Wednesday, 25 February 2009

இந்தியாதான் முதல் இடத்தில்!!! பகுதி 2

இந்தியாதான் முதல் இடத்தில் - முதல் பகுதி படித்தீர்களா?


1947லிருந்து நடைபெற்று வரும் பெரும் கொள்ளை. நம் பணத்தை நாம் திரும்பப் பெற இயலுமா? உயர்ந்த பதவிகளிலுள்ள சிலர் இந்தியாவின் சாதாரண மக்களிடம் அடித்துள்ள இந்த கொள்ளைதான் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரியது. இது அரசியல்வாதிகளாலும், அதிகார வார்க்கத்தினராலும், சில தொழிலதிபர்களாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. இக்கொள்ளையில் ஈடுபடாத துறையே இல்லையென்னுமளவுக்கு எங்கும் வியாபித்த கொள்ளை. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை ஏனெனில் இந்தியாவில்தான் தண்டணை பற்றிய பயமோ வேறெந்த பயமோ இன்றி துணிந்து கொள்ளையிட முடியுமே.


ஆனால் இதில் மனதை அதிகம் வருத்தும் அதி முக்கிய நிகழ்வு என்னவெனில் கொள்ளையடித்த அப்பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யாமல் வரிவிலக்குள்ள வேறுநாடுகளில் போட்டு வைப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான். இந்தியாவை ஏழை நாடாக மாற்றியதுதான்.

நம்மைப் போன்ற இங்குள்ள சாதாரண மக்களுக்கு இது போன்ற வரிவிலக்கு நாடுகளில் பணத்தைப் போட்டு வைப்பதற்கான சரியான வழிமுறைகள் தெரியாவிட்டாலும், இது போன்று மக்களை ஏய்த்துக் கொள்ளையடிக்கும் பணங்கள் சுவிஸ் பேங்க் அக்கவுண்டுக்கு போகிறது என்று தெரிந்தே இருக்கிறது.

உண்மையில் சில பொருளாதார மேதைகளின் கூற்றுப்படி இந்த வரியற்ற வங்கிக்கணக்குத் திட்டமே மேலை நாடுகள் எழை நாடுகளை ஏய்க்க வகுத்துள்ள திட்டமே ஆகும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இத்தகைய வங்கிகள் வளர்ந்து கிளை பரப்ப அனுமதிப்பதன் மூலம் மேலைநாடுகள் வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள சிறிய மூலதனத்தையும் பணக்கார நாடுகளை நோக்கி இழுக்கிறார்கள்.

உலகின் 70 நாடுகளில் இதுபோன்ற வரியற்ற வங்கிக் கணக்குகளின் முலம் பெரும் பணமுதலைகள் 11.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்துள்ளதாக 2005ம் ஆண்டில் வந்த Tax Justice Network (TJN) நிறுவனத்தின் ஆராய்ச்சிகள் அறிவித்தது. இந்த TJN நிறுவனத்தின் Raymond Baker தனது Capitalism's Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System என்ற புத்தகத்தில் 1970ஆண்டின் மத்தியிலிருந்து இதுவரை சுமார் 5ட்ரில்லியன் டாலர்கள் ஏழை நாடுகளிலிருந்து மேலை நாடுகளுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உலகத்தின் சொத்துக்களில் 57 சதவீதத்தை இத்தகைய குறுக்கு வழிகளில் உலகத்தின் ஒரு சதவிகிதமே உள்ள சில பேர் அனுபவிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பணம் எவ்வளவு என்பதை அவரவர் கணிக்கட்டும். ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இத்தகைய குறுக்கு வழி வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள பணம் யாவும் நியாயமற்ற வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றி மக்களைச் சரண்டி சேர்க்கப்பட்டவை.

