Wednesday 19 November 2008

இனி துபை வாழ்வு கடினம்தான்-ஆறு காரணங்கள்

துபைதான் நாம் வாழ்வதற்கான சிறந்த இடம் என்று இது நாள் வரை நினைக்கத் தோன்றியது. ஊருக்குப் போனால் கூட வீட்டுக்கு வெளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் துபை மாதிரி வருமா என்று மனது நினைக்கும். ஆனால் துபையில் முளைக்கும் புதிய புதிய சட்டங்கள் இனி இங்கு வாழ்வது கடினமே என்ற மனநிலையையே பலருக்கும் தந்திருக்கிறது என்பது மிகையில்லை.

இங்கு வாழ்வது ஏன் சிரமமாகி விட்டது என்பதற்கு குறிப்பான ஆறு காரணங்கள்.

1. சாலிக் (SALIK)

துபையின் மின்னனு சுங்க வரி வசூலிப்புத் திட்டம். 'திறந்து விடப்பட்ட' அல்லது 'இடைஞ்சலற்ற' என்ற பொருள் தரக்கூடிய 'சாலிக்' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்முறை 2007ம் ஆண்டு நகரில் உள்ள சாலைப் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அறிமுகமானது. ஆனால் மனித, வாகன விகிதத்தில் உலகத்திலேயே அதிக வாகனங்களைக் கொண்ட இந்நாட்டில் இது பெயருக்குரிய பயனைத் தரவே இல்லை.

நகரின் நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இம்மின்னனு முறையில் ஒரு தடவை ஒரு இடத்தைக் கடக்க நான்கு திர்ஹம் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ50)எடுத்துக் கொள்ளும். ஒரே சாலையிலுள்ள இரு சாதனங்களை ஒரு மணி நேரத்துக்குள் கடந்தால் ஒரு முறை மட்டுமே எடுக்கும்.

இதற்காக முன்பணம் செலுத்திப் பெற்ற அட்டையை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வைக்க வேண்டும். அட்டையை ஒட்டாது இப்பகுதியைக் கடந்த வாகனங்களுக்கு முதல் நாள் 100திர்ஹம் தண்டணை, அடுத்த நாளுக்கு 200திர்ஹம், மூன்றாம் நாளுக்கு 400திர்ஹம் தண்டனை. ஒட்டிய அட்டையில் அம்மின்னனு சாதனம் எடுக்க தொகை இல்லையென்றால் ஒவ்வொரு முறை வாகனம் கடந்ததற்கும் 50திர்ஹம் தண்டனை.

ஒரு நாள் வேலைக்குச் சென்று வர இம்முறைக்கு நான் குறைந்தது 16திர்ஹம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கூடுதலாக 80கிமீ பயணம் செய்ய வேண்டும்.

2.வாகனம் நிறுத்த வரி

சாலிக் கொடுத்த பின்பும் எப்போதும் குறையாத வாகன நெரிசலில் வந்தாலும், ஒரு நிறுவனத்தின் முன்போ, ஒரு கடைக்கு முன்போ, ஒரு நண்பரின் வீட்டின் முன்போ சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த பணம் செலுத்த வேண்டும். வாகனம் நிறுத்த காசு போட வேண்டிய இயந்திரங்கள் நகரின் எல்லா பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு திர்ஹம்கள். இரண்டு மணி நேரமென்றால் ஐந்து திர்ஹம்கள். எவ்வளவு நேரம் வாகனம் நிறுத்த நேரிடும் என்பதைக் கணித்து முன்பணமாக செலுத்த வேண்டும். பணம் செலுத்திய குறிப்பிட்ட கால அளவை விட ஐந்து நிமிடம் தாமதித்தாலும் 100திர்ஹம் தண்டனை.

மாலை 9மணி முதல் காலை 8மணி வரை வரியில்லை. ஆனால் அந்நேரத்தில் வாகனம் நிறுத்த ஒரு இடம் கிடைக்க நீங்கள் நான்கு மணி நேரம் சுற்ற நேரிடும். இடம் கிடைக்காமலும் போகலாம்.

