Tuesday 20 November 2007

இப்படியும் சில நல்லவர்கள்


துபையில் என் நெருங்கிய உறவினர் நடக்கும் போது தரை வழுக்கி, கால் தடுமாறிக் கீழே விழும் போது, தலையில் அடிபடாமல் இருக்க கைகளை ஊன்றியதில் கையிலும் கால் மூட்டிலும் பலத்த அடி. கைகள் வீங்கிப் போனதால் மருத்துவரிடம் காண்பித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கை எலும்பில் சில்லு போய் பெரிய கட்டு. கால்களில் குறிப்பிடும்படியான எவ்வித பாதிப்புமில்லை. ஐந்து வார மருத்துவ விடுப்பு அனுமதி.

சரி. இங்கேயே இருந்தால் ஓய்வாக இருக்கும் நிலையில், பலவித நினைவுகள் மனதை அலைக்கழிக்கும். மேலும் எலும்பு, மூட்டு சிகிச்சைக்கு இந்தியா போய் விடுவதே சிறந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். அதனால் தாய் நாடு சென்று மனைவி, குழந்தைகளுடன் விடுப்பை கழிப்பதோடு, நாட்டிலேயே மருத்துவமும் பார்த்துக் கொண்டு வருவதென முடிவு செய்தோம்.

குறைந்த செலவில் செல்ல விமான பயணச் சீட்டு எடுத்து, பிள்ளைகளுக்காக சில பொருட்கள், திண் பண்டங்கள் வாங்கி பொதிந்து தயாராக்கினோம். கையோடு கொண்டு செல்ல ஏழு கிலோ. பொதியில் சரியாக முப்பது கிலோ.

விமான நிலைய வரிசையில் நிற்கும்போது, நமக்கு முன்னால் பயணி ஒருவர், அவசரமாகச் செல்பவரோ அடிக்கடி செல்பவரோ, கைப்பையைத் தவிர வேறெதுமில்லை. எனவே அவரிடம் சென்று, ”பாருங்கள் இவருக்கு கையில் அடிபட்டிருக்கிறது. கையில் பொருட்கள் எடுத்துச் செல்வது சிரமம். எனவே தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இவருடைய கைப்பையை நீங்கள் விமானப் பொதிகளோடு சேர்த்து விடுங்கள். இவர் அதை அந்த விமான நிலையத்தில் எடுத்துக் கொள்வார்” என்றதும் ”அதனாலென்ன போட்டு விடுவோம்” என்றவர் நமது கைப்பையை விமானப் பொதிகளோடு சேர்த்து விட்டு அதற்குண்டான சான்றையும் நம் கையில் திணித்து விட்டு உள்ளே போய் விட்டார்.

அதற்கடுத்து எங்கள் பொதியை சேர்த்து விட்டு, கிளம்ப எத்தனித்த போதுதான் தெரிகிறது. அவர் இலங்கை செல்பவர். எனது உறவினரோ திருச்சி செல்பவர். அவருடைய பொதியாக போடப்பட்ட கைப்பை இலங்கையில் இறங்கி விடுமே! அடக் கடவுளே! இதென்ன கொடுமை!

என்ன செய்வதென்று திகைத்து, பின் அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டால், ”விமானப் பொதிகளோடு சேர்த்து விட்ட பொதியை மீண்டும் எடுக்க, அவர் பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு, பின்னர் அந்தப்பொதி விமான வருகை (arrival) பகுதிக்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே, ”எங்களைப் பொறுத்தவரை, முதலில் அது உங்கள் பொதியே இல்லை. அதற்குண்டான சான்றை நீர் வைத்திருப்பதே தவறு” என்று கூறி அதையும் பிடுங்கிக் கொண்டார். பின் பலமுறை கேட்டபின், ”அது உரியவரிடம் விமானத்தில் கொடுக்கப்படும்” என்றார்.

”இப்போது வேறு வழியில்லை. உள்ளே சென்று, அவரை சந்தித்து, நிலைமையை எடுத்துக் கூறி, தயவு செய்து அந்தப் பொதியை எடுத்து air cargo மூலம் திருச்சிக்கு அனுப்பச் சொல். அதற்குண்டான செலவுக்கான பணத்தையும் கொடுத்து விடு” என்று சொல்லி அனுப்பினேன்.

