Sunday 29 October 2006

மூளைக்கு வேலை (மனக்கணக்கு)

எனக்குத் தெரிந்த மிக அன்புள்ள தாத்தா ஒருவர் எப்போது பார்த்தாலும் 'சீயக்காய்குச்சி' என்று எழுதி அதை படிக்கச்சொல்வார். படித்தால் மகிழ்வார். அவர் மளிகைக்கடை வைத்திருந்த போது இவ்வாறுதான் எழுதி வைப்போம் என்று என்னென்னவோ கதை சொல்வார். கடைசி வரை அது என்ன பொருள் என்று மட்டும் எனக்கு விளக்காமலேயே இறந்தும் விட்டார். அவரது அன்புக்காக இறைவன் அவருக்கு நற்பதவி தரட்டும்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்கேயாவது நம் தாத்தா வயதுள்ளவர்களோடு பேச நேர்ந்தால் நம்முடைய புத்திசாலித்தனத்தை எடைபோட அல்லது அவர்கள் திறமையைக் காட்ட மனக்கணக்கு சொல்லி பதில் சொல்லச் சொல்வார்கள். பல நேரங்களில் அது அறுவைக் கணக்காகவும் சில நேரங்களில் உண்மையிலேயே புத்திசாலித்தனமாகவும் இருக்கும். பல நேரங்களில் நான் சொல்லி விடுவதுண்டு.

அது போன்ற சில உண்மையான நேரான கேள்விகள். இங்கே இரண்டு கணக்குகளும் ஒரு சமயோசித புத்தி பற்றியதும் உள்ளது. முன்பொரு காலத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்தது.

இந்தக் கேள்விகளை என் உறவினர்கள் நண்பர்களிடம் கேட்டபோது பொதுவாக நான் புத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

எல்வோரும் முயற்சி செய்து பின்னூட்டமிடலாமே. சரியான பதில்கள் வராவிட்டால் கடைசியில் நான் பதில் தருகிறேன்.

1. இதை நிறைய முறை படித்திருப்பீர்கள்.
ஒரு குளத்தில் ஒரு வகைப்பூவை இட்டால் அது அடுத்த நாளில் இரட்டித்து விடும். அந்தக் குளத்தில் முதல் தேதியன்று அந்தப்பூவில் ஒன்று போடப்பட்டது. இரண்டாம் தேதி அந்தப்பூ இரண்டானது. மூன்றாம் தேதி நான்கானது. நான்காம் தேதி எட்டானது. இவ்வாறு இரட்டித்து இரட்டித்து முப்பத்தோறாம் தேதி பூக்களால் குளமே நிரம்பி விட்டது.
என்றால் பாதி குளம் நிரம்ப எத்தனை நாள் பிடித்திருக்கும்?

2. மூன்று நண்பர்கள் நடை பயணமாக வெகுதூரம் பயணித்தனர். அதில் முதலாமவர் தன்னுடன் ஐந்து அப்பங்களை கொண்டு வந்தார். இரண்டாமவர் மூன்று அப்பங்களை கொண்டு வந்தார். முன்றாமவர் உணவு ஏதும் கொண்டு வரவில்லை.
அவர்கள் நீண்ட தூரம் பயணித்த பின் பசியெடுக்கவே இருந்த எட்டு அப்பங்களையும் மூவரும் சரியாகப் பகிர்ந்து உண்டனர். மூன்றாமவர் உணவுக்காக எட்டு ரூபாய்களைக் கொடுத்து இருவரையும் பகிர்ந்து எடுத்துக் கொள்ள சொல்லி விட்டார்.
இருவரும் எவ்வாறு பகிர்ந்து கொண்டால் சரியானது?.