3. வாடகை மகிழுந்துகள் (TAXI)
காலையிலோ மாலையிலோ அலுவலக நேரத்தில் ஒன்று கிடைக்குமென்பது சற்றேறக்குறைய இயலாததுதான். இங்கு 3200 வாடகை மகிழுந்துகள் ஓடினாலும் இந்நேரங்களில் காணக் கிடைக்கும் ஒன்று பயணியுடன் இருக்கும் அல்லது காணவே முடியாது.

வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் பயணிகளுக்கு நிறுத்த மறுத்தால் அபராதம் செலுத்த நேரும். எனினும் ஆளற்ற வாடகை மகிழுந்து ஒன்றைக் கண்டு, நீங்கள் கையை ஆட்டி வந்து நின்றாலும் உங்கள் போகுமிடத்தை சொன்ன பின் தலையை ஆட்டி விட்டு போய் விடுவர்.

தாறுமாறாக ஓட்டுபவர்களும், போகும் வழியறியாத ஓட்டுனர்களும் உண்டு.

4. VAT மதிப்புக் கூடுதல் வரி
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமீரகத்தில் இதை அமல் படுத்த வழிமுறைகள் யோசிக்கப்பட்டு பல கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. சரியான நாள் குறிக்கப்படவில்லையாயினும் மற்ற வளைகுடா நாடுகளோடு இங்கும் தொடங்கப்படும்.

வளைகுடா நாடுகளில் முதலில் ஐந்து சதவீத மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இது நேரடி வரி விதிப்பு இல்லையென்றாலும் அதன் சுமை கடைசியில் வாங்குவோர் தலையில்தான்.

துபையின் முக்கிய கவர்ச்சியே வரி அற்ற நாடு tax-free என்பதுதான். எனவே எத்தகைய மறைமுக வரியும் மக்களின் பணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்.

5. தங்குமிடம்
தொடர்ந்து உயரும் வாடகை துபைகாரனின் மாறாத குற்றச்சாட்டு. அமீரகத்தில் இதைப் பற்றி பேசாதவர்களே இல்லை. வாடகை உயர்வு 7 சதவீதம்தான் இருக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தாலும் புதிய கட்டிடங்கள் மிக கூடுதலாக வாடகையை அறிவிக்கின்றன.

வீட்டு உரிமையாளருக்கு வாடகை உயர்த்தக் கட்டுப்பாடு அதனால் இனி வீட்டிலுள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கு (for Free Parking) ஆண்டு வாடகை 7500 திர்ஹம்கள்.

ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் என்ற புதிய முறை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகப் போவதில்லை. குடும்பமின்றி தனித்து வாழ்பவர்பாடோ (Bachelors) அதை விட திண்டாட்டமாகும்.

6. கலாச்சார மாற்றமும் அமீரகப்படுத்தலும்

பெருகி வரும் அனாச்சார அசிங்கங்களும் குற்றங்களும், அருகி வரும் நல்லொழுக்கமும் பண்புகளும் நம் நாடு தேவலாம் அதனால் இங்கிருந்து போய் விடுவதே நல்லதென நினைக்கச் செய்கிறது.

தனியார் துறையிலும் அமீரகக் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற திட்டம் முலம் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளும் மிகவும் குறைந்து விட்டது.
----------------------------------------------------

அது சரி. இன்று நவம்பர் 19 'உலக கழிவறை தினமாமே' உண்மையாகவா?



வலது புறமுள்ள இக்கட்டிடம் சிங்கப்பூரிலுள்ள உலக கழிவறைக் கல்லூரியாம் (WTC-World Toilet College)

Post Comment

30 comments:

வடுவூர் குமார் said...

சாலிக்- ஒரு நாளுக்கு 26 திராம் கட்டிவிட்டால் அதற்குப்பிறகு கிடையாதாமே? சரியா?
விட்டுப்பிரச்சனை தலைக்கு மேல் போய்கொண்டிருக்கிறது,இதற்கிடையில் வேலையிழப்பு தொடர்வதால் துபாயின் பளபளப்பு குறையுமா? என்று தெரியவில்லை.
அடையாள அட்டை செலவு வேறு - இதை பலரும் பணம் பண்ணும் வேலையாகவே நினைக்கிறார்கள்.
மொத்தத்தில் பிரச்சனைகள் புர்ஜ் துபாய் கட்டிடத்தை காட்டிலும் அடுத்து கட்டப்போகிற 1 கி.மீ உயர கட்டிடத்தையைம் தாண்டிவிடுமோ என்று தோன்றுகிறது. :-)

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவுக்கு ஒரு "+" குத்து!

