Wednesday 12 March 2008

அடி! தொடப்பத்தால!!

சந்நியாசம், இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் இடைத்தரகர் போன்றவை இல்லை, தேவையில்லை என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் முஸ்லீம்கள் மத்தியிலும் இடைத்தரகர்களுக்குப் பஞ்சமில்லை.

தஞ்சாவூரில் இது போன்ற ஒரு முக்கிய இடைத்தரகருக்கு ஒரு வீட்டில் உணவு எற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தது. இத்தகையவர்கள் தங்களுக்கு வால் பிடிக்க ஒரு கும்பலை எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள். அந்த கும்பலுக்கு இவர் ஏதாவது சொல்லும்போது “ஆஹா!” “ஓஹோ!” என்று புகழ வேண்டும் என்பதுதான் வேலை. விருந்துக்கு வந்தவருடன் அந்தக் கும்பலும் வந்திருந்தது.

வீட்டின் உரிமையாளர் வந்தவரை அன்போடு அழைத்து அந்த வீட்டின் கூடத்தில் அமரச் செய்திருந்தார். அங்கே ஒரு கண்ணாடி அலமாரியில் அந்த வீட்டுக்கார அம்மா விலையுயர்ந்த பீங்கான் தட்டு, கண்ணாடிப் பொருட்கள் முதலியவற்றை அழகான கலை நயத்துடன் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனை வருடங்களாக எங்கெங்கு வாங்கி விருப்பமாக சேர்த்து வைத்தார்களோ.

வந்த இடைத்தரகருக்கு அதைப் பார்க்க ஏனோ பிடிக்காமல் போய் விட்டது போலிருக்கிறது. அங்கே மேசை மேல் வைக்கப்பட்டிருந்த பேப்பர் வெயிட்டை (Paperweight) எடுத்து, நேராக அந்த கண்ணாடி அலமாரியின் மீது விட்டெறிந்தார்.

அலமாரியும் அதனுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலையுயர் பொருட்களும் பொல பொலவென்று உடைந்து சிதறியது. இடைத்தரகரோ, 'அங்கே மக்காவில் ஒரு நாய் கஅபா பள்ளியின் மீது சிறுநீர் பெய்யப் போவதைக் கண்டேன். அதைத் துரத்த இங்கிருந்து கல் விட்டேன். கல்லடிபட்டு அந்த நாய் சிறுநீர் பெய்யாமல் ஓடி விட்டது' என்று சொன்னாராம். உடனே கூட வந்த வால்கள் 'ஆஹா!. இங்கிருந்து கொண்டே எத்தகைய அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார் நம் மகான்' என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

வீட்டுக்கார அம்மா ஓடி வந்து பார்த்து, கண்ணீர் விடாத குறைதான். அந்தம்மா உள்ளே போனதும் கணவரை அழைத்து 'எவ்வளவு பெரிய மகானை அழைத்திருக்கிறீர்கள். இவர்களுக்கு என் கையால் நான்தான் உணவு பரிமாறுவேன்' என்று சொல்லி விட்டார்.

முதலில் கூட வால் பிடிக்க வந்திருந்த அனைவருக்கும், தட்டில் பிரியாணியை வைத்து அதன் மேல் அருமையாய் செய்யப்பட்ட அரைக்கோழியும் வேக வைத்த முட்டையும் வைத்து கோழி பிரியாணி பரிமாறப்படுகிறது. முக்கியமான ஆளான தன்னை முதலில் கவனிக்காமல் கூட வந்த அன்னக்கைகள் கவனிக்கப் படுவதிலிருந்தே வீட்டுக்காரம்மாவின் கோபத்தை தரகர் புரிந்து கொண்டு விட்டார். என்றாலும் வெளிக்காட்டி விட்டால் சாப்பாட்டுக்கு அலைபவரைப்போல் ஆகிவிடும் என்று அடக்கமாய் அமர்ந்திருக்கிறார்.

வீட்டுக்காரம்மாவோ 'எல்லோருக்கும் சாப்பாடு வந்து விட்டதா. நன்றாக திருப்தியாக சாப்பிடுங்கள்' என்று சொல்லவும் 'இன்னும் மகானுக்கு சாப்பாடு தரப்படவில்லை' என்று சொல்லப்பட்டது.

