Wednesday 30 July 2008

தமிழன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவனா?

இந்த ஆண்டில் அமீரகத்தில் மொத்தம் 118 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் 23 பேர் தமிழர்கள். மிகுதியில் கூடுதலானோர் மலையாளிகள்தாம். இந்த தற்கொலைகளில் மிகுதியானவை பணச்சுமையால் ஏற்பட்டவைதான் என்கிறது புள்ளி விபரம்.

தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள், இங்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்த வாழ்வியல் இங்கில்லை என்பதறிந்ததும் முதன் முதலாய் மனதொடிகிறார்கள். நிலம் நகை போன்றவற்றை அடகு வைத்து நிறைய பணம் கொடுத்து வந்தவர்கள், அந்தக் கடனை அடைக்கும் வரையிலாவது இங்கு இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இங்கு தன் செலவும், ஊரில் குடும்பத்தார் செலவும் போக எஞ்சிய குறைந்த பணத்தில் கடனை அடைக்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

அவர் வீட்டிற்கு அனுப்பும் பணம் ஊரில் கொடுத்ததை விடவும் அதிகம். ஆனால் அதற்காக அவர் இழந்தது எவ்வளவு என்பது ஊரில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மனது வருந்தக்கூடாதென்று இவர்களும் சொல்வதில்லை. அவர் முதலீடு செய்த பெருந் தொகையையும் ஊரில் பணத்தைப் பெறுபவர்கள் தற்காலிகமாக மறந்து விடுகிறார்கள். மகன் அல்லது கணவன் துபையில். இனி நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்பதான அவர்களின் கற்பனை, ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையிலிருந்து சிறிது சொகுசான வாழ்க்கை முறைக்கு அவர்களை மாற்றுகிறது. அதற்காக கூடுதல் பணம் தேவையாகிறது. அவர் மேலும் அதிர்கிறார். பழைய கடன் பாரம் முழுவதையும் இரவும் பகலுமாய் இவரே சுமக்கிறார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

அதற்குள் வந்து சிறிது நாளாகி விடுகிறது. நண்பர்கள் அதிகமாகின்றனர். குழுவாக இருக்கும் போதும், செல்லுமிடத்தும் புகை மற்றும் குடியைத் துவங்குகிறார். முதலில் மன ஆறுதலுக்கென்று இருந்தது, படிப்படியாக விடுமுறை என்றால் அதில்லாமலா என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார். இதிலே நண்பர்களின் முன் வீராப்புக்காக அல்லது முகஸ்துதிக்காக கூடுதல் செலவழிக்கிறார். சம்பள பற்றாக்குறை. மீண்டும் மன உளைச்சல்.

கார்டு தந்து கடனாளியாக்குகின்ற கிரெடிட் கலாச்சாரம் அவர் அறிந்தும் அறியாமலும் அவரை மேலும் கடனில் தள்ளுகிறது. வெளியேற முடியாமல் தத்தளிக்கிறார்.

இதல்லாமல் சிலருக்கு ஊரில் குடும்பத்தினரில் ஏற்படுகிற சிற்சில குழப்பங்களும் அவர் மனதை வாட்டிப் பிழிகிறது.

இவற்றிலிருந்து தப்பிக்க வழியறியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். சாதாரணமாக இவைதான் இங்கு நடப்பதாக சொல்கிறார்கள். அவைதான் தற்கொலைகளாய் முடிகின்றதாக சொல்கிறார்கள். உண்மையா?

அதனால் இங்கு வர நினைப்பவர்கள் முதலில் நன்றாகவும் சரியாகவும் திட்டமிடுங்கள். வந்த பின் கவனமாய் இருங்கள். உங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவற்றை குறிப்பாய் தவிர்த்து விடுங்கள். உணர்ச்சி வசப்படாமல் சிந்தியுங்கள். வாழ நினைத்தால் புவியில் நல்ல வழிகளா இல்லை. உங்களை நீங்களே சீர்திருத்தம் செய்து சிறப்பான வாழ்வை நோக்கி பயணமாகுங்கள்.

