன் விளைவாக எந்த மாற்றுமில்லாமல் டாலர் தாள்களே உலக சேமிப்புக்கான பணமானது. உலகம் முழுதும் தங்கத்தை விட டாலர் கட்டுகளே பாதுகாப்பானது என ஆனது. ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் உருவானது.

அதற்கடுத்து வந்த சில பத்தாண்டுகளில் இனி மற்றொரு நாள் வராது என்ற வேகத்தில் அமெரிக்கா தன் டாலர் தாள்களை அடித்துக் கொண்டே இருந்தது. அமெரிக்கா, அந்த மலையளவு காகிதங்களை, வெளிநாட்டுச் சரக்குகளை பெருமளவில் வாங்கிக் குவிக்கவும், பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், அப்போது உலகில் நடந்த போர்களுக்காகவும், வெளி நாட்டிலுள்ள தம் கூலிப்படைகளுக்காகவும், வெளி நாடுகளுக்கு அனுப்பியுள்ள தம் மத போதகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்குமென வெளிநாடுகளில் வீசி இறைத்து ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி உள்நாட்டு பணவீக்கத்தை அதிகப் படுத்தவில்லை. ஏனெனில் வெறும் தாள்களை அச்சிட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அமெரிக்கா வெளியிலிருந்து இலவசமாகவே பெற்றது. அதற்காக அமெரிக்காவின் இழப்பு தாள் உற்பத்திக்காக ஓரிரண்டு காடுகள்தான்!.

அதற்கடுத்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் பெட்டகங்களில் பல அமெரிக்க டாலர்களால் நிரம்பி வழிந்தது. அமெரிக்க டாலர்களுக்காக உலக நாடுகளில் புதுப்புது பெட்டகங்களும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், அமெரிக்கா தன் டாலர் தாள்களை உள் நாட்டை விடவும் கூடுதலாக வெளி நாடுகளிலேயே செலவிட்டது. அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளில் சேமிப்புகளாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பில் 66 சதவிகிதம் எனும் பெரும் பகுதி வெறும் டாலர் தாள்களாகவே சேமிக்கப் பட்டிருந்தது என்பதை அநேகமாக எல்லா வல்லுநர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

1971ம் ஆண்டில் பல நாடுகள் தம் சேமிப்பிலிருந்த டாலர் தாள்களின் சிறு பகுதியை விற்று தங்கமாக மாற்ற விரும்பியது. ஓஹியோ பல்கலை கழகத்திலிருந்து வணிகவியலில் டாக்டர் பட்டம் பெற்ற க்ராஸ்ஸிமிர் பெட்ரோவ் (Dr. Krassimir Petrov) சமீபத்தில் இதைப் பற்றி எழுதும் போது, 'அமெரிக்க அரசு ஆகஸ்ட் 15, 1971ல், டாலருக்கும் தங்கத்துக்குமான இணைப்பை துண்டிப்பதாகச் சொல்லி தன் நாட்டுக் காகிதங்களை திரும்பப் பெற மறுத்தது. உண்மையில் தன் டாலர் காகிதங்களைப் பெற்று தங்கத்தை தர மறுத்த செயல் அமெரிக்க அரசின் திவாலான நிலைமையை அப்பட்டமாக்கியது' எனக் குறிப்பிடுகிறார். 1945ல் உருவாக்கப்பட்ட ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் தன்னிச்சையாக குப்பைக்கு எறியப்பட்டது.

டாலரும் அமெரிக்க பொருளாதாரமும் ஒரு வகையில் 1929ன் ஜெர்மனியை ஒத்ததாக இருக்கிறது. மற்ற உலக நாடுகள் டாலர் தாள்களை நம்பவும் அதிலே உறுதி கொள்ளவும் அமெரிக்கா வேறு வழிகளைத் தேடும் நிர்ப்பந்தத்திற்கு இப்போது தள்ளப் பட்டது. அதற்கான விடைதான் எண்ணெய் அதாவது பெட்ரோ டாலர். அமெரிக்கா, பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க, விஷமத் தனமாக முதலில் சவூதி அரேபியாவையும் பின்னர் OPEC எனப்படும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் இணங்க வைத்தது. அது டாலரின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இப்போது அத்தியாவசியத் தேவையான பெட்ரோலைப் பெற மற்ற நாடுகள் டாலர் தாள்களை திரும்பவும் இருப்பில் வைத்தன. ஆனால் அந்த அவசியமான பெட்ரோலை அமெரிக்காவோ இலவசமாகப் பெறுகிறது. டாலர் தாள்களை மூழ்காமல் காக்க தங்கத்துக்குப் பதில் இப்போது பெட்ரோல்.

1971லிருந்து வெளிநாடுகளில் விநியோகிக்கவும் செலவழிக்கவும் அமெரிக்கா மென்மேலும் டாலர் தாள்களை மலை மலைகளாக உற்பத்தி செய்யத் துவங்கியது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையும் (trade deficit) மளமளவென வளர்ந்தது. வெறும் டாலர் தாள்களை அச்சடித்துக் கொடுத்து உலகின் எல்லாப் பொருட்களையும் அமெரிக்கா விழுங்கியது. மேலும் பல பெட்டகங்களும் உருவாகின.