Ramesh said...

Read one post by my friend... Very True!

http://vijayashankar.blogspot.com/2008/11/cost-of-living-in-uae-dubai.html

கோவி.கண்ணன் said...

நீங்கள் சொல்லும் ஆறு காரணங்களும் சிங்கையில் இருக்கு.

ஆனால் அதை ஓரளவுக்கு தவிர்க்கிறோம்.

1. கார் வைத்துக் கொள்வதில்லை ( இங்கே பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகுதி) சாலிக் - இங்கே ERP என்று சொல்லுவாங்க Electronic Road Pricing )

2. பார்கிங் இடத்தைப் பொருத்து கட்டணம் மாறும், மக்கள் மிகுந்து செல்லும் இடங்களில் இடம் கிடைப்பது கடினம், கட்டணமும் மிகுதி, Again... வைத்திருப்பவர்களுக்குத்தானே :)

3. காலை அலுவலகம் கிளம்பும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் டாக்ஸி கிடைப்பது அரிதுதான். அதே போல் அந்த பொழுதில் கட்டணமும் 35விழுக்காடு மிகுதிதான். ( ஆனால் என்றாவது பொதுப் போக்குவரத்தை தவரவிடும் போதுதான் மகிழுந்து எடுக்க வேண்டி இருக்கும் என்பதால் சுமையாக தெரியவில்லை)

4. பொருள் சேவை வரி மூன்று ஆண்டுகளில் 2 முறை உயர்ந்திருக்கிறது, 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 விழுக்காடாக இருந்தது தற்போது 7 விழுக்காடு

5. வீட்டுவாடகை கடந்த இரு ஆண்டுகளாக சிங்கையிலும் மிகுதிதான். நிரந்தரவாசிகள் சொந்தமாக வீடுவாங்கலாம், நிரந்தரவாசிகளில் 70 விழுக்காட்டினர் வாங்கிய வீட்டில் தான் இருப்பார்கள், சில அறைகளை வாடகைக்கு விட்டும் இருப்பார்கள். குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிறுவனங்களே வாடகை செலுத்திவிடும். மற்றவர்களுக்குத்தான் சற்று கூடுதல் செலவு

6. இங்கிருந்து இந்தியாவுக்குப் போகும் போதுதான் மழைப்பாக இருக்கு, எப்படி இருந்த இந்தியா இப்படி ஆகிட்டுது, நம்ம நாட்டுக் கலாச்சாரம் சீர்கெட்டதாகவும்....நாம தான் (வெளி நாட்டில் இருப்பவர்கள்) பின் தங்கி இருப்பதாகவுமே உணரவைக்கிறது.

Anonymous said...

Dear Mr.sultan,

I am about to land at Dubai for a good(!) job. (with family). My age is 40.
You are scaring me...!
Is it really that bad? Brfore taking the decision, i consulted with friends & relative there. They encouraged me.

Regards
Raja

pudugaithendral said...

அருமையான தகவல்கள்.

பலருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் பதிவு.

பாராட்டுக்கள்.

Anonymous said...

Yes. What you said is 100% true. Not only Dubai, almost throughout the life in Gulf is difficult.

Thangavel Manickam said...

சுல்தான் ஜி, உங்க பதிவு துபையின் உண்மை நிலையினை சொல்கிறது. ஆனால் பாருங்கள். இன்னும் துபாய்க்குச் செல்ல வேண்டுமென்ற ஆவல் மட்டும் இந்தியர்களிடம் குறைந்த பாடில்லை.

Anonymous said...

Mr.Sultan

You are really scaring me! I am about to land in Dubai as a Pjt Mgr, with family! is it really that bad? I took this decision after consulting with friend & relative. (salary: 15000 dhs, excl. accom.)
I don't know whether my decision is right.

raja

suvanappiriyan said...

அருமையான தகவல்கள்.


பாராட்டுக்கள்.