அது சரி. படித்தவர்கள் அதிகமுள்ளதாய் சொல்லப் படுகிற மலையாளிகளில் இது போன்ற தற்கொலைகள் அதிகமுள்ளதே. படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ!

Post Comment

14 comments:

நையாண்டி நைனா said...

/*படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ! */
கண்டிப்பாக...


இது சிந்திக்க வேண்டிய விஷயம். நாமும் நம் கஷ்டம் நீங்க, பெற்றோரை, உடன் பிறந்தாரை நல்ல நிலையில் வைக்க எவ்வளவோ செய்கிறோம், சிறிது சிந்தித்து செயல் பட்டால் நன்றாய் இருக்கும்

Hariharan # 03985177737685368452 said...

குடி, புகைப்பு இவைகளை தவிர்த்தலும் , ஸ்பான்ஸர் செய்வதை நிறுத்தினாலே 10-25% கூடுதல் பொருளாதார தன்னிறைவுக்கு வழி பிறக்கும்!

படிப்பு என்பதே நல்லது எது கெட்டது எது என்று பகுத்து அறிந்து நல்ல வாழ்க்கை வாழ்வதற்குத்தானே!

Thekkikattan|தெகா said...

சுல்தான்,

மிகச் சரியாக வெளி நாட்டிற்கு சென்று பிழைக்க எத்தனிக்கும் தனிப்பட்ட நபரின் உளவியல் பிரச்சினைகளை அழகாக விரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

இது போன்ற கட்டுரைகள் பெரிய மீடியா வார, மாத இதழ்களில் தோன்றி குடும்ப உறுப்பினர்கள் புரிந்துணர்வு கொள்ளச் செய்யும் வண்ணம் செய்வது மிக்க பயனளிக்கும்.செய்வார்களா?

மீண்டும் நன்றி!

Unknown said...

வருகைக்கு நன்றி நையாண்டி நைனா.
படிப்பு மனிதனை கோழையாக்கக் கூடாது. ஹரிஹரன் அய்யா பின்னூட்டம் பாருங்கள்.

//குடி, புகைப்பு இவைகளை தவிர்த்தலும், ஸ்பான்ஸர் செய்வதை நிறுத்தினாலே 10-25மூ கூடுதல் பொருளாதார தன்னிறைவுக்கு வழி பிறக்கும்!//
நன்றி ஹரிஹரன் அய்யா.
ஏதாவது சொன்னால் இங்கு சுலபமாகக் கிடைப்பது அறிவுரை மட்டுமே என்று நக்கல் செய்பவர்கள் ஏராளம். சொல்லில் திருந்தாதவன் பட்டுத்தான் திருந்துவானாம்.

//படிப்பு என்பதே நல்லது எது கெட்டது எது என்று பகுத்து அறிந்து நல்ல வாழ்க்கை வாழ்வதற்குத்தானே!//
அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் படித்தவர்கள் பாமரர்களை விடவும் தன்னில் சுருங்கி விடுகிறார்களே. இந்த சுருங்குதல்தான் விபரீதமாகி விடுகிறதென்று நினைக்கிறேன்.

//மிகச் சரியாக வெளி நாட்டிற்கு சென்று பிழைக்க எத்தனிக்கும் தனிப்பட்ட நபரின் உளவியல் பிரச்சினைகளை அழகாக விரித்துக் காட்டியிருக்கிறீர்கள்//
வருகைக்கு நன்றி தெ.கா.

Anonymous said...

இன்னும் ஒரிரு நாளில் முடிவு சொல்ல வேண்டிய நிலையில் வெளிநாட்டு ஆபரை வாங்கிவைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கையில் உங்கள் பதிவு கண்ணில் பட்டிருக்கிறது.

Unknown said...