சில்லின் நுனான் (Cillinn Nunan) என்ற நிபுணர் 2003ல் எழுதியதாவது, 'உண்மையில் டாலர்தான் உலகின் சேமிப்புப் பணமாக உள்ளது. உலகின் அதிகார பூர்வ சேமிப்பு மாற்றுகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க பணக் கணக்குதான் உபயோகிக்கப் படுகிறது. வெளி நாட்டுப் பண மாற்றத்தில் ஐந்தில் நான்கு பங்கும், உலக ஏற்றுமதிகளில் பாதியும் டாலர்களில்தான் செய்யப் படுகிறது. அது மட்டுமின்றி உலக வங்கியின் கடன்களும் (IMF Loans) டாலர்களில்தான் தரப் படுகிறது.

புலன்ட் கூகே (Dr. Bulent Gukay of Keele University) சமீபத்தில், 'எண்ணெய் வர்த்தகத்தில் உலக இருப்பின் டாலர்கள் செலவழிக்கப் படுவதால் செயற்கையாக டாலரின் தேவை அதிகமாக்கப் பட்டுள்ளது. இதனால்தான் ஏறக்குறைய ஒரு செலவுமேயில்லாமல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களை அச்சிட்டு அதிகப் படியான இராணுவத் தேவைகளுக்கு உபயோகிக்கவும், நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியில் செலவழிக்கவும் முடிகிறது. எவ்வளவு டாலர் தாள்கள்தான் அச்சிடலாமென்பதற்கு எந்த அளவீடுகளோ கட்டுப்பாடுகளோ அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்காவுக்குச் சமமான போட்டியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், மற்ற நாடுகள் டாலரின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் வரையில் எந்த செலவுமின்றி வெறும் டாலர் தாள்களை அமெரிக்கா அச்சிட்டே வாழ்ந்து கொண்டிருக்கும்' என எழுதியுள்ளார்.

சமீப காலம் வரை அமெரிக்க டாலர் பாதுகாப்பானதாகத்தான் இருந்தது. எனினும் 1990 முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வளரத் தொடங்கி மத்திய ஐரோப்பாவையும் கிழக்கு ஐரோப்பாவையும் விழுங்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்கா ஒரு செலவுமில்லாமல் உலகப் பொருள்களையும் மக்களையும் வாங்கும் பலத்தை பார்த்து, பிரான்சு மற்றும் ஜெர்மானியத் தலைவர்கள் பொறாமைப் படத் துவங்கி விட்டனர். இலவசமாக் கிடைக்கும் அதில் தாமும் ஒரு பகுதியைப் பெற விரும்புகின்றனர்.

அவர்கள் 1999ன் இறுதியில் யூரோ எனும் பண பலத்தை, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பலத்த எதிர்ப்புகளுக்கிpடையே, குறிப்பாக அமெரிக்க டாலர் பெற்று பிரிட்டன் உண்டாக்கிய எதிர்ப்புக்கிடையிலும் உருவாக்கி விட்டனர். யூரோ இப்போது வெற்றி நடை போடுகிறது.

யூரோ வெளியிடப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் சதாம் உசேன், OPEC எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்று வந்த பெட்ரோல் இனி யூரோவில் மட்டுமே ஈராக்கில் விற்கப்படும் என அறிவித்தார். ஈரான், ரஷ்யா, வெனிசுலா, லிபியா முதலிய நாடுகள் தாங்களும் அவ்வாறே மாற நினைப்பதாக வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கின – வெள்ளம் அமெரிக்காவின் தலையில் ஓடத் தலைப்பட்டது.

இரண்டாம் பகுதியில் தொடரும்........

Post Comment

Monday 4 August 2008

பத்து கட்டளைகள் - தம்பதிகளுக்கு



கட்டளை 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.

கட்டளை 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது

கட்டளை 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.

கட்டளை 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...

கட்டளை 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.

கட்டளை 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.

கட்டளை 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.

கட்டளை 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.

கட்டளை 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

போனஸாக ஒரு கட்டளை கதை வடிவில்
நீண்ட காலத்துக்கு முன் திருமணமான ஒர் தம்பதி வேண்டுதல் கிணற்றுக்குச் சென்றார்கள்.
மனைவி கிணற்றில் குனிந்து ஒரு வேண்டுதலைக் கேட்டுவிட்டு ஒரு நாணயத்தை உள்ளே எறிந்தாள்.
கணவணும் ஒரு வேண்டுதல் செய்ய விரும்பினான். ஆனால் கிணற்றில் குனியும்போது சிறிது கூடுதலாக குனிய, தவறி உள்ளே விழுந்து மூழ்கினான்.

கணநேரம் மனைவி அப்படியே பிரமை பிடித்தவளாகி நின்றாள். ஆனால் உடனே முறுவலித்தாள். ''அட! இந்த கிணறு உடனே வேலை செய்கிறதே!''

Post Comment