ALIF AHAMED said...

நல்ல பதிவு பாய்..!

Unknown said...

நன்றி வடுவூர் குமார். துபை எப்படி? சிங்கை மாதிரி இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? சந்திப்போமே.

ஒரு நாளைக்கு 26 திர்ஹம்? toooooo much.

//அடையாள அட்டை செலவு வேறு - இதை பலரும் பணம் பண்ணும் வேலையாகவே நினைக்கிறார்கள்.//
எதிர்காலத்தில் நிரம்பப் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். SALIK மாதிரிதானோ என்னவோ!

//நல்ல பதிவுக்கு ஒரு "+" குத்து!//
வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி.

நன்றி ரமேஷ்.

நன்றி ஜி.கே.
சிங்கையைப் பார்த்துதான் இங்கையும் காப்பி அடிக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டுள்ளேன்.
ஆரம்பம் அதுதான் சிரமமாகத் தெரிகிறது. பணப்பையைத் தாக்குகிறதே. போகப் போக பழகி விடும் என நினைக்கிறேன். இவ்வளவுதான் மிஞ்சும் எனத் தெரிந்து விடுமல்லவா?

//நாம தான் (வெளி நாட்டில் இருப்பவர்கள்) பின் தங்கி இருப்பதாகவுமே உணரவைக்கிறது//
அப்படீன்றீங்க?
பிள்ளை குட்டிகளை ஊரில் விட்டு விட்டு... ... ... பயமுறுத்திறீங்களேய்யா!

வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்.

Unknown said...

வருகைக்கு நன்றி Raghavan Nigeria, தங்கவேல் மாணிக்கம்.

//அருமையான தகவல்கள்.//
நன்றி சுவனப்பிரியன்.

Mr. Raja
Don't worry. AED.15000+Accm. is okey.
குழந்தைகள் படிப்பு மற்ற செலவுகள் போக எஞ்சுவது அங்கே உள்ளதை விட கூடுதலா என்பதை முக்கியமாக ஆலோசியுங்கள். அது சொந்த பந்தங்களையும், பிறந்த, பழகிய மனிதர்களையும் விட்டு வருவதற்கு தடையேற்படுத்தாத, முயற்சிப்போமே என்ற அளவா?
என்றால்... சும்மா வாங்க சார். இங்கே நாங்களும் சொந்தம் மாதிரிதான்.

பாச மலர் / Paasa Malar said...

இன்னும் சவுதியில் இத்தகைய மாற்றங்கள் வரவில்லை..நல்ல வேளையாக..

வாடகை உயர்வு, விலைவாசி உயர்வு என்று இருக்கவே இருக்கிறது..ஆனால் துபாய் அளவுக்கு இன்னும் இல்லை...

Unknown said...

//நல்ல பதிவு பாய்..!//
நன்றி மின்னுது மின்னல்
இந்த boyஆ இந்த bhaiஆ தெளிவா சொல்லிடுங்க. ஆமா.

//இன்னும் சவுதியில் இத்தகைய மாற்றங்கள் வரவில்லை..நல்ல வேளையாக..//
இவர்கள் வழிகாட்டி.
கொஞ்ச நாள் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் பாச மலர். அவர்கள் பின் தொடருவார்கள்.:((

ALIF AHAMED said...

நான் சொன்ன பாய் அபி அப்பா சொன்ன பாய் இல்லை இல்லை இல்லை...!!

உட்டா படுக்குற பாய்'யானு கேட்பிங்களா பாய் :)

E.Parthiban said...

I'm Driving in singapore , Toll or ERP system is meant to reduce the traffic at peak hours only...if Metro operates there may be reduction in car populations...

குப்பன்.யாஹூ said...

நல்ல பதிவு. ஆனால் இன்னும் விபரமாக எழுதி இருக்கலாம் வாடகை குறித்த விவரத்தை.

ஒரு அறையில் எட்டு / பத்து பசெலோர்கள் ஒரே குளியல் அறை, கழிவு அறை பயன் படுத்துதல்,

ஒரே வீட்டில் இரண்டு/ மூண்டு குடும்பங்கள் சமயல் அறை, குளியல் அறை பகிர்தல் குறித்து இன்னும் கூடுதலாக எழுதி இருக்கலாம். (என்னால் இரண்டு நாட்கள் கூட பொறுக்க முடிய வில்லை இந்த சுத்தமினமையை.)