வீட்டுக்காரம்மா வேண்டுமென்றே அவருக்கு உணவு கொண்டு வருவதில் தாமதம் செய்கிறார். அதன் பின்னர் ஒரு தட்டில் பிரியாணி வைத்து, பிரியாணி சாப்பாட்டின் மேலே எதுவும் வைக்காமல் எடுத்து வந்து (மகானுக்கு மட்டும் புரியும் வண்ணம், மரியாதைக் குறைவாய்) வைக்கிறார்.

மகானுக்கு கோபம் தலைக்கேறி விடுகிறது. “விருந்துக்கு அழைத்து கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் என்னுடைய சீடர்களுக்கெல்லாம் கொடுத்ததன் பின்னர் எனக்கு உணவளித்ததோடு அல்லாமல், என் சீடர்களுக்கு பிரியாணியும் கோழியும் முட்டையும் வைத்து உணவு பரிமாறி விட்டு, எனக்கோ கோழியும் முட்டையும் கூட வைக்காமல் வெறும் பிரியாணி சோறு மட்டும் வைத்தால்… இதை என்னவென்று சொல்வது” என்று வீட்டுக்காரரிடம் கேட்கிறார்.

வீட்டுக்கார அம்மா பெரிய தொடப்பத்தோடு ஓடி வந்து, “மக்காவில் நாய் ஒடுவதை இங்கிருந்தே பார்த்த உனக்கு, உனக்காக கொடுக்கப்பட்ட பிரியாணிக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட கோழியும் முட்டையும் தெரியாமல் போனது எப்படி? திருட்டு நாய்களே!” என்று திட்டிக் கொண்டே மகானை தொடப்பத்தால் துவம்சம் செய்கிறார்.

(நுனிப்புல் இராமச்சந்தின்உஷா அவர்களின் இடுகை உய்யடா மானிடா! உய்! படித்தேன். அதைப் படித்த பின்னர் தஞ்சாவூர் பகுதியில் நடந்ததாக சொல்லக் கேட்ட ஒன்றை இடுகிறேன்.)

Post Comment

15 comments:

வடுவூர் குமார் said...

அந்த வீட்டுக்காரர் நிலமையை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே??
சொல்லித் தெரியவேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டீர்களா? :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
அருமையான கதை; நன்கு சிரித்தேன். இன்றே அறிந்தேன். இப்படிக் கதைகள் உண்மையோ பொய்யோ ஆனால் நடப்புக் கூத்துக்கள் பற்றிப் புரிய அருமையான உதாரணம்.
ஏன்?? ஊருக்கெல்லாம் வரும் மாதத்துடன்; புதுவருசத்தில் இருந்து நல்லகாலம் பிறக்கும்; இன்றோடு உன்னைப் பிடித்த சனி நீங்கிவிட்டது எனப் பீலா விட்ட சாமியார்; அடுத்த நாள் மாமியார் வீடு சென்று
கம்பி எண்ணப்போவது தெரியாமல் எல்லோருக்கும் தீபாவளி ஆசி தொலைக்காட்சியில் வழங்கியதும்
பார்த்தோம்.
பின்னால் ஒரு கூட்டம் அதுவும் மெத்தப் படித்த கூட்டம்; ஜல்ரா அடித்துக் காதுச் சவ்வைக் கிளிப்பதே
வேதனை.

Anonymous said...

You are looking at things from a neutral perspective. Only very few islamic bloggers are willing to portray the negative sides of their religion also. Congrats for being one among them.

anony munna

நானானி said...

சுல்தான் பாய்!
நல்ல நகைச்சுவை கதை....இல்லையில்லை நாட்டு நடப்பும், அரசியல் நடப்பும் இப்படித்தானிருக்கிறது. மக்கள் எப்போது தொடப்பத்தை தூக்கப்போகிறார்களோ தெரியலை.

குசும்பன் said...

:)) இதுபோல் நானும் படித்து இருக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

சூப்பர் :-))))

Unknown said...

நன்றி வடுவூர் குமார்.
கதை சொன்னவர் அதைச் சொல்லவுமில்லை. நான் கேட்கவுமில்லை.

நன்றி யோகன் பாரிஸ்
//பின்னால் ஒரு கூட்டம் அதுவும் மெத்தப் படித்த கூட்டம்; ஜல்ரா அடித்துக் காதுச் சவ்வைக் கிளிப்பதே
வேதனை.//
சரியான பாய்ண்ட்டே இதுதான்.