உள்ளே சென்று அவரைக் கண்டு பிடித்துக் கேட்டால், ”மன்னிக்கவும். முக்கியமான ஒரு உறவினர் இறப்புக்காக நான் அவசரமாகச் செல்கிறேன். நான் இறந்தவருக்கு மரியாதைச் செய்ய வேண்டும் என்பதற்காகாவே அன்னாரது இறுதிச் சடங்குகள் செய்யப்படாமல் காக்க வைக்கப்பட்டிருக்கிறது. எனக்காக பலர் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நான் உங்கள் பெட்டி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்க இயலாது” என்கிறார். அவர் சொல்வது மிகவும் நியாயமான காரணம்.

”இப்போதென்ன செய்வது” என்று எனக்கு தொலைபேசுகிறார். நான் ”ஒன்றும் கவலையடையாதே. நடப்பது நடக்கட்டும். அது நமக்குச் சேர வேண்டிய பொருளென்றால் கண்டிப்பாக இறைவன் கிடைக்கச் செய்வான். இல்லெயென்றாலும் இறைவனின் விதிப்படி நடக்கட்டும். அவருடைய தொலைபேசி எண்ணை எனக்குக் கொடு. நான் முயற்சி செய்கிறேன். நீ விமான நிலையத்தில் duty free கடைகளில் குழந்தைகளுக்கான பொருட்களில் உன்னால் தூக்க முடியுமளவுக்கு 3 அல்லது 4 கிலோ வாங்கிக்கொள். விலையைப் பற்றி ஏதும் யோசிக்காதே” என்று சொல்லி விட்டு, SMS மூலமாக அவருக்கு முதலில் இறந்தவருக்கான அனுதாபங்களை தெரிவித்து விட்டு, கைப்பெட்டியில் எழுதியிருந்த விபரங்களையும், திருச்சிக்கு air cargo அனுப்பவதானால் எந்த முகவரிக்கு அனுப்புவது என்பதையும் குறிப்பிட்டு, இயன்றால் செய்யவும் என்றும் எழுதி அனுப்பினேன்.

அந்நண்பர் விமானத்தினுள் என் உறவினரைச் சந்தித்த போது ”இயன்றால் என் உறவினர்களிடம் சொல்லி, அதை எடுத்து வைத்து, திரும்ப இரண்டாம் நாள் நான் துபைக்கு வரும்போது திரும்பத் தருகிறேன். கண்டிப்பாக ஏர் கார்கோ அனுப்பவதென்பது இந்த நிலைமையில் இயலவே இயலாது” என்று கூறினாராம்.

இலங்கையிலிருந்து திருச்சிக்கு காலை ஏழு மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகி மதியம் மூன்று மணிக்குத்தான் கிளம்பி இருக்கிறது. திருச்சிக்கு போய் சேர்ந்த என் உறவினர் பெட்டிகள் வரும் கன்வேயரில் (conveyor belt) முதன் முதலில் கண்டது அவர் ஏழு கிலோ கைப்பையைத்தானம். அதன் பின்னர்தான் முப்பது கிலோ பொதி வந்திருக்கிறது. இரண்டையும் எடுத்துக் கொண்டு கூடவே duty freeல் வாங்கிய பைகளையும் சுமந்து, மகிழ்ச்சியோடு, அவருக்கும் மனதார வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே, இறைவனுக்கும் நன்றி சொல்லி ஊர் போய்ச் சேர்ந்தாராம்.

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். தன்னுடைய துன்பமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அவர்களால் சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறது.

நீவிர் நீடூழி வாழ்க நண்பரே!.

Post Comment

Monday 19 November 2007

கொலைகாரப் பாவிகளா!