3. ஒருவருக்கு மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவர் அத்தண்டனையிலிருந்நத தப்ப மன்னராலேயே ஒரு வழியும் பரிந்துரைக்கப்பட்டது.
சிறையின் அறையிலிருந்து வெளியேற இரு பக்கம் பாதைகள் உண்டு. ஒரு பாதையில் சென்றால் பசியுடன் பல சிங்கங்கள் உலாவும் அறைக்கு சென்று அவற்றுக்கு இரையாகலாம். மற்றொரு வழி சென்றால் தப்பித்து விடலாம். ஒவ்வொரு பாதைக்கும் ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலாளிகளில் ஒருவர் எப்போதும் பொய்யே சொல்வார். மற்றவர் எப்போதும் உண்மையே பேசுவார். இருவரில் பொய்யர் யார் மெய்யர் யார் என்று காவலாளிகளுக்குத்தான் தெரியும். சிறைப்பட்டவருக்கு அறிவிக்கப்படவில்லை. ஏதாவது ஒரு காவலாளிடம் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு பாதையறிந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சிறைப்பட்டவர் என்ன கேள்வி கேட்டு தப்பித்திருப்பார்?.

நீங்களும் விடை சொல்ல முயற்சி செய்து பாருங்களேன்

Post Comment

Wednesday 25 October 2006

எழில், சுவனப்ரியன் மற்றும் இப்னு பஷீருக்கு

சுவனப்ரியனும் இப்னுபசீரும் இறைத்தூதர்கள் பற்றி சொல்ல அதை விதண்டாவாதங்களின் மூலம் மறுதலிக்கும் பேதமையை அல்லது பதில் கிடைத்த பின்னரும் வெறும் வெற்று விவாதங்களாக மென்மேலும் உருவாக்குகிறார் எழில்.

உண்மையை உணர முயற்சிப்பவர்களுக்கு விவாதம் பயன்தரும். ஆனால் வெறும் விவாதங்களையே நோக்கமாகக் கொண்டவர்களுக்கு மென்மேலும் விவாதத்திற்கான கேள்வியை உருவாக்குவது ஒன்றும் சிரமமான காரியமில்லை. பதிலையே கேள்விகளாக்;கும் குழந்தைகள் போல.

இறைத்தூதர்கள் என்போர் யார் என்பதை சுவனப்ரியன் விளக்கிய பின்னர்
குர்ஆனுக்கு முன்னர் நான்கு பேர் தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டால் நாம் சரியானவரை எப்படியறிவது என்பதுதான் எழிலுடைய கேள்வி.

ஓவ்வொரு காலத்திலும் மிகைத்த அறிவையும் அற்புதங்களையும் கொண்டு இறைத்தூதர்களை இறைவன் பலப்படுத்துவான். நம் அறிவைக் கொண்டு மனமுரண்டில்லாமல் அந்த உண்மையின் நம்பகத்தன்மையை அறிந்து தெளிந்து அவர்களைப் பின்பற்ற வேண்டும். யார் அவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அத்தகைய உயர்ந்த இறைவன் உண்மையிலிருந்து பொய்யை பிரித்தறிவிப்பான். தன்னுடைய காரியங்களில் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன்.

உண்மையில் நடந்த ஒன்றில் இறைவன் எப்படி வேறுபடுத்தினான் என்று கேட்டால் .... இப்படி என்று விளக்க முடியும்.
கற்பனையில் கேட்கப்பட்ட ஒன்றிற்கு கற்பனைக்கு சொந்தக்காரர்தான் இன்னின்ன காரணங்களால் வேறுபடுத்த முடியாது என்று நிறுவ வேண்டும். வெறும் கேள்விகளும், கிடைக்கின்ற பதிலில் இன்னொரு கேள்வியையும் உருவாக்குவது சிறுபிள்ளைத்தனமானது.

நபி மூஸாவுடைய காலத்தில் மந்திர தந்திரங்களில் மக்கள் உச்சத்திலிருந்தனர். அப்போது நபி மூஸாவை அந்த மந்திரவாதிகள் எல்லோரையும் மிகைக்க கூடிய மந்திர சக்தியைக் கொண்டு இறைவன் பலப்படுத்தினான். நபி மூஸாவுடைய சக்தி இறைவனிடமிருந்து வந்ததுதான் என்பதை அந்த மந்திரவாதிகள் அனைவரையும் உணரச்செய்து 'மாறுகால் மாறுகை வெட்டப்பட்டாலும்' அதுதான் உண்மை என்பதை கொடுங்கோலனான ஃபிர்அவ்ன் முன்பிலேயே அந்த மந்திரவாதிகளைக் கொண்டு கூறச்செய்தான். எழிலைப் போலவே ஃபிர்அவ்னும் உண்மையை உணர முடியாதவனாகினான்.