இத்தகைய வங்கிகளில் பணம் சேமிக்கப்படுவது அதன் மிகக்குறைந்த வரி அல்லது வரியற்ற தன்மைக்காக அல்ல மாறாக, கணக்கின் உரிமையாளர்களைப் பற்றிய தகவல்கள் அதி ரகசியமாக பாதுகாக்கப்படுவதுதான் காரணம். போபார்ஸ் ஊழலில் அதன் உண்மையான பயனாளியை இந்தியா கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு கூட இத்தகைய ரகசிய கணக்குகளே காரணம்.

நாம் நமது சிந்தனைகளை ஒன்று படுத்துவோம். அந்தப் பணத்தை இந்தியாவிற்கு திரும்பப் பெற உண்டான வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம். தேர்தல் நெருங்கி விட்டது. இதை மக்கள் மத்தியில் நம்மால் இயன்ற வழிகளில் கொண்டு செல்வோம். சுவிஸ் வங்கிக் கணக்குகளை கேட்டுப் பெற அரசை மக்கள் மூலம் வலியுறுத்துவோம்.

இந்தியாவின் சொத்து ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது.

[குறிப்பு: இதற்கான முயற்சியில் இது தொடர்பான என் இவ்விரு பதிவுகளையும் யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓவரா அலட்டிக்கிறேனோ :( ]

Post Comment

Tuesday, 24 February 2009

இந்தியாதான் முதல் இடத்தில்!!!


நம்மை விஞ்ச எந்த நாடும் இல்லை. அமெரிக்கா முதல் ஐந்து இடத்திற்குள் கூட இல்லை. இதை ஒலிம்பிக் போட்டியில் வைத்திருந்தால் தங்கப்பதக்கம் நமக்கே நமக்கு. அதை விட உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து கூட இந்தியாவை முந்த முடியவில்லையாம். நிரம்ப மகிழ்ச்சியா அல்லது இந்திய வறுமையைப் பற்றி நான் கிண்டலாக குறிப்பிடுவதாக எண்ணுகிறீர்களா?.

உலக நாடுகள் அனைத்தையும் சேர்த்தாலும் அதை விட கூடுதலாக சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பது இந்திய நாட்டினர்தான். இரண்டாவதாக உள்ள ரஷ்யா இந்தியாவை விடவும் நான்கு மடங்கு குறைவு. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

உலக நாடுகள் கொடுத்த கெடுபிடிகளின் காரணமாக, தனது நாட்டில் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களைத் தர சுவிஸ்நாடு தற்போது தயாராக இருக்கிறது. ஆனால் அதை அந்தந்த அரசாங்கங்கள்தான் கேட்டுப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது.

நம் அரசு கேட்குமா? ஏன் கேட்காது என்பதற்கு காரணங்களை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நம் அரசை கேட்கச் செய்ய நாம் அழுத்தமான இயக்கமாக இயங்க வேண்டும். இதை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது நல்ல இந்தியனின் முன்னுள்ள முக்கிய கடமை. நேர்மையான இந்தியரே! தார்மீகப் பொறுப்பு ஏற்க முன் வாருங்கள்.

இந்தியா ஏழை நாடா? யார் சொன்னது? சுவிஸ் வங்கிகளிடம் கேட்டுப் பாருங்கள். இந்திய கள்ளக் கணக்கு சொத்தின் மொத்த மதிப்பு 1500 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்தியாவின் வெளிநாட்டுக் கடனை 13ஆல் பெருக்க வரும் தொகை. அதாவது 13 மடங்கு. இந்தப் பணத்தைக் கொண்டு 45 கோடி மக்களுக்கு, ஆளுக்கு ஒரு இலட்சம் தர இயலும். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?


இவ்வளவு பெரிய தொகையும் நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் IAS, IRS, IPS அதிகாரிகள் ஆகியவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இவை மக்களைச் சுரண்டியதாலும் ஏமாற்றியதாலும் வந்தவை. சுரண்டப்படும் அந்த ஏழைக்குச் சொந்தமானவை. சிந்தியுங்கள்!!! அவை உனக்கும் எனக்குமானவை, இந்திய மக்களுக்குச் சொந்தமானவை!.