அக்டோபர் 25 வியாழன். இடம் பஹ்ரைன். 2வது படிக்கும் 7 வயது சுஹைல். எனது நண்பருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து, பின் பிறந்த மூத்த மகன். காலையில் பள்ளிக்குப் புறப்படத் தயாராகிறான். காலையிலேயே அடுத்த இரு நாள் விடுமுறைக்காக என்ன செய்வது என தன்னையும் பெற்றோரையும் தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

சுஹைல் பள்ளி முடிந்து பள்ளிக்கூட வேனில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மிகக் குறுகிய சந்தில் உள்ள அவனுடைய வீட்டின் முன்னர் எப்போதும் போல பெரிய ஒலி எழுப்பி விட்டு வேன் நிற்கிறது. வேனிலிருந்து பிள்ளைகளை இறக்கிவிட ஒரு ஆயாவை பள்ளி நியமித்திருக்கிறது. ஆயா குழந்தையை இறங்கச் சொல்லி விட்டு, குழந்தை இறங்கி விட்டதா என சரியாக உறுதிப் படுத்தாமலேயே பக்கக் கதவை இழுத்து சாத்துகிறாள். பையனின் வலது கை விரல்கள் கதவில் மாட்டி நசுங்கிக் கொண்டிருக்கிறது. பையனுடைய அலறலைப் பொருட்படுத்தாமல் அல்லது கேட்காததால் ஆயா ஓட்டுநரைப் போகப் பணிக்கிறாள்.

கதவிடுக்கில் மாட்டிய கைகளோடு வண்டி நகர்கிறது. பையன் வண்டியில் தொங்கிக் கொண்டு. பையனின் கதியை தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த எதிர்த்த வீட்டு அரபிப்பெண் தன் ஜன்னலைத் திறந்து கொண்டு கத்துகிறாள். அவள் கத்தலைக் கேட்ட ஆயா கதவைத் திறக்கிறாள். வலது கையின் மூன்று விரல்கள் சதை நகம் வரை துண்டித்து தொங்கிய படி, மல்லாந்த நிலையில், கதவுக்கு கீழே இரு சக்கரங்களுக்கு இடையில் விழுகிறது குழந்தை. வேன் நிறுத்தப் படாததால், வலது தோள் பட்டை வழியே முகவாயை இடித்த படி வேனின் பின்புறச் சக்கரம் குழந்தையின் மேல் ஏறி இறங்கி விடுகிறது.

அதற்குள் அந்த அரபிப் பெண்ணிண் மகன் ஓடி வந்து இருபதடிகள் தூரத்தில் வேனை நிறுத்தச் செய்கிறார். 'என்ன நடந்தது என்று தெரிகிறதா?' என்று ஓட்டுநரை கேட்கிறார். தெரியாதென்கிறான். அவனை வண்டியை விட்டு வெளியே இழுத்து அங்கேயே இரண்டு முறை அவனை கன்னத்தில் அறைகிறார்.

வண்டியின் பெரிய ஒலியைக் கேட்டதால், விரைந்து வந்த தாய் மகனைப் பார்க்கும் ஆவலில் கதவைத் திறக்கிறாள். கதவின் முன்னர் யாருமற்ற நிலையில் இரத்த வெள்ளத்தில் எவ்வித சலனமுமில்லாமல் தவமிருந்து பெற்ற மகன். அலறித் துடிக்கிறாள். அரற்றுகிறாள். தெருமுனைக் கடையில் பணியிலிருக்கும் குழந்தையின் மாமன் ஓடோடி வருகிறான். போலீஸ் வருகிறது. ஆம்புலன்ஸ் வருகிறது. நெருங்கிய உறவினர்களால் குழந்தையின் அப்போதைய நிலைமையை பார்க்க முடியாது என்பதால், தெரிந்த ஒருவர், பையனின் நெஞ்சில் விட்டு விட்டு அழுத்தி முதலுதவி செய்தவாறு ஆம்புலன்ஸில் செல்கிறார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனைத் தகவல்கள்.

முதன் முதலில் Gulf Daily News எனும் ஆங்கில தினசரியில் செய்தி வருகிறது. தாய் தன் வீட்டின் ஜன்னலருகே பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பையன் வண்டியின் முன்சக்கரத்தில் அடிபட்டு, இரத்த வெள்ளத்தில் தன் மகனைப் பறிகொடுத்ததாக, யாரோ ஒருவர் நேரில் பார்த்து சொல்லியதாக செய்தி சொல்கிறது. மற்ற பத்திரிக்கைகள் அதையே காப்பியடித்து அடுத்த நாள் செய்தியாக்குகின்றன

அந்தப் பத்திரிக்கைக்கு இந்த செய்தி கொடுத்தவர் கேரள நாட்டவர் - அவர்தான் அப்பத்திரிக்கையின் Chief Reporter.