நபி ஈஸாவுடைய காலத்து மக்கள் தாங்கள் மருத்துவத்துறையில் உச்சத்திலிருப்பதாக நம்பினர். அப்போது இறந்தவர்களை இறைவனின் நாட்டத்தால் உயிர்ப்பித்ததன் மூலமும், இன்னபிற சான்றுகளின் மூலமும், அந்த நம்பிக்கையிலிருந்தவர்களை நபி ஈஸாவுடைய சக்தி இறைவனிடமிருந்து வந்ததுதான் என உணர வைக்க முடிந்தது. அப்போதும் எழிலைப்போல கேள்வி கேட்டு எள்ளியவர்கள் இல்லாமலில்லை.

இறுதி நபி முஹம்மதுவின் காலகட்டத்தில் இலக்கிய ஈடுபாடும் கவிதையுணர்வும் மேலோங்கி தம்மை மிகைப்பவரில்லை என்ற எண்ணம் அரபியர்களிடையே வேரூன்றியிருந்தது. இறுதி நபி முஹம்மதுக்கு கவிதையிலும் உரைநடையிலும் இலக்கிய நயத்திலும் ஒப்புவமையில்லாத குர்ஆன் எனும் அற்புத வேதத்தைக் கொடுத்து 'நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் இது போன்ற ஒரிரு வசனங்களையாவது கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என சவால் விடச்செய்து' தம் வல்லமையைக் கொண்டு இறைவன் பலப்படுத்தினான். குர்ஆனைப் படித்தும் கேட்டும் அறிந்த அம்மக்கள் இது இறைவனிடமிருந்து வந்ததுதான் என உணர்ந்து அவர் தூதுத்துவத்தை ஏற்றனர். அப்போதும் எழிலைப்போன்ற முன் முடிவுகளோடு இருந்தவர்களுக்கு குதர்க்கமான வேறு கேள்விகள் தோன்றாமலில்லை.

எனவே எத்தனை பேர் தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டாலும் இறைவன் தான் தேர்ந்தெடுத்த உண்மையான தூதரை தம்மிடமிருந்து மறுக்கவியலாத அத்தாட்சிகளைக் கொண்டு பலப்படுத்துவான். காமாலைக் கண்ணர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது புரியவும் செய்யும். காமாலைக் கண்ணர்களுக்குப் புரிந்தாலும் புரியாத மாதிரி நடந்து கொள்வர். புரிய மறுப்பவர்களுக்குத்தான் மறுமையில் பேரிடரும் அழியமுடியாத் துன்பமும் என்று அவனே பிரகடனப்படுத்துகிறானே.

இன்னும் கேள்விகள் எழுந்தால் அது உணரமுடியாதவர்களின் குற்றமேயன்றி வேறென்னவாயிருக்கும்?. இவருக்காக நேரம் ஒதுக்கி சிறந்த பதிவுகள் இடும் சுவனப்ரியனும் இப்னுபசீரும் காலத்தை வீணடிக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகொள்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை மேலும் விளக்குவோம்.
எழில் 'என் தந்தையார் எனக்கு சிறந்த அறிவுரைகள் கூறியிருக்கிறார். அவற்றை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் என்னால் உயர முடிந்தது. இந்த நல்ல அறிவுரைகளை மற்றவர்களும் பின்பற்றுவதன் மூலம் அவர்களும் சிறந்தவராகலாம்' எனக்கூறுவதாகக் கொள்வோம்.

இப்போது திரு.எழிலிடம் 'நீங்கள் குறிப்பிடும் நபரை உங்கள் தந்தையென்று சொல்லாதீர்கள். உங்கள் தாய், உம்முடைய தந்தையாக உமக்கு அறிமுகப்படுத்திய நபர்' என்று சொல்லுங்கள் என்று சொன்னால் எழிலுக்கு கோபம் வரும். மரபணு சோதனை மூலம் அவரை என் தந்தையென்று நிரூபிக்க முடியும் என்று அவர் சொல்வார். அப்போது

'முற்காலத்தில் நான்கு நபர்கள் ஒருவரின் தந்தையென்று வாதிட்டனர். மரபணு சோதனைகளை அறியாத காலம். அப்போது தந்தையென்று எப்படி நிருவுவீர்கள். எனக்கு எந்த காழ்ப்புணர்வுமில்லை உண்மையறியும் ஆர்வம்தான்' என விதண்டாவாத கேள்விகள் கொண்டு வாதிட்டால் என்ன செய்வது.