இந்தப் பணம் முழுதும் திரும்ப பெறப்பட்டால் 24மணி நேரத்துக்குள் இந்தியக் கடனை அடைத்து விடலாம். மிகுதியுள்ள 12மடங்கு தொகையையும் வருவாய் வரும் நல்ல வழிகளில் முதலீடு செய்தால், வரும் லாபம் மட்டுமே இந்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் தொகையை விட கூடுதலாகும். எல்லா வரிகளையும் நீக்கி விட்டாலும் கூட இந்தியாவை சுலபமாக வழி நடத்த முடியும்.

"ஒரு ஆண்டில் சுமார் 80000 பேர் சுவிஸ் நாட்டுக்குப் போகிறார்கள். அவர்களில் 25000 பேர் அடிக்கடி போகின்றார்கள். இவர்களனைவரும் சுற்றுலாவுக்காக மட்டும் செல்லவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வேறு என்ன காரணம்?" என்று தவறான பணப்புழக்கத்தை கண்காணிக்கும் துறையின் ஒரு அதிகாரி கேட்கிறார். அவர் கேட்பது, World Trade Organisationல் நடக்கும பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருப்பதால் ஜெனீவாவுக்கு தொடர்ந்து போய் வந்து கொண்டிருக்கும் வணிக அமைச்சின் அரசதிகாரிகளைப் பற்றியதல்ல என்பது புரிகிறதா?.

நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்ய அதிகாரிகள், கிரிக்கெட்காரர்கள், சினிமா நடிகர்கள், செக்ஸ் வியாபாரிகள், பாதுகாக்கப்பட்ட உயிரினக் காவலர்கள் போன்றவர்கள் இந்தியாவின் சொத்து சுகத்தை சூறையாடி எவ்வளவு குவித்துள்ளார்கள் என்பதை மேலும் படியுங்கள். இங்கே சொல்லப்பட்டிருப்பது சுவிஸ்நாட்டு கணக்கு மட்டும்தான். மற்ற வெளிநாட்டு வங்கி கணககுகள்??

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் பற்றிய Swiss Banking Association உடைய 2006ம் ஆண்டு அறிக்கையின் படி சுவிஸ் நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள வெளிநாட்டவர் தொகை.


முதல் ஐந்து இடங்கள்:
1. இந்தியா - 1456 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. ரஷ்யா - 470 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. U.K. - 390 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. யுக்ரைன் - 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. சீனா - 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

மற்ற உலக நாடுகளிலுள்ளோர் வைத்துள்ள தொகையை கூட்டினாலும் இந்தியர்கள் வைத்துள்ள 1456பில்லியன் அல்லது 1.4 ட்ரில்லியன் டாலர்களைத் தொடுகிறதா? கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
.... அடுத்த பகுதியில் முற்றும்

Post Comment

Sunday, 15 February 2009

அம்மாவுக்கு ஓர வஞ்சனையா?



எங்க ஊர்க்காரர் துபையில் வந்து சில ஆண்டுகள் இருந்து விட்டு விடுமுறையில் ஊர் போகிறார். இங்கு பஜாரில் பச்சை டிரெஸ் வேலை. பொருட்களை வாங்கித் தந்தால் அதை கை வண்டியில் வைத்துத் தள்ளி வந்து கொடுத்தல், தலைச்சமை தூக்குதல் முதலிய கடுமையான உடலுழைப்பைத் தர வேண்டிய கூலிப்பணி. அயர்வை மறக்க இங்கிருந்த நாட்களில் நன்றாக குடிக்கக் கற்றுக் கொண்டு விட்டார். ஒரு நாளைக்கு ஒரு அவுண்ஸாவது உள்ளே தள்ளா விட்டால் உறக்கம் வராது என்ற நிலைமை.