நன்றி அனானி முன்னா
இது முஸ்லீம்களின் நெகடிவ் சைட் - இஸ்லாம் சொன்ன படி மாறணும்.

நன்றி நானானி.
//மக்கள் எப்போது தொடப்பத்தை தூக்கப்போகிறார்களோ தெரியலை.//
பெண்களே தைரியமாய் துவங்கி விட்டார்கள்.
இனி விடிவு காலம்தான்.

நன்றி குசும்பன்.
நீங்க படிச்சீங்களா? எங்கே?

நன்றி இராமச்சந்திரன் உஷா.
சூப்பர் சிரிப்பா?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்..
(நீங்கள் என்னுடைய வாப்பாவின் வயதை ஒத்து இருப்பதால், என்னால் உங்களை சகோதரர் என்று அழைப்பது மரியாதை இல்லாமல் அழைப்பது போல் உள்ளது)... :)

உங்கள் பதிவை பற்றி,
இது போன்ற 'மகான்'கள் இன்னுமா நம் சமுதாயத்தில் இருக்கிறார்கள்? நல்ல வேலை அந்த பெண்மணிக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டினான், அல்ஹம்துலில்லாஹ்...
எனக்கு தெரிந்த வரை, இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் முன்பு போல 'பாத்தியா' ஒதுவதில்லை, மௌல்து கூட நிறுத்தி விட்டார்கள். இப்போது தலையாய பிரச்சனை ஆடம்பர திருமணம் மட்டுமே..

உங்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் பதிவுகளை அதிகமளவு முஸ்லீம் அல்லாத சகோதர, சகோதரிகள் படிப்பதால், இது போன்ற, இஸ்லாத்தை பற்றிய தெளிவு தரும் அதிக பதிப்புகளை நிங்கள் வெளியடலாம்.. இஸ்லாத்தை பற்றிய தவறான கருத்துக்களை மறு பரிசீலனை செய்ய அச்சகோதர, சகோதரிகளுக்கு உதவியாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்..

Unknown said...

அலைக்கும் வஸ்ஸலாம் ரஹ்மத்துல்லாஹ்.
நீங்கள் இங்லீஸ் பிரியாணி போடறவங்களா. வாங்கம்மா வாங்க. நாங்க மகானெல்லாம் இல்லை.

என் மகள் வயதென்கிறீர்கள். நான் உங்களை அம்மா என்கிறேன்.
உங்கள் தந்தை வயதெனினும் இஸ்லாத்தில் நாம் சகோதர சகோதரிதானே.
சகோதரரே என அழைப்பது மரியாதையானதுதான் சகோதரி.

லொடுக்கு said...

நெத்தியடி. :)

Anonymous said...

நீங்க சொல்வது சரி தான் சகோதரரே..

இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களை களைய மகானாக இருக்க வேண்டியதில்லை. நல்ல முமினாக இருந்தாலே போதும்.. :)

எது எப்படியோ, அது உங்கள் விருப்பம் :)

Unknown said...

//நெத்தியடி. :)//
நன்றி லொடுக்கு
பெண்கள் சிறப்பாக விழித்து கொண்டார்கள்.

//எது எப்படியோ, அது உங்கள் விருப்பம் :)//

நன்றி the victorious - கோபித்த மாதிரி தெரிகிறதே.
லொடுக்கு சொன்ன 'நெத்தியடி'- கதையில வந்த தஞ்சாவூரம்மா செய்ததற்கு - எனக்கில்லை.

நீங்கள் இங்லீஸ் பிரியாணி போடறதால் என்னை அடிச்சிராதீங்க - நான் மஹானில்லை என்று கிண்டலாகச் சொன்னேன். :))

என் மகள் வயதுள்ளவர் - இதுக்கெல்லாம் கோபிச்சா எப்படி? :))))

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரரே..

:) கொஞ்சம் கோபப்பட்டது உண்மை தான்.. :D.. அதுக்காக அடி,உதை னு இப்படி சொல்லிடிங்க ... :(

MK said...

நகைச்சுவையா இந்த விஷயத்த நீங்க சொல்லி இருந்தாலும்... இந்த பதிவினூடே இழையோடியிருந்த உங்க ஆதங்கம் ரொம்பவே சிந்திக்க வச்சுது... மக்கள் திருந்த.. எல்லாம் வல்ல இறைவன் தான் அருள் புரியணும்...!

Anonymous said...

கதை அருமை, ரசித்தேன், சிரித்தேன்.
நன்றி..