இறைத்தூதர் குர்ஆனைக் கொண்டு சொல்பவற்றை விளக்கும்போது அவரை இறைத்தூதர் என்று சொல்லாதீர்கள் என்பதும், குர்ஆனின் அத்தாட்சிகளைக் கொண்டு அதை நிறுவ முற்படும்போது, (குர்ஆனின் சான்றுகளை எதனால் ஏற்க முடியாது என்ற காரணங்களைக் கூறுவதை விடுத்து) அதிலே மேற்கொண்டு விதண்டாவாதங்கள் புரிவதும் மேற்கூறப்பெற்ற நிலைதான்.

எனவே இனியும் இவ்விஷயத்தில் பதில் சொல்ல வேண்டாம். ஏனெனில் விதண்டாவாதங்களுக்கு பதில் சொல்லிப் பலனேதுமில்லை என நான் நம்புகிறேன்.
(நபி என்பதற்கு இறைத்தூதர் என்பது பொருளாகும்).

Post Comment

Sunday 22 October 2006

என் கவலைதான் மிகப்பெரியது

சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??


படித்துப் படித்து நீங்கள் சலிப்படைந்து விடுகிறீர்களா?


இவர்களுக்கு படிப்பது சலிப்பைத் தரவில்லை!


உங்களுக்கு பச்சைக் கீரைகளும் காய்கறிகளும் பிடிப்பதில்லை...?


இவர்களுக்கோ வேறு வழியில்லை!


நீங்கள் எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டை கையாள்கிறீர்கள்...?


அவர்கள் உண்ண விரும்புகிறார்கள்....


உங்கள் பெற்றோரின் மிகக் கூடுதலான கவனிப்பு உங்களை வருத்துகிறது.....?


அவர்களுக்கோ... பெற்றோர்களே இல்லை!


ஒரே மாதிரியான விளையாட்டு உங்களுக்குப் போரடிக்கிறது....?


அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை!!!


வீட்டில் 'அடிடாஸ்' வாங்கி தருகிறார்கள்... உங்களுக்கு 'நைக்'தான் பிடிக்கிறது...?


அவர்களுடைய 'பிராண்டு' இது மட்டும்தான்...!!!


உங்களைப் படுக்கைக்கு போகச் சொல்லி தொல்லை படுத்துகிறார்களா...?


அவர்கள் எழும்பவே விரும்பவில்லை

குறை சொல்வதை தவிருங்கள்.....


ஒரு வேளை, எல்லாம் தெரிந்திருந்த பின்னும்,
உங்கள் கவலை போகவில்லையென்றால்


உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பாருங்கள்....
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
இந்த குறைந்த ஆயுளில்
உங்களை இத்துணை வசதியுடன்
வாழ வைத்ததற்காய்


• மிகுந்த பணிவோடு சொல்லுங்கள்

• என் இறைவனே! என்னில் இத்துனை கருணை பொழிந்ததற்காகவும், என் உடல் நலம்,
என் குடும்பம், என் குழந்தைகள், என் வேலை, என் நண்பர்கள் மற்றும் அனைத்து
அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

• உன்னை மறந்தவர்களும், உன்னை அறியாதவர்களும் உன்னையும், நீ செய்துள்ள
அளப்பறிய கருணையையும், உன் அன்பையும் அறிவுறுத்த எனக்கும்
ஒரு வாய்ப்பைக் கொடு.

குறைவாகக் கேட்பதையும்
கூடுதலாக நன்றி செலுத்துவதையும்
எப்போதும் உங்கள் நினைவிலிருத்துங்கள்.