//இன்னும் ஒரிரு நாளில் முடிவு சொல்ல வேண்டிய நிலையில் வெளிநாட்டு ஆபரை வாங்கிவைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கையில் உங்கள் பதிவு கண்ணில் பட்டிருக்கிறது.//

எவ்வளவு வருமானம் அதில் செலவு போக என்ன மிச்சமாகும், குடும்பத்தில் என்னென்ன கூடுதலான பிரச்னைகள் தோன்ற வாய்ப்பு அதை வெளிநாட்டிலிருந்து எவ்வாறு நீங்கள் நிவர்த்திக்க இயலும் என்பதெல்லாம் முடிவெடுக்கு முன் நன்றாக கணக்கிலெடுத்துக் கொண்டு நல்ல முடிவெடுங்கள். வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

சமீபத்தில் இந்த ஸ்பான்சருக்கும் ஆப்பு வைத்தாக உங்கள் பத்திரிக்கையில் படித்தேன்,சரியா?

Unknown said...

//சமீபத்தில் இந்த ஸ்பான்சருக்கும் ஆப்பு வைத்தாக உங்கள் பத்திரிக்கையில் படித்தேன்,சரியா?//

மன்னிக்கவும்.
ஸ்பான்சருக்கு ஆப்பு.
உங்கள் பத்திரிக்கை.
ஒன்றும் புரியவில்லை வடுவூர் குமார்.

ALIF AHAMED said...

உங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவற்றை குறிப்பாய் தவிர்த்து விடுங்கள்.
///


முயற்சி செய்துகிட்டு இருக்கேன்
பிளாக்கை தலைமுழுக :)

ALIF AHAMED said...

குடி, புகைப்பு இவைகளை தவிர்த்தலும் , ஸ்பான்ஸர் செய்வதை நிறுத்தினாலே 10-25% கூடுதல் பொருளாதார தன்னிறைவுக்கு வழி பிறக்கும்!
//

இங்கு சொன்ன சிகரெட் ஸ்பான்ஸரை


வடுவூர் குமார் விசா ஸ்பான்ஸர்னு நினைத்து விட்டார் போலும் :)

குரங்கு said...

ம்ம்ம்ம்....

உணர்ச்சி வசப்படுபவர்கள் அனைவரும்தான், தமிழன் மலையாளி என்ற பாகுபாடும் இல்லமால்.

மிக நல்ல பதிவு.

Hariharan # 03985177737685368452 said...

//குடி, புகைப்பு இவைகளை தவிர்த்தலும், ஸ்பான்ஸர் செய்வதை நிறுத்தினாலே 10-25மூ கூடுதல் பொருளாதார தன்னிறைவுக்கு வழி பிறக்கும்!//


நன்றி ஹரிஹரன் அய்யா.
ஏதாவது சொன்னால் இங்கு சுலபமாகக் கிடைப்பது அறிவுரை மட்டுமே என்று நக்கல் செய்பவர்கள் ஏராளம். சொல்லில் திருந்தாதவன் பட்டுத்தான் திருந்துவானாம்.

சிகரெட் விஷயத்தில் அனுபவப் பட்டதால் அதனால் விளையும் கேட்டைச் சொல்லும் தார்மீக உரிமை கூடுதலாகக் கிடைக்கிறது எனக்கு.

கல்லூரிப் படிப்பு, விடுதி வாழ்க்கை எல்லாம் புகைப்பு பக்கம் செல்லாதிருந்த போதும், எனது 22 வயதில் சுயமாக உழைத்து ஈட்டிய பொருளில், ஸ்டைலுக்கு,சிந்தனைக்கு, காதல்உணர்வுகளுக்கு, வேலையில் டென்ஷனுக்கு என்று ஏராளமான பொருளை கோல்ட் ப்ளேக், இண்டியா கிங்ஸ்,ரோத்மான்ஸ்,மால்பரோ, டன்ஹில், என விதவிதமாய் ஒருநாளுக்கு 40 சிகரெட் வரை புகைத்திருக்கிறேன்!