அதேபோல் எட்டு பேர் பத்து பேர் தங்கி உள்ள அறைகளின் புகை படம் போட்டு இருக்கலாம்.

உண்மை நிலையை சொல்லாமல் அழகான சாலைகள், உயரமான கட்டடங்களை போட்டு இருத்தலை தவிர்த்து இருக்கலாம்.

சொர்க்கமே என்றாலும் அது நம் தமிழகத்திற்கு ஈடாகுமா.

ஆனால் அருகிலயே உள்ள மஸ்கட் இன்னும் வசதியாக இருப்பதை நினைத்தால் மனதிருக்கு இதமாக இருக்கிறது.

குப்பன்_யாஹூ

I heard bahrain, doha have also become bad.

தருமி said...

நீங்கள் எழுதியதி ஒன்று மிகவும் பிடிக்கிறது சுல்தான். சரியான முறைப்படுத்தப்பட்ட சட்ட திட்டங்கள், அதை நடைமுறைப்படுத்தும் தீவிரம் -- நம்ம ஊர்ல இது நடக்கவே நடக்காதான்னு தோன்றுகிறது. இன்னும் நாங்கள் கைத்தொலை பேசிக்கொண்டே எப்படி இருசக்கர வாகனங்களில் ராஜா மாதிரி போய்க்கிட்டு இருக்கோம் தெரியுமா?!
:-(

SurveySan said...

good post.

if the new tariffs discourage people to ride in their cars and force them to take public transporation, i welcome it :)

☀நான் ஆதவன்☀ said...

//தருமி said...

நீங்கள் எழுதியதி ஒன்று மிகவும் பிடிக்கிறது சுல்தான். சரியான முறைப்படுத்தப்பட்ட சட்ட திட்டங்கள், அதை நடைமுறைப்படுத்தும் தீவிரம் -- நம்ம ஊர்ல இது நடக்கவே நடக்காதான்னு தோன்றுகிறது.//

தருமி சார் இங்கு தொடங்கப்பட்ட "சாலிக்" போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தவே என்று சொன்னாலும், முழுக்க முழுக்க பணம் பறிக்கும் செயலே..இதனால் இதுவரை போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. நம்மூர் "டிராபிக்" எவ்வளவோ மேல். காலை மற்றும் மாலை வேளைகளில் துபாயில் இருந்து சார்ஜா செல்லும் நேரத்தில் துபாயிலிருந்து சென்னை கூட செல்லலாம்.

குசும்பன் said...

//வாகனம் நிறுத்த வரி//

டோக்கன் எடுக்கும் ஆளுக்கும் சேர்த்து ஒரு டோக்கன் எடுக்கனும் போல அவரே டெம்போ சைஸில் இருக்கார்:)

*************************
கடைசி படத்தில் இருக்கும் பாப்பாவும் நல்லாதான் இருக்கு இதுக்காக எல்லாம் துபாயை விட்டு போகலாமா?

Unknown said...

//if Metro operates there may be reduction in car populations...//
Thanks for the comments Mr.Parthiban.
I am in Sales and I have to use my car to meet different clients at different area. I can't rely on Metro. Poeple working at Jebel Ali are mainly business people. We hope for significant reduction in traffic after Metro but let us wait & see.

//நல்ல பதிவு. ஆனால் இன்னும் விபரமாக எழுதி இருக்கலாம் வாடகை குறித்த விவரத்தை//
வருகைக்கு நன்றி குப்பன் யாஹூ
நீங்கள் எப்போது வந்தீர்கள் என்பது தெரியாது. வாடகை மிகவும் அதிகரித்து விட்டதால், இப்போது நிலைமை இன்னும் மோசம். முதலில் இரண்டு அடுக்கு கட்டில் பார்த்திருப்பீர்கள். இப்போது மூன்று அடுக்கு வைத்து தரையில் உள்ள கட்டிலை கற்கள் வைத்து உயர்த்தி, தரையில் பாய் போட்டு ஒருவரும், மூன்று கட்டிலில் மூவருமாய் (சில இடங்களில்) நான்கடுக்காகி விட்ட பரிதாபம். எனில் ஓர் அறையில் எத்தனை ஆட்கள் எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் படும் துயரத்தை உற்ற உறவினர் பார்ததால் செந்நீரை கண்ணீராய் வடிப்பார்கள்.