Post Comment

Thursday 19 October 2006

பதிவர்களுக்கு அழைப்பு-2

முந்தைய பதிவைப் பார்த்து விட்டீர்களா?
இடமெல்லாம் பிடித்திருக்கிறதா?
மீதத்தையும் பார்த்து விட்டு confirm பண்ணலாமே

விருந்தினர் அறையின் பலகணியிலிருந்தபடியே
மீன்கள் நீந்துவதை வேடிக்கைப் பார்க்கலாம்


இல்லையெனில் அறையின் கண்ணாடித்தரை மூலமும் பார்க்கலாம்.
ஞாபகம். மீன்களுக்கு உணவெதுவும் இடவேண்டாம்.
நீங்கள் கழிப்பறையில் விடும் கழிவுகளே அவை விரும்பியுண்னும் உணவு.


உங்களுக்கு வரவிருப்பமென்றால் உடனே தெரியப்படுத்துங்கள்.
அப்போதுதான் நான் பாக்கி காரியங்களையும் செய்து முடிக்க
வசதியாய் இருக்கும்.

வாகன வசதிக்கென்று ஏதும் கவலைப்பட வேண்டாம்.
ஒரு ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட cruise ship மூலம்
உங்களை sea portலிருந்து ஏற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.


உங்களுக்கு seaport வந்து சேர வழி தெரியாதுதானே. கவலையேயில்லை. நானும் அதைப்பற்றி யோசித்தேன். அதற்குத்தான் எல்லா வசதிகளோடும் உள்ள ஒரு லக்ஸரி பஸ் வாடகைக்கு எடுத்துள்ளேன்.

பஸ் எப்படி? 12 சக்கரமுள்ளது. மிகவும் பாதுகாப்பானது

பேருந்தின் உள்புற வசதிகளையும் சொகுசையும் அனுபவிக்கலாம்..

பேருந்தின் உட்புறத்தின் வேறொரு தோற்றம்.
பேருந்தின் lounge மற்றும் பழச்சாறு அருந்துமிடம்.

அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டே உங்களுக்குப் பிடித்த வீடியோ போட்டுப் பார்க்கலாம்

ஓ..... சுத்தமாக மறந்தே போய் விட்டது.
இது நேற்று நான் பார்த்த கனவில் கண்ட காட்சிகள்.
ஏதாவது பின்னூட்டமிட்டு விட்டு, பதிவை மூடி விட்டு,
உங்கள் வேலையைத் தொடரலாமே!.

நன்றி: ரவி ஷர்மியின் மெயிலுக்கு.

Post Comment

பதிவர்களுக்கு அழைப்பு-1

என்னுடைய புதிய வீட்டில் கடற்கரை barbecue விருந்துக்கு
பதிவர்களுக்கும் வலைமேய்ந்து பின்னூட்டபிடுபவர்களுக்கும்
என் தனிப்பட்ட அழைப்பு.
(வருவதற்கான வழிக்கு வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது)


படத்தில் அம்புக்குறியிட்ட இடம் விருந்துக்கு சிறப்பாக இருக்கும்.
(ஏனெனில் முழுத்தீவுமே நம் வசமிருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லை என்ற பேச்சே இருக்காது.)


கீழே உள்ளதுதான் என்னுடைய சிறிய கூரை வேயப்பட்ட வீடு


விருந்தினர் அறையின் பலகணி.
நல்ல கடல் காற்றோட்டம்.
பார்வைக்கும் விருந்து
உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.


கீழேயுள்ள படம் விருந்தினர் அறை


மாலை நேரத்திற்கான பழமும் பழரசமும் தயார்


தொலைக்காட்சிப் பெட்டியில் தகராறென்றால் கவலையில்லை
TV satelite control சிஸ்டம், bath tub பின்னால்தான் உள்ளது.


இதுதான் படுக்கை. வசதி குறைவென்று நினைத்தால்...
தீவின் பல இடங்களில் 'net'டும் இருக்கிறது


விருந்து முடிந்த பின் massage செய்யவும் ஓய்வு எடுக்கவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்


வெளிச்சம் கொஞ்சம் சரி பண்ணியாகி விட்டது. இருந்தாலும் refine செய்ய வேண்டியதிருக்கிறது.