தற்கொலை செய்யும் அளவுக்கு பொருளாதாரச் சிக்கலில் புகைப்பு என்னை விடவில்லை என்றாலும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் என மாதத்துக்கு 6000 ரூபாய் ஆண்டுக்கு 72,000 ரூபாய் 12 ஆண்டுகள் புகைப்பில் 8-9 லட்சம் பொருள் அழித்திருக்கிறேன்!

மாதம் 6000 ரூபாய் வெறும் புகைப்புக்கு மட்டும் அதுவும் தனியனாக!

புகைப்புடன், குடி, குடிப்பழக்கத்துடன் இருக்கும் நண்பர் கூட்டமும், ஊரில் குடும்பப் பிரச்சினையும், சேர்ந்தால் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபர் பொருளாதார ரீதியாக அயல்நாட்டில் நொடித்துபோவது 500% நிதர்சனம்!

22 வயதில் ஸ்டைல் சிம்பல், சிந்தனை ஊக்கி, டென்ஷன்க்கு ரெமடி என்று இருந்த புகை 4 ஆண்டுகளாக அறவே நிறுத்தப்பட்டும், இந்த 16 ஆண்டுகளில் கிடைத்த பட்ட அனுபவமும் சிகரெடுக்காக 9 லட்சம் செலவழித்து வாங்கிய அனுபவ அறிவு!


//ஏதாவது சொன்னால் இங்கு சுலபமாகக் கிடைப்பது அறிவுரை மட்டுமே என்று நக்கல் செய்பவர்கள் ஏராளம்.//

Individual's life won't be long enough to experience everything by himself... therefore it is wise to take the essence of life in the form of advise from the elders and wellwishers to lead a meaningful life!

குடித்தபின் உணர்ச்சிவசப்படுவது சிந்தனை அல்ல! Just an after effect of Alchohol!

Unknown said...

//முயற்சி செய்துகிட்டு இருக்கேன்
பிளாக்கை தலைமுழுக//
நேரம் கிடைக்கும்போது மட்டும் ப்ளாக்குங்கள் மின்னல். நான் சீரியஸ்.

//உணர்ச்சி வசப்படுபவர்கள் அனைவரும்தான், தமிழன் மலையாளி என்ற பாகுபாடும் இல்லமால்.//
ஆனால் பாருங்கள். அமீரகத்தில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் மக்கள் வசிக்கின்றனர். ஏன்? எல்லா நாட்டினரும் வசிக்கின்றனர். ஆனால் தற்கொலை செய்து கொண்டவர்களில் 23 பேர் என்ற பெரும் எண்ணிக்கை தமிழர்களுடையது. இது கூடுதலாக உணர்ச்சி வசப்படுதலின் வெளிப்பாடல்லவா?

//Individual's life won't be long enough to experience everything by himself... therefore it is wise to take the essence of life in the form of advise from the elders and wellwishers to lead a meaningful life!
குடித்தபின் உணர்ச்சிவசப்படுவது சிந்தனை அல்ல! Just an after effect of Alchohol!//

நான் கூட கல்லூரிக்காலம் முதல் திருமணம் முடிந்து சின்னாட்கள் வரை புகை (சிகரெட்) பிடித்தவன்தான். கணக்குப் போட்டு பார்த்ததில்லை. உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறைக்கோட்பாட்டின் நினைவுறுத்தல், உடல் நலத் தீங்கு என்ற மனைவியின் வற்புறுத்தல் முதலிய காரணங்களால்தான் நிறுத்தினேன்.

சிந்திக்கத் தூண்டும் உங்கள் மறுமொழிக்கு நன்றி திரு.ஹரிஹரன்.

அன்புடன் மலிக்கா said...

தற்கொலையை தேர்ந்தெடுக்கும் மனிதன் தன்மீதும் தன்னை படைத்த இறைவன்மீது நம்பிக்கையற்றவனாக ஆகிவிடுகிறான்,

தற்கொலை முட்டாள்களின் முடிவு

/*படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ! */

சிந்திக்கட்டும்,