Wednesday 21 January 2009

சும்மா சாப்பிடுங்க


ஊருக்கு போயிருந்த போது, நீண்ட நாட்களுக்குப் பின் சில உறவினரைப் பார்த்த போது, பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. அதிலொன்று.

சென்னைக்கு ஹஜ் செல்பவர்களை வழியனுப்ப போனார்கள் என் ஊர்க்காரர்களில் சிலர். சென்னை வரைதான் பேருந்து. அதற்கப்புறம் நடை வண்டிதான். காசும் மிச்சம் ஊரையும் சுற்றிப் பார்த்த மாதிரி. முன்னால் ஆண் சித்தீக் சராய்க்கு வழிகாட்டிப் போக, பின்னால் வந்த பெண்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே.... வெயில் கடுமை. வெகுளி மனிதர்கள். சென்ட்ரல் அருகே

சர்பத் விற்பவர்: வாங்கம்மா வந்து சாப்பிடுங்க. வெயிலுக்கு நல்லது சும்மா சாப்பிடுங்க. சும்மா சாப்பிடுங்கம்மா.
பின்னால் வந்த பெண்கள்: அட இவ்வளவு சொல்றார். சாப்பிடலாமே.
பெண்கள்: ஆளுக்கொரு கிளாஸ் சாப்பிட்டாச்சு. ஆமா. வெயிலுக்கு நல்லாத்தான் இருக்கு.
பெண்கள்: ரொம்ப சந்தோஷங்க. வரோங்க
விற்பவர்: ஏது வறீங்களா? காசு கொடும்மா?
பெண்: காசா? சும்மா சாப்பிடுன்னுதானய்யா சொன்னே.
விற்பவர்: என்னம்மா வெளாடறீங்களா? காசை எடும்மா?
பெண்: ஏங்கோ? தாம்பாட்டுக்கு போறீங்களே. இங்க வந்து பாருங்க. (வீட்டுக்காரரை கூவி அழைக்கிறார்)
அவ்வளவு தூரம் போனவருக்கு மனைவி கூப்பிட்டது சரியாக காதில் விழுந்து, ஓட்டமும் நடையுமாய் திரும்ப வருகிறார்.
ஆண்: என்னாச்சு?
பெண்: கலர் கலக்கி வச்சிகிட்டு சும்மா சாப்பிடுங்க. சும்மா சாப்பிடுங்க ன்னான்.
விற்பவர்: வாயை மூடும்மா. மரியாதையா பேசும்மா.
பெண்: பொறுய்யா? அதான் குடிச்சோம். இப்ப காசு கேக்கறான்.
ஆண்: பெரிய்ய தொந்தரவா போச்சு. ஒங்களையெல்லாம் மதறாஸ்க்கு அளைச்சிட்டு வந்தேனே. உனக்கு கலர் கொடுக்கிற அளவுக்கு அவன் என்ன சொந்தமா? (விற்பவரிடம் பேரம் பேசி, பாதி காசு கொடுக்கிறார்)
விற்பவர்: சாவு கிராக்கி. எங்கேர்ந்து வந்து தொலைச்சீங்கன்னு தெரியிலயே. மிச்சம் காசு கொடுய்யா.
ஆண் மிச்சம் காசையும் கொடுத்து விட்டு, மனைவியை கையைப் பிடித்து அழைத்து போகிறார்.
பெண்: இல்ல. நம்மூரில வெயில் காலத்துல மோர் கொடுக்கிற மாதிரி இங்க கலர் கொடுக்கிறாங்கன்னு நினைச்சிட்டேன்.
ஆண்: அதுக்கு என்னையும் கூப்பிட்டருக்கலாம்ல.

வசதி வாய்ப்புகள் மனிதர்களை மாற்றுகிறதென்னவோ உண்மைதான். அவர்களை இப்போது பார்த்தால் அப்படி நடந்து கொண்டவர்கள் இவர்கள்தானா என வியப்பாக இருக்கிறது.

வரவேற்பை பார்த்துட்டு மற்றதையும் ஒவ்வொன்றாக... :))

Post Comment

9 comments:

பழமைபேசி said...

அஃகஃகா! கிராமத்துக் வெள்ளைக போலிருக்கு..... வரவேற்பு என்ன வரவேற்பு? எடுத்து விடுங்க ஐயா! அந்த வெள்ளைகள விட்டுட்டு வந்து கூதல்ல செத்துகினு இருக்கோம்.... நீங்க வேற?

Unknown said...

//அஃகஃகா! கிராமத்துக் வெள்ளைக போலிருக்கு..... வரவேற்பு என்ன வரவேற்பு? எடுத்து விடுங்க ஐயா! அந்த வெள்ளைகள விட்டுட்டு வந்து கூதல்ல செத்துகினு இருக்கோம்.... நீங்க வேற?//
வருகைக்கு நன்றி பழமைபேசி. அடுத்த ப்ளாட்டில் இத்தனை ஆண்டுகள் வசித்திருந்தும் முகம் தெரியாமல் வாழ்கிறோம். சொந்த ஊர் சகோதரன் விபத்தில் அடிபட்டு கிடக்க யாரென்றே தெரியாமல் நடக்கிறோம். பட்டிக்காட்டானாக வர்ணிக்கப்படும் அந்த வெள்ளை மனிதர்களில்தான் வாழ்க்கையின் உயர்ந்த பண்புகள் இயல்பிலேயே இருந்தது. இந்த தொலைக்காட்சியும் ஊடகங்களும் அவர்களின் வாழ்வு முறையிலும் தேவையற்ற வீண் ஆடம்பரங்களையும் மாற்றங்களையும் கொண்டு வந்து கெடுத்துக் கொண்டிருக்கிறது.

நானானி said...

கிராமத்து வெள்ளந்தித்தனம் ரொம்பவே தெரிகிறது.
//நம்மூர்லே மோர் கொடுப்பது போல
இங்கே கலர் கொடுக்கிறாங்கன்னு நெனச்சிட்டேன்.//
நல்ல நகைச்சுவை!

ALIF AHAMED said...

சும்மா ஒரு பின்னுட்டம் :)

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

Unknown said...

//நல்ல நகைச்சுவை!//
வருகைக்கு நன்றிங்க நானானி.

//சும்மா ஒரு பின்னுட்டம் :)//
நன்றி மின்னுது மின்னல். அதான் சிரிக்கிறீங்களே. சும்மா நகைச்சு வைக்கத்தானே பதிவு.

சிரிப்பானுக்கு நன்றி விக்னேஸ்வரன்.

படகு said...

சும்மா என்றால் சென்னையில் காசா?
நல்லாயிருக்கே...
:)))))))

Unknown said...

//சும்மா என்றால் சென்னையில் காசா?
நல்லாயிருக்கே... :))))))) //
நீங்க எந்த ஊர்? நீங்க மட்டும்தானா? அந்த ஊர்ல எல்லோரும் அப்டித்தானுங்களா? :))

Anonymous said...

இனி சும்மா சாப்பிடகூடாதேங்கிறீங்க.......