//நாங்கள் கைத்தொலை பேசிக்கொண்டே எப்படி இருசக்கர வாகனங்களில் ராஜா மாதிரி போய்க்கிட்டு இருக்கோம் தெரியுமா?! :-(//
வருகைக்கு நன்றி தருமி ஐயா.

நம்முடைய பாதுகாப்புக்கு நாமே எதிரியாய் இருக்கிறோம் என்பதை இன்னும் விரிவாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஊழலற்ற கடுமையான சட்டங்கள் தேவை.

துபை காவல்துறை கண்டிப்புதான். சிறிய விபத்தென்றாலும் ஐந்து நிமிடத்துக்குள் வந்து விடுவார்கள். சிறிய ஊர் அதனால்தான் இவ்வாறு முடிகிறதோ என நினைத்தாலும், பக்கத்திலுள்ள இது போன்ற சிறிய ஊர்களில் இந்த நிலைமையைப் பார்க்க முடிவதில்லை.

Unknown said...

//if the new tariffs discourage people to ride in their cars and force them to take public transporation, i welcome it :)// நன்றி சர்வேசன்.
மெட்ரோ வரப்போகிறது. வந்தால் சில மக்கள் மாறுவார்களோ என்னவோ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவன்

//நல்லாதான் இருக்கு இதுக்காக எல்லாம் துபாயை விட்டு போகலாமா?//
குசும்பரே! நான் வெளியூர் ஆளுங்க. இங்கே இல்லை.
போட்டாவில் உள்ளவர்கள் யாரோ, என்னவோ, கும்மிடப் போறாங்கய்யா. வம்புதானே.

Anonymous said...

Move to Tokyo, that's the best place on earth.

Of course, all these problems exist there too!

But there are some workaround solutions available.

படகு said...

சூப்ப..............ர்

Unknown said...

//But there are some workaround solutions available.//
வருகைக்கு நன்றி அனானி நண்பரே.
அந்த solutions எல்லாத்தையும் இங்கே சொன்னீங்கன்னா எல்லோருக்கும் பயன்படும். இல்லையென்றால் என் மெயிலுக்கு அனுப்புங்க.
அதுக்காக டோக்யோ கூப்பிடுறீங்களேங்க.:)

/சூப்ப..............ர்//
முதல் வருகைக்கு நன்றி படகு.
தமிழ் வலையுலகுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.
புகுந்து விளையாடுங்கள்.

ILA (a) இளா said...

நல்ல அலசல். மிகவும் நல்ல பதிவும், நடையும்..

Jazeela said...

பதிவும் மொழிபெயர்ப்பு அருமை. எங்கள் கிப்ரிப்போர்ட்டுக்கு ஒரு நன்றி சேர்த்திருக்கலாம். பரவாயில்லை.

Anonymous said...

துபாய், இந்தியா, சௌதி, மஸ்கட், சிங்கப்பூர்
நாடுகள் பலவாக இருக்கலாம். ஆளும் முறையும், ஆட்சி செலுத்தும் கட்சிகளும் வேறுவேறாக இருக்கலாம். எல்லாவற்றின் செயல்பாடுகளும் மக்களை இன்னலுக்கு ஆளாக்கி செல்வங்களை ஓரிடத்தில் குவிப்பதையே தங்கள் திட்டங்களாக கொண்டுள்ளன. இதில் வேறுபாடு எங்குமில்லை. சட்டங்களை ஒழுங்காக செயல்பாட்டில் வைத்திருப்பது என்பது கூட மேற்சொன்ன நோக்கத்திலிருந்து மாறுபாடுடையதல்ல.
சட்டங்கள், அரசு ஆகியவற்றின் தொடக்கம் பற்றிய தெளிவு இருந்தால் இவைகளை புறிந்துகொள்வது எளிதாக இருக்கும்

தோழமையுடன்
செங்கொடி