மற்ற பத்திரிக்கைகள் இந்த செய்தி தவறென்று அறியத் தந்தவுடன் மறுப்பு செய்தியை வெளியிடுகின்றன. ஆனால் இந்தப்பத்திரிக்கை மட்டும் மறுப்பதாகச் சொன்னாலும் 'தாய் - தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்ததாக' மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறது.

ஏன்? ஜன்னலிலிருந்து பார்த்ததாகச் சொன்னால் தாயைப் பார்த்த மகிழ்ச்சியில் பிள்ளை ஓடினான் எனச் சொல்லலாம். அதனால்தான் வண்டியை எடுப்பதற்கு முன்னாலேயே முன்பக்கமாக ஓடி வண்டியின் முன்னால் அடிபட்டு இறந்ததாக சொல்லலாம். பள்ளி பிள்ளையை இறக்கி விட்டு விட்டது அதன் பின்னர் நடந்ததற்கு பள்ளி பொறுப்பேற்காது என்று சொல்லலாம். மக்கள் மத்தியில், பள்ளிக்கும் சம்பவத்துக்கும் பொறுப்பில்லை என்ற கருத்துருவாக்கலாம்.

ஏன்? சீப் ரிப்போர்ட்டர் பள்ளிக்கூடம் நடத்துபவர்களின் மதத்தைச் சார்ந்தவர். ஒரே இடத்தில் பிரார்த்திக்கும் உட்பிரிவைச் சேர்ந்தவர்களாம். பள்ளிக்கூட நிர்வாகத்தோடு பல வகைகளில் தொடர்புடையவராம்.

அந்த வீட்டுக்கு வெளிப்புற ஜன்னலே இல்லை. கிராதி இருக்கிறது ஆனால் வெளியில் இருந்து யாரும் அங்கு நிற்பதை பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாது என்பதைச் சுட்டிக்காட்டி, குழந்தையின் தாய் மாமன் கேட்டதற்கு 'குழந்தையோ இறந்து விட்டது இனி பள்ளியின் பெயரைக் கெடுப்பதால் என்ன நன்மை' என்றாராம். அடக் கொலைகாரப் பயல்களே! பத்திரிக்கை தர்மம், நேர்மை எல்லாம் மலம் தின்னவா நாய்களே!.

சம்பவத்தில் தொடர்புடைய வேன் பள்ளிக்கு சொந்தமானதில்லையாம். பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு பின் அழைத்துப் போக பள்ளி நிர்வாகம் வாடகைக்கு வைத்திருக்கிறதாம். ஓட்டுநரும் அந்தக் வாடகைக்கார் கம்பெனியில் அன்றுதான் வேலையிலமர்ந்த புதியவராம். வண்டியின் கதவு சரியாக மூட முடியாமல், பழுது சரி செய்யப் படாமல் இருந்ததாம்.

[பஹ்ரைனின் இந்திய நாட்டுத் தூதுவர் நேரடியாக வந்து விசாரித்ததோடு, பஹ்ரைனில் உள்ள எல்லா இந்தியப் பள்ளிகளையும் அழைத்து ஒழுங்கு முறைகளை சரிவர கடைபிடிக்க அறிவுறுத்திய தோடில்லாமல், இந்தியர்கள் நடத்தும் வாடகை வண்டிக் கம்பெனிகளை அழைத்து வண்டிகள் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டியும் அறிவுறுத்தியதோடு, பஹ்ரைன் போக்குவரத்து காவல்துறையிடம் சரியாக இல்லாத வண்டிகளுக்கு கடுமையான தண்டணைகளை தரச் சொல்லியும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.]

குழந்தைகளை பள்ளிக்கனுப்பும் பெற்றோர்களே!. உங்கள் குழந்தையின் பள்ளி சொந்தமாக வண்டி வைத்திருக்கிறதா? நிர்வாகம் பொறுப்பானதா? ஏனோ தானோ நிர்வாகமா? சிறு பிள்ளைகளை ஆயாக்கள் ஒழுங்காக வீடு வரை வந்து விட்டுப் போகிறார்களா போன்றவற்றை இனியாவது கவனியுங்கள்.

Post Comment