அப்போதெல்லாம் நம் ஊரில் இப்போது போல் அரசாங்கக் கடைகள் திறக்கப் படவில்லை. சன்னாசிக் கோயில் மறைவில், புளிய மரத்தடியில், கரும்புக் காட்டுப் புதர்களில் ஊத்திக் கொண்டு ஓடி வர வேண்டும். போலீஸ் பிடித்து விட்டால், அங்கேயே கேட்கிற காசை கொடுத்து விட்டு தப்பித்தால், மானம் போகாமல் தப்பும். அதனாலேயே ஊருக்குப் போகாமல் தள்ளிப் போட்டு மூன்று வருடத்துக்குப்பின் பயணம்.

விமான நிலையத்தில் இருப்பதிலேயே பெரிய அளவு பாட்டில் ஒன்று வாங்கி சாமானோடு திணித்தாகி விட்டது. மனைவியை சமாளிச்சிடலாம். அம்மாதான் துருவித் துருவி கேட்பார்கள். செவிடர் மாமனாரைச் சந்திக்க சென்றபோது யோசித்தது போல் பதிலை யோசித்துக் கொண்டே ஊரும் வந்து விட்டது .

தாய், தங்கை, தாரம், தன் பிள்ளைகள், தங்கை பிள்ளைகள் என எல்லோர் முன்னிலையிலும் கொண்டு வந்திருந்த சாமான்களைப் அம்மா பிரித்துக் கொடுக்கிறார்கள். பார்க்க பகட்டாய் இருப்பதெல்லாம் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகளுக்கு, சுமாரானதெல்லாம் மகன் வீட்டுப் பிள்ளைகளுக்கென்று பிரிக்கப் படுகிறது.

மனைவி அதையெல்லாம் கவனித்தாலும் கட்டியவனிடம் தனியாகத்தான் சொல்ல வேண்டும். இவருக்கோ எப்ப பாட்டிலை எடுத்து…… என்ன கேள்வி வருமோ….. அதை எப்படி சமாளிப்பதோ…….. அதே கவலை.


என்னப்பா இது?
டானிக் மருந்தம்மா.
நல்லாத்தானே இருக்கே. உனக்கேனப்பா மருந்து?
அங்கெல்லாம் வேலை கடுமை. உடம்பு தேறுவதற்கு டாக்டர் கொடுத்திருக்கார்.
அதுக்கு இவ்ளோ பெரிய பாட்டிலா?
இரண்டு மூன்று மாசத்துக்கு தொடர்நது சாப்பிட சொல்லி இருக்கார். துபை மருந்து இங்கே கெடைக்காதுல்ல. அதான் கொஞ்சம் பெருசா. அங்கெல்லாம் சின்ன பசங்க கூட சாப்டுவாங்கம்மா. உடம்புக்கு நல்லது.
அது சரி. சின்னப்பசங்க சாப்டாலும் உடம்பு தேறுமா?
பாட்டில் மூடியால ஒரு மூடி. ஒன்னும் ஆகாதும்மா.
இவ்ளோ இருக்குதே தம்பி!
மிச்சமிருந்தா ஊருக்கு போகும்போது எடுத்துட்டு போயிட வேண்டியதுதான்

அப்பாடி. அம்மாவிடம் எப்டியோ சமாளிச்சு, எலி பூனை உருட்டாத இடமாப் பார்த்து, பத்திரமா படுக்கையறைல வைத்த உடன்தான் நிம்மதி.

"பாத்தீங்களா. நல்ல சாமானெல்லாம் மக வீட்டு பிள்ளைகளுக்கு. அவுங்க ஒதுக்கியது மட்டும் நம்ம பிள்ளைகளுக்கு" என்ற மனைவியிடம் "சரி சரி ஆரம்பிச்சிராதே. எல்லா பொருளும் நல்லதுதான். அவுங்களுக்கென்ன தெரியும் நல்லதும் கெட்டதும். விடு" என்று சொன்னதும் சரின்னுட்டாள்.