வீட்டிற்கு வருவதற்கான பாதை


அழைப்பு நீண்டதாகத் தெரிகிறது.
எனவே மிகுதியைத் அடுத்த தொடரில் தொடர்ந்து பார்த்து விட்டு
அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

அடுத்த பதிவும் வந்து விட்டதே! அதையும் பார்த்து விட்டு வரலாமே?

Post Comment

Monday 16 October 2006

லெகிடுக்கார கிழம்

(யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் நன்றாக உண்டுவிட்டு கண்ணில் படுபவர்களையெல்லாம் வீணாக வம்பிக்கிழுத்து கிண்டல் செய்து பொழுது போக்குபவர்களை லெகிடுக்காரன் என்று எங்களுரில் சொல்வார்கள். அது போன்ற லெகிடுக்கார கிழவரைப் பற்றிய கதையிது. அந்த மனிதரை நான் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அவரா இவர் என நினைக்கத் தோன்றும் மனிதர்.)

ஊரில் ஓரிரு மளிகைக் கடைகளே இருந்த அந்தக் காலம். சாப்பிட்டு விட்டு செட்டியார் கடைக்குப் போனால் கிழவரைப் பார்த்ததும் வம்பு வேண்டாமேயென்று செட்டியார் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலைப் பொட்டலம் கொடுத்து விடுவார். சும்மா வாங்கினாலும் செட்டியாரை என்னவோ கொடுக்கப் பணிக்கப்பட்டவர் போலத்தான் கிழம் பார்க்கும், பேசும்.

ஒரு தடவை கிழம் வந்ததை செட்டியார் கவனிக்காமல் வியாபாரத்தில் கவனமாயிருந்து விட்டார். கிழம் கனைத்துப் பார்த்தும் பெரிய கிராக்கி பொய் விடுமேயன்று செட்டியாரும் அலட்டிக் கொள்ளவில்லை. பல முறை கனைத்தும் பயனில்லாததால்
'செட்டியாரே! என்ன இன்னைக்கு மாமூல் மறந்திடுச்சா?' கிழத்தின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.
'ஓசுல தானே! கொஞ்சம் பொறுமையாயிருந்தா குறைஞ்சீடுமா? அதிகாரம்ல பறக்குது. கைவேலையா இருக்கனெ தெரியலயா?' செட்டியாரும் பதிலுக்கு.
'அவ்ளதானே! ஒரு பொட்டலம் கொடுக்காமப் போனேன்னு நினைச்சுப் பாப்பையா நீ?'
'அதுக்கு வேற ஆளப்பாரு. குடுத்த வச்ச மாரில இருக்கு'

அவ்வளவுதான். கிழம் விசுக்கென்று போயே விட்டது.
செட்டியாருக்கும் தினம் இரண்டு பைசா சாமான் மிச்சமாகப் போகிற திருப்தி.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை கடை காலையில் லீவு. செட்டியாரு சாவகாசமாக வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டைவண்டி, நிறைய ஆட்களுடன் செட்டியார் வீட்டு முன் நிற்கிறது. கட்டைவண்டியை விட்டு இறங்கிய தடிமனான பெண் ஓங்கிக் குரலெடுத்து செட்டியாரைப் பார்த்ததும் முகம் அஷ்ட கோணலாகி சட்டென்று அமைதியாகிறது. வராமல் வந்திருக்கிற சொந்தக்காரர்களை பார்த்துதம் செட்டியார் எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துப் போகிறார். குசலம் விசாரிப்புகள்....... இத்யாதி... இத்யாதி.

பின்னாலேயே அடுத்த வண்டி, அதன் பின் அடுத்த வண்டி, அதன் பின் அடுத்த வண்டி, இப்படியாக பத்துப் பதினைந்து வண்டிகள். வண்டி நிறைய செட்டியாரின் சொந்தங்கள்.
வீட்டில் இடமில்லாத அளவுக்கு வீடு நிரம்ப சொந்த பந்தங்கள். குசலம் விசாரிப்புகள்.......குசு குசு பேச்சுக்கள்... இத்யாதி... இத்யாதி.