கொட்டாப்புளி தம்பு கிட்ட வாங்கி, குந்த வச்சு அடிச்சி, போலீஸ்ல மாட்டி மானம் போகாமல், வெளியே தெரியாமல் ஒரு நாளைக்கு ஒரு மூடி. பெரிய ஆசுவாசம்தான். நல்ல படியாய்தான் போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் கடைத்தெருவில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு ஆள் "சீக்கிரம் வீட்டுக்கு போங்க. எதையோ சாப்பிட்டுட்டு வீட்டில பிள்ளைங்களுக்கு எல்லாம் விஷம் பாய்ந்து, பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார்கள். நம்மூர் பெரிய டாக்டரை அழைக்க பெரியவன் போய் இருக்கிறார்" என்று சொல்லவும்.

பரக்கப் பரக்க, அடித்துப் பிடித்து போய் பார்த்தால், மக்களெல்லாம் வீட்டு வாசலில் பெருங்கும்பலாய்.
சைக்கிளை தெருவிலே தள்ளி விட்டு வீட்டுக்குள்.
பிள்ளைகள் பாயில் கிடத்தப்பட்டு டாக்டர் பரிசோதித்து கொண்டிருக்கிறார்.


ஐயையோ. பிள்ளைங்களுக்கு என்ன ஆச்சு?
டாக்டர்: ஏன்ய்யா கத்துறீர். செக் பண்ணிக்கிட்டுதானே இருக்கேன். தள்ளி நில்லய்யா. பெரியவரே இவரை தூரமா இருக்கச் சொல்லுங்க.
"தம்பீ" வீட்டுக்குள்ளிருந்து அம்மாவுடைய சத்தம் பெரிதாய் வரவும்
ஒரே தாவலில் அம்மாவின் முன்னில்

"என்னாச்சும்மா? தங்கையை காணோம். இவளையும் காணோம். பிள்ளைங்க மட்டும் கிடக்குது!"
"தம்பீ. நீ கொண்ணாந்த துபை மருந்தை பிள்ளைகளுக்கு கொடுத்தாலும் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னியே. அதான் கொடுத்தேன். இப்டி ஆயிடுச்சே." -பயம் கலந்த கலக்கத்தோடு அம்மா.
"ஐயையோ. அதையாக் கொடுத்தே. சப்தம் போடாம இரு. நல்லாயிடும் நான் பாத்துக்கரேன்".

பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரை தனியே அழைத்து பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவர் வருகைக்கான தொகையை கையிலே திணித்து வழியனுப்பி விட்டு,
தெரு மக்களை கலைந்து போகச் சொல்லி விட்டு பார்த்தால்...
தெருவிலே மனைவியும் பிள்ளைகளும் வீட்டை நோக்கி ஓடி வருகிறார்கள்.

"டேய் பசங்களா? உள்ளெ படுத்திருப்பது நீங்க இல்லையா?"
"இல்லையே. காலையிலேயே அப்பம்மா எங்களை அம்மம்மா வீட்டுக்கு போகச் சொல்லிடுச்சு"

நேராக வீட்டுக்குள் வந்து,
"ஏம்மா! நான் வாங்கி வந்ததை எம் பிள்ளைகளுக்கு கொடுக்காமல், எம் பிள்ளைகளை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு, மகள் வீட்டு பிள்ளைங்கள மட்டும் தனியாக வரவழைத்து வச்சு கொடுத்திருக்கியே இது உனக்கே நல்லாருக்காம்மா?"
"நான் சொன்னேன் நீங்க எங்க கேட்டீங்க?" - இது மனைவி

(குறிப்பு: எல்லா அம்மாவுக்கும் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகள் மீது மகனுடைய பிள்ளைகளை விடவும் பாசம் சிறிது மிகையாய் இருக்கிறதென்பது உண்மைதானா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?)

Post Comment