வீட்டுச் சட்டி போதாமல் பள்ளியில் தேக்ஸா (150 பேருக்கு உணவு தயாரிக்கும்படியான பெரிய சட்டி) எடுத்து வந்து திண்ணைப் பக்கமாக விருந்தினர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் சைக்கிளில் வேர்க்க விறுவிறுக்க கிழவர் வந்து கொண்டிருப்பதை பார்த்த செடடியாரிடம் பேசிக் கொண்டிருந்த சொந்த பந்தங்கள் கிழத்தை ஒரே அமுக்காக அமுக்கி செட்டியாரிடம் தூக்கிச் சென்று
'செட்டியாரே கோவிச்சுக்கப்படாது. இந்தக் கிழம் ஊர் ஊரா வந்து நீங்க செத்துட்டதா சொல்லி இங்க எங்களை வரவழைச்சிடுச்சு' கும்பலில் ஒரு பெரிசு குழைந்து கொண்டே சொன்னது.
'அதானே! நாங்கூட ஏதுடா சொல்லி வச்ச மாரி எல்லா சொந்தமும் ஒரே நேரத்திலே வந்திருக்கேண்ணு கொழம்பிட்டேன்' செட்டியார்
'உங்க முகத்துக்கு மின்னாடி எப்டி சொல்றதுண்டுதான் ஒன்னும் சொல்லல' இன்னொரு சொந்தம்.

'ரெண்டு பைசாவுக்கெல்லாம் பார்த்தா.... வருஷஞ்செலவும் மொத்தமா வச்சுட்டேண்ல' கிழம் சொல்லிட்டு சிட்டாய்ப் பறந்து விட்டது.

அதற்குப்பின் பொட்டலம் கிழம் வருவதற்கு முன்னமே ரெடியாக இருந்தது என்று சொன்னால் நம்பும் படியாகவா இருக்கிறது. ஆனால் இது உண்மைதானென்று சத்தியம் செய்ய எங்களூரில் ஆளிருக்கிறது.

(முதியவர்களை கிழம் என்று சொல்வது தப்பு. லெகிடு பண்ற முதியவரை கெழம் ன்னாதான் கதை ஜோரா போகும்னு. என்றாலும் மன்னிக்கவும்.. நண்பர்களே!)

Post Comment

குட்டையான மரம்


(இந்தக் கவிதை சரியாய் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆகஸ்ட் மாதத்தில் எழுதியது)

பட்டுப் போன்ற அந்த மரம்
வானளாவிய உயரம்!
நான் பார்த்துப் பார்த்து பிரமித்த
மிகப்பெரும் உயரம்!.

இடையில் சின்னாட்கள்
ஏனோ என் விழியில்
அதன் உயரம் சுருங்கிச் சுருங்கிச்
சின்னதாய்
மிகவும் சிறுத்துப் போனது.

உயர்ந்த மரம் குறைந்ததற்காய் வருந்தினேன்.
வருந்தி வருந்தி என்னை வருத்தினேன்.
அந்த மரம் இவ்வளவு குட்டையாகிப் போனதே!!

சூழ்நிலை சத்தம் போட்டு என்னை விழிப்பித்தது.
அந்த மரம் தானாகவா குட்டையானது?
ஹூம்....
இதயமெல்லாம் பாழாய்ப் போன - அந்தப்
பூச்சிகளல்லா அதை சுருக்கியது.

தான் குட்டையாகிப் போவதை மரம் விரும்பவில்லை.
ஆனால் அது மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால்.....
தொடர்ந்து தாக்கப்படுவதால்......
குருகித் தீர வேண்டிய அபாயம்!
வேறு வழியில்லையதற்கு!!!

இப்போதும் வருந்துகிறேன்
அந்த மரம் குட்டையாகி விட்டதே!
பாவம்! அந்தப் பூச்சிகள்!
மரத்தைத் தாக்கச் சொன்னது யாராம்?
இந்தச் சூழ்நிலைதான்....

பூச்சியின் எண்ணம் போலவே
சாட்சிகள் அதன் பார்வைக்கு
சாதகமாகி விட்டதால் - அவை
திசையறியாமல் மீண்டும் மீண்டும்
மரத்தைத் தாக்குகிறது.

உயரத்தில் குறைந்தாலும்
இப்போது என் மரம்
உயரமாய்......
முன்னை விட கம்பீரமாய்.....
அழகாய்.......
என் கண்களுக்கு காட்சி தருகிறது!.

Post Comment